Sunday, 19 April 2026

சிறுமி


அந்தச் சிறுமி இதற்குமுன் ரயிலில் வந்ததே இல்லையென்பதால், ரயில் டிக்கெட்டை இறுக்கமாகப் பிடித்திருந்தாள். விலைமதிப்பற்ற அந்த டிக்கெட்டைத் தருவதற்குத் தயங்கினாள்.

"நானே இத வச்சுக்கலாமா?" என அச்சிறுமி டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டாள்.

"இல்ல, முடியாது" என்று சொல்லிக்கொண்டே டிக்கெட்டை அவளிடமிருந்து அவர் பறித்துக்கொண்டார்.

டிக்கெட்டுகளால் நிரம்பியிருந்த அவருடைய பெட்டியைக் காண்பித்து, "இதெல்லாம் உங்க டிக்கெட்டா?" என்றாள்.

"இல்ல... ரயில்வே ஸ்டேஷனுக்குச் சொந்தமானது" என்றார்.

அந்தப் பெட்டியை பேராசையுடன் உற்றுப்பார்த்தபடி தொடர்ந்து சொன்னாள், "நான் பெரியவள் ஆனதும், ரயில் டிக்கெட் விக்கப்போறேன்..."

டிக்கெட் பரிசோதகர் முதல்முறையாக அவள்மேல் ஒரு கணம் பார்வையை பதித்தார். " என் சின்னப்பையனும் ஸ்டேஷன்ல வேலை செய்யதான் ஆசப்படுறான். அதனால நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து வேலை செய்யலாம்" எனச்சொல்லி மெதுவாகச் சிரித்தார்.

அச்சிறுமி ஒருபக்கமாக சாய்ந்து அவரைப் பார்த்து, "ஹூம்... நான் இப்ப ஸ்கூலுக்குப் போய்ட்டு இருக்கிறதால பிசியா இருக்கேன். இருந்தாலும் நீங்க சொன்னதப்பத்தி யோசிக்கிறேன்" எனக்கூறிவிட்டு, அவளுடைய அம்மா தனக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு, "நான் ஒரு டிக்கெட் விக்குறவரா ஆகப்போறேன்" என கத்திக்கொண்டே ஓடினாள்.

- 'டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி' புத்தகத்திலிருந்து...

அலைவுகள் - இதுதான் குழந்தமையின் உயிரியக்கம். அதுவா இதுவா என்ற தேர்ந்தெடுப்பில் நிலைகொள்ளா நிலை. மனித சாராம்சத்தை சந்திக்கும் ஒவ்வொரு குழந்தையும் தான் அதுவாகவே ஆகிப்போய்விட வேண்டுமென எண்ணத்தை வளர்க்கிறது. பூமியிலுள்ள விறுவிறுப்புகள் எல்லாம் குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை. உண்மையில் சொல்லப்போனால் 'தான் எதுவாக ஆகவேண்டும் என்ற இரகசியத்தை' ஒரு குழந்தைக்கு எது திறந்தளிக்கிறதோ அதுவே காலக்கல்வி. உலகில் எல்லா நல்லவைகளையும் அனுபவப்படுத்த ஒரு குழந்தைக்கு முழு உரிமையுள்ளது.

No comments:

Post a Comment