டிஸ்கவரி சானலில் brain games என்ற ஒரு நிகழ்ச்சி யதேச்சையாக பார்க்க நேர்ந்தது.
ஒரு பிசியான மார்க்கெட்டில் நேர்த்தியான கோர்ட்டும், பாதணிகள், நல்ல தெளிவான முகத்துடன் வருவோர் போவோரிடம் சிரித்துக்கொண்டே ஒருவரை பிச்சை எடுக்கச் சொல்லியிருந்தார்கள். அவரை கடந்து செல்லும் யாரும் அவருக்கு பிச்சையிடவே இல்லை. சற்று அதிசயமாக, லேசான சிரிப்புடன் கடந்தார்கள்.
அடுத்த நாள் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே நபரை, அழுக்கான உடைகள், முகம் கருப்படைத்து, தலையை கலைத்துப் போட்டு, சோகத்துடன் பிச்சை எடுக்கச்சொன்னார்கள். நேற்று பிச்சையிடாமல் சென்ற பலர் அன்றைய தினம் அவருக்கு பிச்சையிட்டனர். இப்போது கேள்வி. பண உதவி வேண்டும் என்று கேட்பவருக்கு உதவவேண்டும் என்ற மனநிலை நமக்கு இயல்பானதா அல்லது யார் உதவி கேட்கிறார்கள் என்பதைப் பொருத்ததா? எது அறம்.
இந்த சோதனை இத்துடன் நிற்கவில்லை. அதற்கடுத்த நாள் அதே நபரை நன்றாக அலங்கரித்து கோட் உடை அணிந்து, அதே இடத்தில் மயக்கமுற்று கீழே சுருண்டு கிடப்பது போல நடிக்கச் செய்தனர். இப்போது அவரைக்கண்ட பல பேர், உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்தனர். பலர் கூடி, உதவி செய்தனர். மக்களில் பெரும்பாலானோர் இவருக்காக கரிசனப்பட்டனர்.
அதற்கடுத்த நாள், அதே நபர் பழைய அழுக்கடைந்த உடையுடன், அசுத்தத்துடன், அதே இடத்தில் மயக்கமுற்று கீழே சுருண்டு கிடப்பது போல நடிக்கச் செய்தனர். இப்போது அவரைக் கண்ட பலபேர், எதையுமே காணாதது போல கடந்து சென்று கொண்டிருந்தனர். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் விலகிச் சென்றனர். அவரைக்குறித்து ஆம்புலன்சுக்கும் போலிசுக்கும் தகவல் தெரிவிக்க நிறைய நேரம் ஆனது.
இங்கு மனிதனின் இயல்பான குணம் நோயுற்றவருக்கு உதவுதல் என்றால் ரெண்டு பேருக்குமே உதவியிருக்கவேண்டுமே. ஆனால், தம்மைப் போல தோற்றத்தில் நடை உடை பாவனையில் இருப்பவருக்கு எதிர்பாரா ஆபத்து என்றால் உதவுகிறோம். மிக எளிய நபர் என்றால் நாம் சுலபமாக கடந்து செல்கிறோம். பிச்சையிடுவதற்கு நம்மைவிட கீழான மனிதரை தேர்ந்தெடுக்கிறோம். உதவுவதற்கு நமக்கிணையான நிலையுள்ள மனிதரை தேர்ந்தெடுக்கிறோம்.
அறம் குறித்த அடுத்த சோதனையை பிக் பசார் போன்ற மாலில் நடத்தினார்கள். இங்கு பில்லிங் இடத்தில் இருக்கும் கேஷியரை பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் அன்பொழுக பேசச் செய்தனர். அவர்களை வாழ்த்தச் சொன்னார்கள். கனிவுடன் நடந்து கொண்டனர். பிறகு அவர் தந்த பில்லுக்கான பணத்தில் மீதம் சில்லரை தரும் போது, வேண்டுமென்றே சற்று கூடுதலான டாலர்களை தரச் செய்தனர். அதில் 10க்கு 8 பேர் கூடுதல் சில்லரையை கேஷியரிடம் திருப்பிக்கொடுத்தனர்.
அடுத்தநாள், அதே கேஷியரை பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் வேண்டுமென்றே காக்கவைக்கச் செய்தனர். சற்று கடுகடுப்பு காட்டச்செய்தார்கள். அடுத்து அந்த வாடிக்கையாளருக்கு சில்லரை தரும் போது வேண்டுமென்றே தரவேண்டிய சில்லரையைவிட சில டாலர்கள் அதிகம் தந்தனர். இப்போது 10க்கு 6 பேர் கூடுதல் பணத்தை திருப்பித் தரவில்லை. திருப்பித்தந்த 4 பேரும் கூட கேஷியரிடம் குறை கண்டுபிடித்து சண்டை போட ஆரம்பித்தனர்.
இதில் அறம் என்பது என்ன? தன்னளவில் தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளை திருப்பித்தரவேண்டும் என்பது தானே.. ஆனால் ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார் என்பதைப் பொருத்து பணத்தை திரும்ப அளிப்பதும், தராமலிருப்பதும் எந்தவகை அறம்?
இப்படி, நாம் நமது அறத்துக்கான விழுமியங்களை நம்மளவில் சில மனவியல் நிலை சார்ந்த தன்மையுடன் தொடர்புபடுத்தி பின்பற்றுவதே அறம் குறித்த குழப்பத்தை, அதன் சிக்கலை பெரிதாக்குகிறது. 🌸
-janikiraman
No comments:
Post a Comment