Tuesday, 17 June 2025

112


#கற்கை_நன்றே_112

" மாற்றம் என்பது எப்போதும் நடந்து கொண்டிருக்கும்  ஒரு விசயம் என்பதை ஏற்றுக் கொள்ளவும், அதனுடன் சவாரி செய்யவும், அதை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். "

-ஆலிஸ் வால்க்கர்.

உலகெங்கிலும் வாழும் பெற்றோரின் ஒரே கனவு..தம் பிள்ளை நன்கு படித்து பெரிய ஆள் ஆக வேண்டுமென்பதே.ஆனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நடைபெறும் மாற்றங்களில் கல்வியின் இன்றியமையாமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று பிறக்கின்ற ஒரு குழந்தை 2050ல் எவ்வாறு தன் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதை யுவால் நோவா ஹராரி ஒரு குட்டி ப்ளாஷ் பேக் சொல்லி ஆரம்பிக்கிறார்..

ஓராயிரம் ஆண்டுக்கு முன் அதாவது 1018ல் எதிர்காலத்தைப்பற்றி மக்கள் அறிந்திருக்கவில்லை.1050ம் ஆண்டிலும் பலர் நெசவாளர்களாக, உழவர்களாக,பல்வேறு பணிகளுக்கு மனிதர்களை சார்ந்திருப்பார்கள் என நம்பினர்.தன் குழந்தைக்கு நெற்பயிரை எவ்வாறு பயிரிடுவது என்பதை அவனின் எதிர்கால நன்மைக்காகச் செய்தனர்.இதற்கு நேர்மாறாக 2050ல் பெரும்பாலான விஷயங்கள் பொருத்தமற்றவையாக இருக்கும்  வாய்ப்பு அதிகம் என்கிறார்.

தற்போது ஏராளமான பள்ளிகள் குழந்தைகள்மீது தகவல்களைத் திணிப்பதன்மீது கவனம் செலுத்துகின்றன. கடந்தகாலத்தில் இது அர்த்தம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில், அப்போது தகவல் பற்றாக்குறை இருந்தது. இதற்கு நேர்மாறாக, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நம்மைத் திணறடிக்கும் அளவுக்குத் தகவல்கள் வந்து குவிகின்றன. தணிக்கைக் குழுக்கள்கூட அவற்றைத் தடுக்க முயற்சி செய்வதில்லை. மாறாக, தவறான தகவல்களைப் பரப்புவதிலும் பொருத்தமற்ற விஷயங்களால் நம்முடைய கவனத்தைத் திசை திருப்புவதிலும் அவர்கள் மும்முரமாக இருக்கின்றனர். அதீத தகவல்கள் இருப்பதால், எதை நம்புவது என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. 

மேலும், எண்ணற்றப் பிற விஷயங்களும் ஒரே ஒரு சொடுக்கில் நமக்குக் கிடைக்கக் காத்திருப்பதால், ஒன்றின்மீது கவனம் செலுத்துவதை அது கடினமாக்குகிறது. அரசியலோ அல்லது அறிவியலோ அதிகச் சிக்கலானதாகத் தெரியும்போது, கேளிக்கையின் பக்கம் திரும்புவதற்கான சபலம் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட ஓர் உலகில், ஓர் ஆசிரியர் தன் மாணவர்கள்மீது அதிகமான தகவல்களைத் திணிக்க வேண்டியதில்லை. ஏற்கனவே அவர்களிடம் அளவுக்கதிகமான தகவல்கள் இருக்கின்றன. மாறாக, தகவல்களை அர்த்தப்படுத்துவதற்கும், எது முக்கியம், எது முக்கியமற்றது. ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கும்.. எல்லாவற்றுக்கும் மேலாக, பல தகவல் துணுக்குகளை ஒருங்கிணைத்து உலகத்தைப் பற்றிய ஒரு பெரிய படத்தை உருவாக்குவதற்குமான திறன் மக்களுக்குத் தேவை.பல மேற்கத்திய நாடுகளின் கல்வியின் நோக்கம் இதுதான்.

  ஏராளமான தரவுகளையும் ஓரளவு சுதந்திரத்தையும் மாணவர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் தாங்களாகவே இவ்வுலகத்தைப் பற்றி தம்முடைய சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வர் .உலகைப் பற்றிய ஒரு விலாவாரியான கண்ணோட்டம் இந்தத் தலைமுறையினருக்கு இல்லாவிட்டால், வாழ்வின் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையக்கூடும்
என எச்சரிக்கிறார்.

மாற்றத்திற்கான வேகம் அதிகரிக்கும் போது, 'மனிதராக இருத்தல்' என்பதன் அடிப்படை அர்த்தம் கூட உருமாறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment