Saturday, 22 June 2019

கற்றதும் பெற்றதும்-68



கற்றதும் பெற்றதும்-68

*மணி

தேநீர்க் கலை

-எஸ்.ரா

தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது

புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும்,.

#டீக்குடிப்பது என்ற சொல் வெறும் வார்த்தையில்லை, அது ஒரு அனுபவம், வெறும் அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், கூட்டு அனுபவம், யாருடன், எப்போது, எங்கே வைத்து தேநீர் குடித்தேன் என்பது பெரும்பாலும் பசுமையாக நினைவில் இருக்கிறது,

#சாதாரணமாக ஒருவருக்கு ஒரு தேநீரை குடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும், என்னைப்போன்ற சூடுவிரும்பிகளுக்கு இரண்டு நிமிசம் போதும், ஆனால் எனது நண்பர்களில் ஒருவன் ஒரு தேநீரை குடித்துமுடிக்க குறைந்த பட்சம் முக்கால் மணி நேரமாகும், அவன் தேன் சாப்பிடுவதைப் போல துளித்துளியாகத் தேநீரைக் குடிப்பான், இவனைப்போலவே பசியை மறக்க தேநீர் குடிக்கும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் சிகரெட் மற்றும் டீயின் வழியே தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

#ஒரு ஊரில் அதிக டீக்கடைகள் இருக்கிறது என்றால் அங்கே தரமான டீ இன்னமும் கிடைக்கவில்லை என்று அர்த்தம்,

#வீட்டு டீ ஒரு போதும் கடை டீ ஆகிவிடாது என்பது பொதுமொழி, வீட்டில் தயாரிக்கபடும் போது டீயின் ருசி ஏனோ மட்டுபட்டுவிடுகிறது, அது போலவே தான் ஸ்டார் ஹோட்டல்களில் தரப்படும் டீயும், அது பாயசத்தின் தம்பியைப் போலவே இருக்கிறது, இதில் மசாலா டீ என்று ஒரு ரகம், அது தேயிலை கலக்கபட்ட பாயசமே தான்,  மறந்தும் நட்சத்திர உணவகங்களில் டீ குடித்துவிடக்கூடாது,

#மாற்றம் ஏற்பட கொதி நிலையை அடைய வேண்டும், உருமாற்றம் அடைந்த தேயிலையே தேநீராகிறது, முதல்துளி தேநீருக்கும் கடைசித்துளி தேநீருக்கும் இடையில் ஒரு வேறுபாடும் கிடையாது,  தேநீரின் ருசி நாவில் துவங்கிய போதும் மனமே அதை முடிவு செய்கிறது, ஆறிப்போன தேநீர் சுவைப்பதில்லை என்பது போலே சலித்துப்போன மனிதனாலும் எந்த செயலையும் ஆற்றமுடியாது, இப்படி தேநீரை வைத்துக் கொண்டு நிறைய பாடங்களைக் கற்றுதருகிறார்கள் ஜென் மாஸ்டர்கள்

-நான் ரசித்த சில வரிகளை மட்டும் பகிர்ந்துள்ளேன்

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment