Tuesday, 16 October 2018

கற்றதும் பெற்றதும்-50

கற்றதும் பெற்றதும்-50
*மணி

நீங்க ஆத்திகரா நாத்திகரா?
ஜெயகாந்தன்: இது எத்தனை பழைய கேள்வி? நான் நாத்திகன் ஆனால் இந்து. நான் இறைநம்பிக்கை அற்றவன் ஆனால் ஆன்மீகவாதி என்றார்.

#நான் இந்துவல்ல! நீங்கள்..?
-தொ.பரமசிவன்

தலைப்பை பார்த்ததும் ஏதோ விவகாரமானதனு தோனும்.ஆனால் உள்ளே இருக்கும் வரிக்கு வரி அத்தனையும் ஆய்வு நோக்கில் எழுதியிருப்பார்.இருபதே பக்கமுள்ள நூல் தான்.ஆனால் அதனை உள்வாங்க ஒரு மணி நேரமாவது ஆகும்.அப்போதைய காலத்தில் தமிழகத்தில் அதிக அதிர்வலையை உருவாக்கிய நூல். பண்பாட்டின் அடிப்படைகளை புரிந்து கொள்ள இந்நூல் உதவும். இந்நூலில் உள்ள பதிவுகள் அனைத்தும் தொ.ப விடம் கேள்வியாக கேட்கப்பட்டு பதிலை நிமிர் வெளியிட்டுள்ளது. ஒரு சில கேள்வியின் சுருக்கம்

#இந்து என்ற சொல்

இந்து என்ற சொல் எந்த வேதத்திலும்,இலக்கியத்திலும் இல்லை.18ம் நூற்றாண்டில் ஆராயவந்த ஐரோப்பியர் பயன்படுத்தியது.
சர்.வில்லியம் ஜோன்ஸ் உள்நாட்டு நீதிநெறியை தொகுக்கும்போது HINDU LAW எனப் பெயரிட்டார்.சிந்துநதிக்கு இப்புறம் வாழ்ந்தவர்களை குறித்தனர். வட இலக்கியத்தில் தென்னகத்தில் வாழ்ந்த மக்களை குறிக்க "திராவிட" எனும் சொல்லை 13ம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர்.

#சைவர், வைணவர்:

சைவர்-சிவனை கடவுளாக ஏற்றவர்.கருவறைக்குள் நுழைபவர் பிராமணர் அல்லர்.சிவபிராமணர் ஆவார்.

வைணவர்-கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்பவர்கள்.வைணவ பிராமனர். அவர்களில் வைகானசம்,
பாஞ்சராத்திரம் என இருவகை உண்டு.

*ஸ்மார்த்தர்-ஸ்மிருதி என்பது வேதத்தின் இன்னொரு பெயர். பார்ப்பனரல்லாதோரின் கண்ணுக்கும் காதுக்கும் தெரியவிடாமல் மறைத்துக்கொள்வதால் வடமொழி வேதத்துக்கு "மறை" என்று பெயர் வந்தது.எனவேதான் பார்ப்பனர் மட்டும் அதை மனப்பாடம் செய்தனர்.இந்த வேதத்தை மட்டும் கடவுள் போல் வணங்குவர். கோயிலுக்குள் செல்வார்கள். கருவறைக்குள் செல்லக்கூடாது.

*கோவில் பார்ப்பனர் கருவறையில் வடமொழியிலமைந்த அர்ச்சனை மட்டும் சொல்ல வேண்டும்.

*கோவில் பார்ப்பனர், வேதபார்ப்பனர் வேறு.கோவில் பார்ப்பனரில் சைவர்,வைணவர் உண்டு.இவர்கள் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார்கள் எனும் வழக்கம்.

#சங்கராச்சாரியார்

இவர் ஒரு ஸ்மார்த்தர் அல்லது சங்கராச்சாரியார்களை பொறுத்தமட்டில் கடவுள்.கிடையாது.தானே கடவுள். "அகம் பிரம்மாஸ்மி,தத்வம் அஸி" போல.ஆத்திகர் எனகாட்டி திருநீறு பூசுவர் ஆனால் அதை எடுத்து அடுத்தவர்க்கு கொடுக்க மாட்டார்கள்.கையெழுத்து போடுவதும் நாராயண ஸ்மிருதி என்றுதான்.

காஞ்சி காமாட்சி கோவில் அவர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும்.ஆனால் பூஜை செய்ய மாட்டார்கள்.1893ல் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் மடத்துக்கு சொந்தமானது. 17ம் நூற்றாண்டில் அரசியல் அமைதியின்மை காரணமாக கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு வருகிறார்கள்.பின் காமாட்சி அம்மன் கோவிலை கைவசமானதில் காமாட்சி கோவில் காமகோட்டம், காமகோடி மடம் ஆனது.

மடாதிபதிகள் ஒன்று தெலுங்கு அல்லது கன்னடம் பேசுகிறவராக இருப்பார்கள்.

#அர்ச்சனை

அர்ச்சனை என்பது வடசொல். அதனை போற்றிப் பாடல் என்று சொல்ல வேண்டும். பரவுதல் என்பதுதான் அர்ச்சனை. போற்றி என்று சொல் திருவாசகத்தில் ஈசனடி போற்றி எந்தையடி போற்றி என்று வருகிறது. அர்ச்சனை என்பது பாட்டேயாகும். ஆழ்வார் பாசுரங்கள்,தேவாரம் எல்லாம் பாடல்கள்தான்.

#தலித்துகளை எப்படிப் பார்த்தன

சைவத்திலே நந்தனார் சோதியாகத்தான் சிதம்பரம் கோயிலுக்குள் போக முடிந்தது. வைணவத்தில் திருப்பாணாழ்வாரை தோளிலே தூக்கிக் கொண்டு ஒருவர் திருவரங்கம் கோவிலுக்குள் செல்கிறார்.வைணவ மதத்தில் மட்டும் தாழ்த்தப்பட்டோருக்கு தீட்சை கொடுக்கும் பழக்கம் உண்டு.தீட்சை பெற்றவுடன் சாதி கேட்ககூடாது.இது சைவத்தில் கிடையாது.ஆனால் இன்று இந்து என்ற போர்வைக்குள் தலித்துகளை தள்ளி வைத்துள்ளனர்.ராமனுசரின் சாதி எதிர்ப்புக்குரல் தோற்றுப்போய்விட்டது.

கோவிலிலும் இதை காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்துக்கு வெளியேதான் மதுரை வீரன் கோயில் உள்ளது.அதனை வணங்குவோர் வெளியே நிறுத்தப்பட்டனர்.

#வருணாசிரம தருமம் இருக்கிறதா

வர்ணாசிரம தர்மம் என்பது தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்ததில்லை. வர்ணாசிரம தர்மப்படி பிராமணர்களுக்கு அடுத்தபடி வைசியர் எனும் வணிக சாதியார் இருக்கவேண்டும் ஆனால் இல்லை. அடுத்து சத்திரியர் என்பவர்  இருக்கவேண்டும். அவர்களும் இல்லை. அடுத்ததாக வேளாளர் என்று சொல்லக்கூடிய சைவ மடங்கள் வைத்திருப்பவர் வர்ணாஸ்ரம கணக்குப்படி சூத்திரர்கள். ஆனால் நடைமுறையில் பிராமணர்கள் அடுத்த உயர்ந்த நிலையில் அவர்கள் தான் உள்ளனர்.

இங்கு சாதி தான் இருந்தது. இருக்கிறது. வருணாசிரம தர்மத்தை பேணவில்லை

#கோயில் பாழடைந்து போய்விட்டன

பார்ப்பனர் கையில் இருந்த கோயில்கள் அனைத்தும் பெரிய சொத்துடமை நிறுவனங்களாக இருந்தன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் கோயில் சுடலை கோயில், இசக்கி கோயில், காத்தவராயன் கோவில் இன்றும் உயிரோடு இருக்கிறது. பிராமணர்கள் புதிய அதிகார மையத்தை தேடி அந்த சாதாரண கோயில்களை கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கி புறப்பட்டனர்.

நூற்றுக்கு 70 பேராக இருக்கிற தலித் மக்கள் மதம் மாறி போய் விடவும் கூடாது. இருக்கிற இடத்திலே இந்து என்ற பெயரோடு தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பார்ப்பனர்களின் ஆன்மீக அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய நெறிகளை கண்டு பிடிக்க கூடாது. ஏதேனும் ஒரு காரணம் பற்றி தங்களுடைய ஆன்மீக அதிகாரத்தை மறைமுகமான அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர் இஸ்லாமியர் அல்லாத இந்து என்கிற அரசியல் சட்டம் சொல்கிற வார்த்தை ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனை புரிந்து கொண்டால் இந்து என்னும் பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்

அவரவர்கள் அவரவர் தெய்வங்களை நிம்மதியாக வணங்கிவிட்டுப்போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும் மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment