Tuesday, 22 October 2019

கற்றதும் பெற்றதும்-85*மணி

கற்றதும் பெற்றதும்-85
*மணி

வயது வளர வளர கோழைத்தனமும் வளர்ந்து வருகிறது..உண்மைதானே.!
 -கிருஷ்ணன் நம்பி

#கிருஷ்ணன் நம்பி கதைகள்

ஒவ்வொரு எழுத்தாளரின் கதைகளிலும் ஒரு மாஸ்டர் பீஸ் இருக்கும்.சொல்லிலோ கருத்திலோ தன் எண்ணத்தை சிறப்பாய் தெரிவித்து விடுவார்கள்.அவ்வாறு பாவண்ணனின் ஆழத்தை அறியும் பயணம் கட்டுரை தொகுப்பில் "மருமகள் வாக்கு" கதை குறித்து எழுதியிருந்தார்.
அக்கதையின் எளிமையும் நடையுமே மற்ற அவரின் எல்லா கதைகளை படிக்கத் தூண்டியது.சம்பவங்களை கோர்த்து சொல்லும் தற்காலத்திய கதை சொல்லிகளில் இருந்து நம்பியின் கதைகள் முற்றிலும் மாறுபட்டவை. கதையை படித்தவுடன் மனதில் ஏற்படும் வெறுமையை நிரப்ப கண்களும் மனதும் புற உலகை தீராத ஏக்கத்துடன் பார்க்குமே அவ்வாறுதான் இக்கதைகளை படித்தேன்.

சுந்தர ராமசாமியின் ஒத்திசைந்த இயல்பான எழுத்து நடைபோலே.. வார்த்தை சிக்கனத்துடன் படிக்கும்போதே அகஉலகில் அதை புரிய வைக்கும் மொழி இயல்பாய் கைவருகிறது நம்பிக்கு.

#நீலக்கடல்

எல்லார் வீட்டிலும் ஒரு இறப்பு ஏற்பட்டிருக்கும்.அப்போது அவ்வீட்டின் இயல்பு நமக்கு தெரிந்திருக்கும்.
அப்படித்தான் இக்கதையும்."பேரன் சங்கரனுடன் பாட்டி கூட்டாக வசித்து வருகிறாள். நீ எப்ப சாவாய் பாட்டி னு கேட்கிறான். கேட்டவுடன் பல வசைகள் வந்து விழுகின்றன.பின் ஒரு முறை விளையாடும்போது குருவி ஒன்று இறந்துவிடும்.தங்கையை சமாதானப்படுத்த அதன் கணக்கு முடிந்துவிட்டதாய் கூறுவான்.ஒரு
முறை அவனின் கடைசி தம்பி குழந்தையாய் இருக்கும்போது இறந்து விடுவான்.அப்போது இழவு வீட்டின் இயல்பை அழகாய் எழுதியிருப்பார்.மறுநாள் தன் அப்பாவிடம்.. வயதான் பாட்டி சாகாமல் குழந்தை ஏன் இறந்தது என சங்கரன் கேட்பான். இதை கேட்டுபாட்டி அழும்போது நம் மனமும் சிறிது கனக்கிறது.

குழந்தையின் மனதை மாற்ற அப்பா சினிமாவுக்கு அழைத்துச்செல்கிறார்
அதில் நீலக்கடலை பார்க்கிறான். அது அவனுக்கு கனவில் வருகிறது.
எல்லோரையும் கடலில் செம்படவன் தள்ளும்போது பாட்டியையும் தள்ளுவதாய் தெரியும். இதை காலையில் எழுந்தவுடன் குதூகலமாய் எல்லாரிடமும் சொல்ல, பாட்டி இதனை கேட்டு மூர்ச்சையாகி இறக்கிறாள்.ஓயாமல் சங்கரனும் தந்தையும் அழுகிறார்கள்.

அடுத்தநாள் இரவு சாப்பிடும்போது பாட்டி ஒவ்வொரு முறையும் கோபத்தில் 'கடலில் கொண்டு போய் போடு'என்பாள் அதை நினைவில் வைத்து அப்பாவிடம் கடலில் போடவில்லையா என்பான்.
பாட்டியின் கடைசி ஆசையை ஏன் நிறைவேற்றவில்லை என புரியாமல் அழுவான்.அப்போது கடவுளிடம் வேண்டுவான் நான் பெரியவனாகி மாலுமியாகி கப்பல் ஓட்டி பாறையில் முட்டி கடலில் மறைவேன் என. இறப்புகுறித்து என்னவென்றே அறியாத ஒரு சிறுவனின் பார்வையில்.கதை சொல்லப்பட்டிருக்கும்.

