Monday, 5 June 2017

ஸ்டாலின்

கசிந்தொழுகும் ஆற்றாமை

இறங்கி
கை நனைக்கவும் கால் நனைக்கவும் 
பயனற்ற எங்கள் ஊர் ஆறு 
இறந்தவர்களைப் புதைக்கவும் எரிக்கவும் 
மடி தந்து தன் கழிவிரக்கம் தணிக்கிறது.
கங்கைக்கும் காசிக்கும் போய்வர வக்கற்ற நாங்கள் 
நேற்று எரித்த சடலத்தின் சாம்பலையும்
கொஞ்சம் எலும்புகளையும்
சிறு கலயத்தில் சுமந்து 
ஆற்றிலிருந்து கிணறுகள் நோக்கி நடக்கிறோம்.
நாணல்களற்ற ஆற்றின் கரைகளில் 
மண்டிக்கிடக்கும் கன்றுகள் தீண்டா 
பார்த்தீனியத்தின் அடர் பசுமை அத்தனை 
குளிர்ச்சியாயில்லை.
நிசிகளில் மூடிய நிலைக்கதவுகளை
மூர்க்கமுடன் மோதித் திரும்புகிறது
ஆற்றின் ஓலமென வறண்ட காற்று.
நேற்றைய பயணத்தில் உங்கள் விழிகளில் விழுந்த
சிறு மணல் துகளொன்று
கசியவிட்டுக்கொண்டிருப்பது
யாவராலும் கைவிடப்பட்ட
ஆற்றின் ஆற்றாமை என்றும் சொல்லலாம்தானே.

-ஸ்டாலின்

No comments:

Post a Comment