Friday, 2 February 2024

அண்ணா


THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூல் தமிழில் 
விகடன் வெளியீடாக ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கை என்று மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது. 

அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் ஈர்த்த அண்ணாவை பற்றிய 
பதிவுகளும்,கூடுதலாகச் சில தகவல்களும் மட்டும் இங்கே : 

அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ; அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்குத் தெரியாது ; முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது… என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. 
புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாகக் கார் ஏறிவிட்டார்

பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்குக் கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதைப் பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா எனச் சொல்லி அதை 
கண்ணீர் துளிகள் என்று மாற்றினார் 

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் .சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் ஆகியன் மட்டுமே  இறந்த பொழுது அவருக்கு இருந்த கையிருப்பு ! 

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை; பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தைச் சுமப்பது 
வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION. பத்திரிகைகள் 
DMK எனக் குறிப்பிட அப்படியே ஆகிப்போனது 

”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது 
இன்னொன்று. கட்சியைவிடச் சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்குச் சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க 
வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார். 

"கேட்போர் மனம் குளிர பேசுவதில்லை பொருத்தமற்றதை முறையற்றதை எழுதும் பழக்கமில்லை ; சுடு மொழி கூறும் பழக்கமில்லை,விரைவாக மன வேதனையை 
நீக்கிக்கொள்ளும் இயல்பு இல்லை ; உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை ; சொந்த விருப்பு வெறுப்பு அதிகளவில் இல்லை ; பதில் கூறி காலத்தைக் 
வீணாக்கிக்கொள்வதில்லை. சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை ; நாள்,நேரம்,காலம் பற்றிய நினைவு இருப்பதில்லை -இவையெல்லாம் அண்ணா தன்னைப்பற்றித் தானே சொல்லியிருப்பவை !  
"காலண்டர் பார்த்து வேலை செய்ய 
வேண்டிய சிக்கலுக்குத் தள்ளியதே முதலமைச்சர் பதவி என்று நேரடியாக ஆதங்கப்பட்ட ஒரே நபர் அவராகத்தான் இருக்க முடியும் 

அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார். 
பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் . "நான்சென்ஸ்" என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் 
உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்துக் கடுஞ்சொல் சொன்னதில்லை ; 

இவர்களின் விரல்களை வெட்டுவேன் எனச் சொன்ன காமராஜரை "குணாளா குலக்கொழுந்தே !"என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் ,"தோழர் அண்ணாதுரை !"என பெயர் சொல்லி விளித்த பொழுது "வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன்" என்கிறார் 

சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”எனக் கேட்டாராம். 

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிரத் தலைவர் இல்லை எனச் சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது 
செயலாளர் பதவியைத் தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு  கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி 
தேர்தலில் போட்டியிட்டவர் அவர் 

சட்டமன்றம் முதல் முறை போனதும் "நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள்" என கேட்டார் அண்ணா 
காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் எனக் கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் 

பொடி போடுவதைத் தவிர எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் 
காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் 
அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது . தலைப்பில்லை  எனத் தலைப்புத் தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு ! 

எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் எனக் கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி எனக் கேட்டார் அவர். 

சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரைத் தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் . அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற 
அளவுக்குக் கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது 
தேர்தலில் வென்று விட்டோம் எனச் சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது "மத்தியில் தமிழர் ஒருவர் மந்திரி ஆவது போனதே !" என வருந்துகிறார் . 

அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதல்வர் என்று அறிவிக்கச் சொல்ல க.ராசாராம் சொன்ன பொழுது ,”வெட்கத்தை விட்டுச்சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாகச் சொன்னார் 

சுயமரியாதை திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தைத் தமிழ்  நாடு எனப் பெயர் மாற்றம் பண்ணினார் ;ஆங்கிலம் மற்றும் தமிழ் என்று இருமொழிக்கொள்கையைச் சட்டப்பூர்வமாக்கினார் அவர். கல்விக்குக் காங்கிரசை விட 
ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் . 

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதைப் படித்துவிட்டுச் செத்துப்போகலாம் என்றாராம்  உச்சபட்சமாக. 

 அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் 
கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை!

No comments:

Post a Comment