#சுதந்திரதினம்

தாய்-தகப்பன் இல்லாத பாண்டியனும் கருப்பையாவும் அண்ணன்-தம்பிகள். தாயும் தந்தையுமாகக் கருப்பையாவுக்குப் பாண்டியனே இருக்கிறான். சமைக்க மட்டும் உறவுக்கார ஆத்தாள் ஒருத்தி வந்துகூட இருக்கிறாள். ராத்திரி தம்பி தூங்கிய பிறகு கண் விழித்திருந்து தம்பிக்காக மூவர்ணக்கொடி செய்கிறான் பாண்டியன் சுதந்திரதினத்துக்காக

மறுநாள் பள்ளியில் கொடியேற்ற கலெக்டர் வருகிறார் என ஏக கெடுபிடி.தாமதமானதால் அனைவருக்கும் பசி.. உணவருந்துகின்றனர்.பாதிச் சாப்பாட்டின் போது ஹாரன் சத்தம்கேட்கும்.கலெக்டர் வருவதால்
பாதியிலேயே எழுப்பிவிடுவார்கள்.அப்போது மழை வர அனைவரும் ஓடுகிறார்கள்.சுதந்திர தினத்தின் பொருளே இதுதான் என்பது போல மெல்லிய நகைச்சுவையாய் காட்டுயிருப்பார் நம்பி.

#மாமியார் வாக்கு

ஒவ்வொரு மருமகள்களும் மாமியாருக்கு ஒரு ரேட்டிங் கொடுத்து மனதில் வைத்திருப்பார்கள். அது வெளியில் என்னதான் சாம்பிராணி போட்டாலும் உள்ளே அந்த ரேட்டிங்கிலிருந்து அம்மஞ்சல்லி கூட அங்கிட்டு நகராது. அப்படி ஒரு கதை.பத்தாண்டுக்கு முன் படித்தது இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் இருக்கிறது.

மீனாட்சி அம்மாள் கணவனை இழந்தவள்.ஒரே மகனுக்கு ருக்மணியை திருமணம் செய்திருப்பார்கள். வீட்டு வேலை முதல் தோட்ட வேலை, பால் கறப்பது வரை சார்ஜ் குறையாத பேட்டரியாய் உழைப்பாள். அப்போது அந்த ஊரில் தேர்தல் வரும். பூனை சின்னத்தில் பெருமாளும்,கிளிச்சின்னத்தில் வீரபாகுவும் நிற்பார்கள்.

மாமியார் பூனைக்குதான் தன் வீட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சொல்லியிருப்பார். ருக்மணிக்கு கிளிச் சின்னத்தில் தான் வாக்களிக்க விருப்பம்.மாமியார் சொல்லை மீற முடிவெடுப்பாள்.
கிளி சின்னத்துக்கு ஓட்டளிக்க ஓராயிரம் முறை சொல்லிக்கொள்வாள்.
மதியத்துக்கு பின் சாவதானமாக ஓட்டளிக்க கிளம்பிச் செல்வாள்.
மாமியாரின் பேச்சை எதிர்த்து ஓட்டளிக்க அவளுக்கு விருப்பம்.அதை கற்பனை செய்து ரசிப்பாள்.ஓட்டுப்பெட்டி அருகே செல்லும்போது அவளையறியாமல் ஒரு போராட்டம் வரும்.கை தானாக பூனை சின்னத்திலேயே ஓட்டளித்துவிடும்.
வெளியில் இருந்த பெண்கள் யாருக்கு ஓட்டுப்போட்ட எனக்கேட்க அவளையறிமால் மாமியாருக்கு என்பாள்.அனைவரும் சிரிக்க.. மீண்டும் வீட்டு வேலை செய்ய ஓடுவாள். இயலாமையின் கோபம் அவளை துரத்துவதாக அவளை துரத்துவதாக வாசகனுக்கு புரிய வைத்துவிடுவார்.

#கற்றதும் பெற்றதும்

நீலக்கடல் கதையில் இறப்பை விரும்பும் பாட்டி அதைப்பற்றி சொன்னவுடன் கோபம்படும் போது ஒவ்வொரு மனிதர்களும் இவ்வுலகில் வாழ கடைசி மூச்சுவரை பேராசைப்படுவதாக எழுதியிருப்பார். சுதந்திர தினம் கதையில் அதிகாரமும் புறச்சூழலும் எவ்வாறு கீழ் தட்டு மக்களின் மேல் அதிகாரம் செலுத்துவதை உணர்த்துகிறது.

மருமகள் வாக்கு ஒவ்வொரு பெண்ணும் மாமியார் மீதான அச்சம் கலந்த பயம் அன்றிலிருந்து இன்று (ஒரு சிலருக்கு)வரை இருப்பதை காணமுடிகிறது.அவர்களிடம் காட்ட வேண்டிய அத்தனை கோபத்தையும் கணவர்கள் மீது காட்டும் மனைவியின் மனநிலைகள் இன்றுவரை மாறவில்லை.

கதை என்னை இழுக்க வேண்டும் நான் அதன் பின்னால் ஓட மாட்டேன்
எனும் அவரின் வார்த்தையில் அமைந்தவை நம்பியின் கதைகள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment