Thursday, 3 May 2018

மகுடேசுவரன்

என்னைப் பண்படுத்திய புத்தகங்கள் பல இருக்கின்றன. பத்தாம் அகவையிலேயே நூறு பக்கங்களையுடைய கதைப்புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் தொற்றியது. அன்று எம்மூர் நூலகத்திலும் உறவினர் அடுக்குகளிலும் எனக்குப் படிக்கக் கிடைத்த புத்தகங்களே என்னை மாற்றின. ஆக்கின. என் முதல் பத்தாண்டுப் படிப்பில் என்னைப் பெரிதும் ஈர்த்தவை இந்நூல்கள். படிப்பில் இனி தொடர்ந்து ஈடுபட இருக்கின்றேன் என்னும் உறுதியேற்கும் இளையவர்களுக்கு  இப்பட்டியல் பயன்படும்.

1. வாழ்க்கையில் வெற்றி - அப்துற்றகீம் - தன்முன்னேற்ற நூல்களில் இது மிகப் பழைமையான நூல். தன்முன்னேற்ற நூல்தானே என்று எளிமையாய்ப் புறந்தள்ள இயலாது. வரலாறு படைத்தவர்களுக்கு நேர்ந்த  நூற்றுக்கணக்கான நிகழ்வுகளைச் சொல்லிச் செல்வது இந்நூலின் சிறப்பு.

2. மலரும் மாலையும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - மரபுச் செய்யுள்களில் உங்களுக்கு ஈடுபாடு தோன்றவேண்டுமானால் இந்நூலைப் படியுங்கள். மரபுச் செய்யுள்களில் ஈடுபட்டால்தான் தமிழின் உயர்வும் இனிமையும் விளங்கும். கவிதைத் தொகுதிகளில் மரபுக் கவிதைத்தொகுதி எப்படியிருக்கும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். 

3. சிறுகதை எழுதுவது எப்படி ? - சுஜாதா - சுஜாதாவின் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு இஃது. தலைப்பில் உள்ள ஈர்ப்பும் புதிரும் புத்தகமெங்கும் பரவியிருக்கும். ஓர் எழுத்தாளரின் எல்லாக் கதைகளையும் தொகுத்துப் போட்டுவிடுவதால் இத்தகைய தனிப்பண்புடைய தொகுப்புகள் மறுவெளியீடு பெறுவதில்லை.

4. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன் - நான் படித்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு இஃது. இத்தொகுப்பின் முதற்கதை ‘புலிக்கலைஞன்’. முந்நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்நூல் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று கொள்ளத்தக்கது. மறுவெளியீடு இருக்கிறதா என்று தெரியவில்லை.

5. வந்தார்கள் வென்றார்கள் - மதன் - புனைவுகளில் இல்லாத பெருஞ்சுவை வரலாற்றில் உண்டு. அங்கே சொல்லப்படும் ஒவ்வொன்றும் உண்மையாய் வாழ்ந்தவர்களைப் பற்றியது. அன்றொருநாள் நடந்தது. வரலாற்றைப் படிக்கக் கற்றுவிட்டால் வேறெதையும் நாடமாட்டீர்கள். ஓர் இதழாளர் எழுதினால் எவ்வாறு களைப்பூட்டாமல் எழுதிச் செல்வார் என்பதற்கு இந்நூல் சான்று.

6. காதல் படிக்கட்டுகள் - விகடன் வெளியீடு - அன்றைய புகழ்மக்கள் தத்தம் காதல் நினைவுகளைச் சொல்கின்றார்கள். ‘நமக்கந்தக் காதல் வாய்க்கவில்லையே...’ என்று பதைபதைக்கச் செய்யும் தன்பாடுகள் கொண்ட நூல். உதவி இயக்குநராக இருந்த சுந்தர்.சியிடம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் தம் காதலைச் சொல்லி “ஒரு குக்கரும் மண்ணெண்ணெய் ஸ்டவ்வும் வாங்கித்தா... எங்கேயாவது போய்ப் பிழைச்சுக்கலாம்...” என்று முறையிட, அதை வாங்கித்தரும் நிலையில்கூட தான் அன்றிருக்கவில்லை என்று கூறியிருப்பார்.

7. சுட்டுவிரல் - அப்துல் ரகுமான் - உரைநடைக் கவிதைகள் மிக்கிருக்கும் ஒருநூல். மொழியைக் கச்சிதமாகப் பயன்படுத்தி எண்ணங்களைத் தூண்டும் உரைக்கவிதைகள்.

8. அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - ஓர் எழுத்து எத்தகைய படிப்பின்பத்தைத் தரும் என்பதை அறிய இதுவே கைவிளக்கு. இது மதக்கருத்துகள்  மிக்கிருக்கும் நூலோ என்று தயங்கவேண்டியதில்லை. பெயர்தான் அவ்வாறிருக்கின்றதே தவிர, நூலெங்கும் கண்ணதாசனின் நுண்மாண்புலமே இருக்கும். வாழ்க்கைக் கைவிளக்காகும் நன்னூல்.

9. நல்ல தமிழில் எழுதுவது எப்படி ? - அ.கி. பரந்தாமனார் - தமிழில் எழுதுவதற்கும் தமிழை அடிப்படையிலிருந்து அறிவதற்கும் கையில் வைத்திருக்க வேண்டிய நூல் இஃதே. இதைப் படிக்காமல் நீங்கள் எழுதிக்கொண்டிருப்பீர்கள் எனில் கட்டுப்பாட்டுக் கருவிகளைத் தெரிந்துகொள்ளாமல் வண்டியோட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

10. எல்லாம் தெரிந்த நூல்களாகவே இருக்கின்றனவே.... யாருக்கும் தெரியாத நூல் ஒன்றைச் சொல்லுங்களேன் என்கிறீர்களா ? சொல்கிறேன். மதுராந்தகம் ராஜாராம் என்னும் தெலுங்கு எழுத்தாளர். அவருடைய தெலுங்குச் சிறுகதைகளின் தமிழ்மொழிபெயர்ப்பைச் சாகித்திய அகாதமி வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் கனமான தொகுப்புத்தான். மொழிபெயர்ப்பின் பிறகும் வெண்ணெய்யில் வழுக்குவது போன்ற நடை. படித்து மயங்கிவிட்டேன். அவ்வாறு எழுத வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

- கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment