Saturday, 23 July 2016

நிமிசக்கதை-ஜி.நாகராஜன் #பகிர்வு கேசவமணி


குத்தத்தை ஒத்துக்கிறாயா?” என்று மாஜஸ்டிரேட் கைதியைக் கேட்டார்.

“ஆமாங்க” என்றான் கைதி.

“இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கனும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளைச்சுப்போ, மூனு மாச தண்டனை கொடுக்கிறேன்” என்றார் மாஜிஸ்டிரேட்.

“அய்யய்யோ, எசமான்! நீங்க மூணு மாசந்தான் போடுவீங்கன்னா, நான் குத்தத்தை ஒத்துக்கலே, கேசெ நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறு மாசம், இல்லேன்னா ஒண்ணுமில்லேனு போகனும்” என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, “யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சுடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டைரியில் வரும்” என்றார்.

மாஜிஸ்டிரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார்? அந்த ஏழைக் கைதிதான்.

- 000–

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோயந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

“சாமியார் சமாதியாகிவிட்டார்.” “இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார்” என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே அவர்களும், “சாமியார் சமாதி யாகிவிட்டார்” என்ற வார்த்தைகைளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, “டேய், சாமியார் செத்துப்போயிட்டாரு” என்று கத்திக்கொண்டு கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், “மடத்துச் சாமியார் செத்துப்போயிட்டாரு” என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தைவிட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

- 000–

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

“பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக் காரணம் என்ன?” என்று எழுத்தாளன் கேட்டான்.

“என்ன?... கெட்ட நிலையா? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாம இருந்தா அதுவே ஆணடவன் புண்ணியம்” என்றாள் விபச்சாரி.

“இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது!” என்றான் எழுத்தாளன்.

“கொடுமை என்ன கொடுமை! பசிக் கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு.... இந்தப் போலீசுக்காரங்க தொந்தரவு மட்டும் இல்லாட்டி ஒண்ணுமில்லே” என்றாள் விபச்சாரி.

“கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்குக் கஷ்டமாக இல்லை?”

“யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்கூன்னு ஒரு புருசன் இருக்காரு.”

“மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோட மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. தெரியுமா?”

“அப்படியா?”

“பின்பு?”

“சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா?”

“ஊம், இருக்கு.”

“நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே. ஒங்களுக்கு வெக்கமா இல்லே?... சரி, அது கிடக்கட்டும், நேரமாவுதுங்க.”

கொடுமையிலும் கொடுமை, கொடுமையைக் கொடுமை என்று புரிந்துகொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

 -000–

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. “வா, வா” என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் கால் எடுத்து வைத்தான்.

“யாரது? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திகிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து” என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையை விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செரிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அவன் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான், எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்துகொண்டு விட்டான்!

No comments:

Post a Comment