Saturday, 22 June 2019

கற்றதும் பெற்றதும்-72



கற்றதும் பெற்றதும்-72

*மணி

விரிக்கிற போது நீர்த்துப்போகாமலும்.

சுருக்குகிறபோது சிதைந்து போகாமலும் பார்த்துக்கொள்கிற ஆற்றல்தான், எழுத்திலும் பேச்சிலும் வேண்டும்

-சுபவீ

#ஒரு நிமிடம் ஒரு செய்தி

-சுப.வீரபாண்டியன்

சுபவீ யின் ஒரு நிமிடம் ஒரு செய்தியை அறிமுகம் செய்தவர் நண்பர் சென்னை தினகரன்.ஒரு அறிஞரிடம் ஒரு நாள் முழுக்க பேசனும் என்றவுடன் ஐந்துநிமிடத்தில் வருகிறேன் என்றாராம்.அதே அறிஞரிடம் சரியாக பத்து நிமிடம் பேச வேண்டும் என்றவுடன் எனக்கு ஒருநாள் அவகாசம் வேண்டும். காரணம் நேரம் குறைவாக உள்ளபோது நாம் சொல்லும் கருத்து செறிவாக இருக்க வேண்டும் என்பதே.

இதுபோல்தான் சுபவீயின் ஒருநிமிட செய்தியும்.நாள்தோறும் நான் ரசித்த தகவல்கள்

#தமிழகத்தில் மதுவிலக்கு 1937ம் ஆண்டு ராஜாஜி 4மாவட்டங்களில் கொண்டு வந்தார்.ஆனால் தமிழகம் முழுவதும் 1947-1949 ஏப்ரல் வரை மதுவிலக்கை அமல்படுத்தியவர் ஓமந்தூரார் ராமசாமி அவர்கள்.

#விட்டுக்கொடுத்தல் பற்றி ஒரு நாட்டுப்புறப்பாடல்.மனைவியும் கணவனும் பற்றி..

" பட்டு கொடுத்தால் இன்பம் வருமா காசு என்னும் துட்டு கொடுத்தால் இன்பம் வருமா

 நகைநட்டு கொடுத்தால் இன்பம் வருமா

 இல்லை இல்லை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் இன்பம் வரும் என்பது அந்த பாட்டு.மற்றவர்க்காக ஆசைகளை விட்டுக்கொடுக்கலாம். கொள்கைகளை விட்டுக்கொடுக்க கூடாது.

# யாரேனும் ஒரு சிறுவன் அழுதால் என்ன இப்படி பொம்பள மாதிரி அழுகிறாய் என கேட்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏன் வேறுபாடு. அழுகை பொதுவானது. 

" நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து" தான் வள்ளுவர் சொல்கிறார். உலகத்தின் அழுக்குகளையெல்லாம்

தன் கண்ணீரால் கழுவ நினைத்தவர் வள்ளலார்.

# இந்து மதத்தில் இரண்டு வகையான வழிபாடுகள் இன்று இருக்கின்றன. கிராமத்து மக்களின் வழிபாடு நான்கு வகைகளாக பிரிந்து கிடக்கிறது. அவர்கள் அம்மனை, மாடனை கருப்பை, வீரனை வணங்குகிறார்கள். இசக்கியம்மன் மாரியம்மன் என்றும், சுடலை மாடன் புல மாடன் என்றும், பெரிய கருப்பு சின்னக் கருப்பு என்றும், முனியாண்டியின் மதுரை வீரன் என்றும் வணங்குகிறார்கள். என்ன வேறுபாடு.. சிவனை வழிபடுவது புராணத்தில் வழிபட்ட கற்பனை வழிபாடு. கிராம மக்களின் வழிபாடு இந்த மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை அவர்களின் வானுறை தெய்வங்களாகக் கருதி வழிபடுகிற முன்னோர் வழிபாடு.

# கண்ணன் பிறந்தது அஷ்டமி, ராமன் பிறந்த நாளன்று நவமி. கோகுலாஷ்டமி ராமநவமி கொண்டாடுகிற மக்கள்தான் அஷ்டமியும் நவமியும் நல்ல நாட்கள் இல்லை என்று சொல்கிறார்கள். கடவுள் பிறந்த நாள் நல்ல நாள் இல்லையென்றால் வேறு எது நல்லநாளாக இருக்க முடியும்.

# அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் என்றார் வள்ளுவர். எவனுக்குத் தன் வாழ்வின் அளவை அறிந்து வாழ தெரியவில்லையோ, அவனுடைய வாழ்க்கை இருப்பது போலத் தோன்றி இல்லாமல் மறைந்து போகும் என்று வள்ளுவர் கூறுவது வெறும் செய்தி இல்லை. நம் வாழ்க்கைக்கான எச்சரிக்கை.

* அவ்வையார் பாடல் ஒன்றின் கடைசி வரி பலா,மா,பாதிரி என்பார். எதற்காக என்றால் பலா பூக்காமல் காய்க்கும். மா மரம் பூத்து காய்த்து  கனியும்.பாதிரி பூக்கும் ஆனால் காய்க்காது. கேட்காமல் கொடுப்பவர்கள் சிலர், துயரங்களை சொல்லிக் கேட்டால் கொடுப்பார்கள் சிலர். கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள் பலர். இந்த மூன்று மனிதர்களை மனதில் வைத்து தான் அவர் அப்படி பாடியிருக்கிறார்.

# புரட்சிக்கவிஞர் காலையில் படி கடும்பகல் படி மாலை இரவு பொருள்படும்படி படி என்றார். பாரதியார் ஒரு நாளைக்கு ஒரு வேளை படித்தால் போதும் என்கிறார். காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்றால் எது சரி என்று ஒரு குழப்பம். கவனித்து பார்த்தால் இன்னொரு உண்மை நமக்குப் புலப்படும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக படித்தவர்கள் காலையில் மட்டும் படித்தால் போதுமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட நாம் நாள் முழுவதும் படித்தால் தான் முன்னேற முடியும். அதனால் தான் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். பாரதிதாசன் நமக்காக பாடியிருக்கிறார்

#ரசித்தது

*இந்தியாவில் அரசியல் ஜனநாயகமாவது ஓரளவுக்கு இருக்கிறது. சமூக ஜனநாயகம் ஒரு துளியும் இல்லை -அம்பேத்கர்

* பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஏன் கிடைக்காது? செவ்வாய்க்கிழமை இரவு தூங்கி வியாழன் காலையில் எழுகின்ற அவர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் புதன் கிடைக்கும்

- கலைஞர்

* மூவேந்தர் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரையில் எல்லாக் கொடிகளும் பறப்பது எந்த நூலால், பூணூல்!

- இன்குலாப்

*தொடர்ந்து வாசிப்போம்

தோழமையிடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment