கற்பதுவே பகிர்வதுவே-24
*மணி
#Reading_marathon_2021
RM314
25/100
Pages 788
#இன்றைய இந்தியா
-ரஜினி பாமிதத்
எந்த நொடியில் கலகம் தோன்றும் என்கிற அச்சம் தோன்றுகிறதோ-அது வெறும் கலகமாக இருக்காது, தேசிய இனமெங்கும் பரவியுள்ள உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கும்.அந்த நொடியே நம் சாம்ராஜ்ஜியத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஆசையும் ஒரு முடிவு கட்டாயம் இருப்பது போல் முடிவு பெறும்
-ஜெ ஆர்.ஸீலி(1883)
போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களும், வரலாற்று ஆய்வியல் மாணவர்களுக்கும் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் தான் ரஜினி பாமிதத்.பிபின் சந்திரா, டி.டி கோஸாம்பி,இர்ஃபான் ஹாபீப், ரொமிலா தர்பார்,ரமேஷ் சந்திர மஜூம்தார், ராமச்சந்திர குஹா,என பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் நினைவிலிருப்பர்.சுதந்திரம் என்பது காந்தி தலைமையிலான போராட்டம் மட்டுமே சுதந்திரம் பெற்று தந்தது என எண்ணாமல் அசோக சக்கரத்தின் நான்காவது சிங்கம் போல நம் கண்ணுக்கு தெரியாத கவனிக்கப்படாத காரணிகளும் காரணமாக உள்ளன என்பதை இது போன்ற வரலாற்று நூல்களை படிக்கும் போது அறியலாம்.
#இன்றைய இந்தியா
1936-39ம் ஆண்டிலேயே இப்புத்தகத்தின் கைப்பிரதி எழுதப்பட்டு 1940ல் ஆங்கிலத்தில் இந்தியா டுடே என வெளியானது.முதல் உலகப்போரின் காலகட்டத்திலேயே 1919-22 வரை நடைபெற்ற போராட்டங்கள இந்தியாவை உலுக்கின.இரண்டாம் உலகப்போர் முடிவில் ஐநா நாடுகளின் உரிமையைப் பற்றி பேசியது.இப்போது போல் உலக வங்கி கடன் எல்லாம் அப்போது கிடையாது.அந்த நாட்டில் உற்பத்தியாகும் வளங்களை வைத்தே நிர்வாகம் செய்து வந்தனர். போருக்குப் பின் பிரிட்டிஷாரின் மார்க்கெட் நிலவரம் தள்ளாடியது. பெருகி வரும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததாக கூறபட்டது ஆனால் அதன் பின் உள்ள காரணிகள் பற்றி விரிவாய் ஆய்வில் சொல்லியுள்ளார்.
இந்தியாவின் செல்வம்..அதனை சுரண்டி இங்கிலாந்து வளமையானது எவ்வாறு,இந்தியாவின் கிராமப்புறத்தில் நிலவிய வறுமையும் அதற்கான காரணத்தையும் விளக்குகிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில் இந்தியாவின் தொழில் சிதைவு எவ்வாறு நிகழ்ந்தது.. உதாரணத்துக்கு இந்தியாவின் பருத்தி,பட்டு ஆடைகள் இங்கிலாந்தின் ஆடைகளை காட்டிலும் லாபகரமாய் விற்கப்பட்டது.பல வரிகள் விதித்து இங்கிலாந்து தொழில்கள் இந்தியாவை பலியிட்டே உருவாக்கப்பட்டன.
இந்தியாவை தொழில் மயமாகுதலில் உள்ள பிரச்சனையும் காரணங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.தொழில் புரட்சியை நவீனபடுத்தாமல் விட்டது பின்னடவிற்கு காரணம்.இதற்கு அடுத்து முக்கியமான ஒன்று விவசாய பிரச்சனை. 1926ல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷன் 1928ல் 800 பக்க அறிக்கை அளித்தது. இன்றைய விவசாயிகளின் போராட்டத்தைப் போல அப்போதும் அரசு கண்டுகொள்ளாமல் விட்டது. விவசாயத்தை சார்ந்தோர் எண்ணிக்கை அதிகம் இருந்ததும், அப்போதைய காலகட்டத்தில் நில ஏகபோகம், அதில் மாற்றம் கொண்டு வந்தது, உழவர்களின் சுமையை அதிகப்படுத்தியது.இதனை சைமன் கமிஷன் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாய் விவசாயிகளின் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அது புரட்சியை நோக்கித் தள்ளியது. 1936ல் அனைத்திந்திய உழவர் மன்றம் உதயமானது.1938 மாநாட்டில் 5,50,000 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.போராட்டத்திலும் ஈடுபட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் இதன் வளர்ச்சி கூடியது. ஆந்திராவில் ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை பயிர் நிலமாக்கியது, அணைக்கட்டு கட்டியது என அதிகம் பேசப்படாத புரட்சிகளை செய்துள்ளனர். 1945ல் 8,29,686 உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இப்படியாக பிரிட்டிசார் வெளியேறுவதற்கு விவசாயிகளும் போராட்டங்களும் முக்கிய பங்காற்றி உள்ளன.
இந்தியாவில் தேசிய இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கூறுகிறது.தேசிய போராட்டத்தின் முதல் அலை 1905-1910 வரை உள்ள காலகட்டத்தில் கிளர்ச்சிக்கான ஆரம்ப புள்ளி வைக்கப்பட்டது. இரண்டாவது அலை 1919-1922 வரை. முதல் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, கிலாபாத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், ஆகியவை ஏற்பட்டது. அஹிம்சையா வன்முறையா என்பது பிரச்சனையல்ல.. மக்கள் இயக்கத்திற்கு பகையான வர்க்க நலன் பற்றிய பிரச்சனையால் 1922 தேசிய கிளர்ச்சி சிதைந்ததாக தெரிவிக்கிறார்.
மூன்றாவது பேரலை 1930-35 வரை. காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி கருத்து வேறுபாட்டினால் சுயராஜ்ய கட்சி புதிய அலைகளை ஏற்படுத்தியது. உப்பு சத்தியாகிரகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்பின் தொழிலாளர் இயக்க வளர்ச்சி, அதன் அமைப்புகள் உருவாக்கிய போராட்டங்கள்.. தொடர்ந்து இந்தியா முழுவதும் தொழிலாளர் இயக்க தலைவர்கள் டாங்கே,கோஷ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு மீரட் எனும் நகரில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. 1933ல் தண்டனைகளும் வழங்கப்பட்டன.
1939ல் அரசியல் கண்டன வேலை நிறுத்தம் செய்வதாய் அறிவித்து 90,000 தொழிலாளர்கள் முன்னேறி தாக்கவும் செய்தனர்.பல ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னோடி இதுதான் என்கின்றனர்.தொடர்ந்து 1940ல் 3,50,000 வேலை நிறுத்தம் செய்தனர்.காந்தியின் கொள்கையை ஏற்காதவர்கள் எனக்கூறி காங்கிரசிலிருந்து இவர்களை வெளியேற்றினர்.போர் நடைபெற்ற காரணத்தினால் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் பின்வாங்கும் படி ஆகியது.
மன்னர்கள், சுதேச சமஸ்தானங்கள, வகுப்பு வாத பிரிவு, பிரிவினைவாதம், போன்றவை அரசுக்கு தலைவலியாய் அமைந்தன.1935ம் ஆண்டு அரசியல் திட்டமும், அதைத் தொடர்ந்து மாகாண ஆட்சியில் பங்கெடுத்தலும் இந்தியர்கள் அடுத்த நிலைக்குச் சென்றனர்.1945ல் இந்தியாவுக்கு வந்த தூதுக்குழு விபரங்களும் நடைபெற்ற சம்பவங்களும் சொல்லப்பட்டுள்ளன. எதிர்கால இந்தியா குறித்த சித்திரமும் சொல்லப்பட்டுள்ளது.
#ரசித்தது
*இந்தியாவைப் பற்றி மிக மலைப்பூட்டும் உண்மை அதன் மண் வளமுடையது மக்கள் ஏழைகள்.ஏழை நாடல்ல ஏழைகள் வாழும் நாடு.
*ரயில் பாதை அமைத்ததில் பிரிட்டிஷ் கடன் சுமை பெருகியது.ஒரு மைலுக்கு 16,000டாலர் வரை.1900 வரை 22.6 கோடி செலவிடப்பட்டது. லாபம் கிடைக்கவில்லை.
*1874-79 வரை இந்திய இறக்குமதி82%. அதுவே 1909-14 63% ஆக வீழ்ந்தது.
*காங்கிரஸ் வீழ்ச்சி நோக்கி தடுமாறிக் கொண்டிருக்கிறது.நான் இந்தியாவில் இருக்கும் போதே அது அமைதியாக மரணம் அடைவதற்கு உதவ வேண்டும் என்றார் கர்சன் பிரபு.
*நாம் நம் படகுகளை எரித்துவிட்டோம்.திரும்பி போக முடியாது.-நேரு காங்கிரஸ் மாநாட்டில்
இந்தியா என்றவுடன் காந்திய போராட்டம், வழக்கமான கருத்துகளை சொல்லி 1947க்கு வராமல், காந்தியும் காங்கிரஸ் மட்டுமே விடுதலைக்கு காரணமல்ல, அதற்கு முன்நடைபெற்ற சமூக பொருளாதார போராட்டங்களும், பல்வேறு தொழில் சங்க, விவசாயிகளின் போராட்டங்களும் காரணமாக இருக்கின்றன என்பது தெரிகிறது.பொருளாதாரச் சுமையும் ஆங்கிலேயர்கள் செல்ல காரணமாய் சொல்கிறது.இது போன்ற மறைக்கப்பட்ட வரலாறுகளை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் இன்னொரு பரிணாமத்தை அறிய முடிகிறது. சுதந்திர தினத்துக்கு உரையாற்றும் போது ஒத்துழையாமை,உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மட்டும் சொல்லாமல் விவசாயம், தொழில் துறை போராட்டம் குறித்தும் பேசுவோம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment