கற்றதும் பெற்றதும்-56
*மணி
சில வாசகர்கள் சில கவிதைகளைப் புரியவில்லை என்று சொல்கிறார்கள்.தங்களுக்கு புரியாமல் போவதில்கூட அவர்களுக்கு வருத்தமில்லை.இது
யாருக்கோ புரிந்துவிடுகிறதே என்பதை நினைத்துதான் வருத்தப்படுகிறார்கள்.
-சுந்தர ராமசாமி
#சுந்தர ராமசாமி கவிதைகள்
காலம் நேற்றைய புதுமைகளை இன்று தக்ளுபடி செய்துகொண்டிருக்கிறது.இதை எதிர்கொள்ள மொழியை நவீனப்படுத்தும் அவசியத்தை கூறுகிறார் சுகுமாரன்.இதை சுந்தரராமசாமி முழுமையான புதிய நடையில் மொழியை கவிதையில் எடுத்துச்சென்றார்."தன்னை அழிக்க யாருண்டு/எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்/ என தன் எழுத்து பற்றிய கவிதையில் கூறுகிறார் சு.ரா.
#தேடல்
இக்கவிதையில் தேடலில் ஈடுபடும் மனதை விளக்கியிருப்பார்.
/தேடிப்பார்த்தும்
அகப்படவில்லை
கும்பல் கூடித்துக்கம்
கேட்டது
தேடிய பொருளின்
பெயர் கேட்டு நின்றது
தேடிய பொருளின் பெயர் அறியேன்
பெயரற்ற பொருளை தேடிய எனக்குப் பட்டம் கிடைத்தது
பைத்தியம் என்று/
தேடலின் நுணுக்கத்தை எழுதியிருப்பார்.பொதுவாய் பெயருள்ள பொருளை தேடுவது வேறு.பெயர் தெரியாத ஏதோ ஒன்றை தேடும்போது மெய்ஞானம் கிடைக்கிறது.இதையே "நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே
புல்லறிவைப் போக்கி புதுநிலை
தேடல் வேண்டும் என்பார்
பாரதிதாசன்
#காற்றின் இயல்பு பற்றிய கவிதையில்
/ஒருக்களித்து கதவுகள் மீது
ஆங்காரம் கொள்ளும்
திற அல்லது மூடு
எனக்கத்தும்/
என காற்றுக்கும் கதவுக்கும் இடையேயான பேசுமொழியை கவிதையாக்கியிருப்பார்.
#நடுநிசி நாய்கள்
நடுநிசி நாய்களின் உலகை சொல்கிறார்.நாய்களுக்கு ஓய்வில்லை.உறக்கமில்லை.தன் வாலை பார்த்து பயந்து வால் தின்று சாகின்றன.
/மாலையில் கண்விழித்து
நால்திசையும் பார்வை திருப்பி
உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து
எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து
தேக்கிய சிறுநீர்
கம்பந்தோறும் சிறுகக் கழித்து
ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர
மாலை நடைசெல்கின்றன/
மையம் இன்றி வட்டம் இருக்காதுபோல், வட்டமின்றியும் மையம் இருக்காது.இதுபோல் காட்சியும் கவிதையும் ஒன்றிணைந்து இருக்கிறது.
#ஆளில்ல லெவல் கிராசிங் கவிதையில் முன்னைவிட விபத்து அதிகம் நடைபெறுவதை குறிக்கும்போது காலத்தை குறிக்க
/நேற்று வரிசை
இன்று நெரிசல்/ என்கிறார்.
#நம்பிக்கை எனும் புகழ் பெற்ற கவிதையில்
"தூரத்தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமென திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்."
#எல்லாம் தெரிந்த மனிதர்கள் எனக்கூறிக்கொள்வோரை மென்மையாய் சாடுகிறார்
/புதுமைப்பித்தனை அறிவீர்களா எனக் கேட்டேன்
ஆஹா அறிவேன் என்றவர்
சில திரைப்பட பாடல்களை முனகியவாறு
புலமைப்பித்தன் அற்புதமானவர் என்றார்
உருக்கம் தணிய வெகு நேரம் ஆயிற்று/
#பாதி படித்து முடிக்காமல் விட்ட புத்தகங்களை பார்க்கும் ஈ.எம்.ஐ கட்டாத இலங்கை வேந்தன் மாதிரி நம் மனது சஞ்சலப்படுவதை சு.ரா தம் கவிதையில் கூறியுள்ளார்.
/பாதி படித்து முடிக்காமல் விட்ட நூல்கள்
என்னை துணுக்குறச் செய்கின்றன
பாதி முடித்து படிக்காமல் விட்டவை
என்னை அலைக்கழிக்கின்றன
முற்றும் படித்து முற்றும் முடிக்க
புதிய கலைகள் தேடிச் சென்று
பாது படித்து பாதி முடித்து
நிர்க்கதியாய் நின்று
மாற்றி எழுத புதியவை தேடி
புதுயவை மாற்றமில்லை என உறுதிப்படுத்தி
பாதி படித்து பாதி முடித்து
படித்தவை முடிக்காமலும் முடித்தவை படிக்காமலும்/
#ரசித்தவை
*தேயாததையெல்லாம்
தேய வைத்து
தேய்மானம் ஒன்றே
தேயாதது என்று
தேய்ந்தும் தேயாது
கோலோச்சும்
தேய்மானத் தத்துவம்
*மேகங்கள் வானத்தில் பறக்கும் நதி
*திண்ணையில் ஒருவன் இறந்து கிடப்பதை பார்த்தேன்
அவன் தலையிலிருந்து படியிறங்கிச் செல்கின்றன பேன்கள்
*இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment