Tuesday, 19 July 2016

பிரம்மராஜன்


*கடலின் அனுமதி*

அனுஷ்டானம் அதற்கில்லை
எச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு
உருப்படி செருப்பின் தீட்டு
வகுத்த கோடு மீறப்படினும்
பற்றி எழாது தண்டனைத் தீ
காலடிகளின் அழுத்தமே பிரதானம்
ஏன்கால் யார் அணிகிறார்
பாகுபடுத்தியதில்லை
பாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து
தோணியும் எரிந்த தீக்குச்சியும்
துரப்பணக் கப்பலின் அமானுஷ்யமும்
மிதவைகள்தான்
தராசு முள்ளின் மையத் துல்லியமாய்
பூக்கொண்டும் போகலாம்
திக்கெட்டிலும் திறந்தே வைக்கலாம்
பூட்டலாம்
திறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை
கடலின் கதவு
உருண்டைப் பாறைமீது பாசி படிந்த கோட்டை
அந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய்
நிறுத்துங்கள் ரெனே மகரித்
உரைநடை எழுதத் தெரியாதவனும்
பெயர்ந்த மொழி சரளிக்காதவனும்
விதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு
இருப்பினும்
இக்கடையோரும்
தென்னாடு உடைய சிவனும்
கால்வைக்க அனுமதியும்
கரையில் நுரை விரித்து

கடலின் காருண்யம்
என்னை நானே தொலைத்துக்கொண்டு
தேடவேண்டிய முகாந்திரம் இருந்தும்
புரட்டிப் புரட்டிக் கொண்டுவந்து சேர்க்கிறது
என்ன வேண்டும்
என்பது எனக்கே தெரியாமல் அலைக்கழிய
இந்த சமுத்திரத்தின் குவளை விளிம்பிலிருந்து
புவி ஈர்ப்பு உதறிய தக்கையாய் மிதந்து வரும்
சமயம்
தற்கொலை செய்துகொள்ள வந்த
அயற்கடல் திமிங்கிலத்தைப் புரட்டும் அலைகள்
சரம் பட்டாசுகளை உயர்த்தி வீசி வெடித்து
பறைக் கொட்டுகள் சுதேசிச் சாராய முருக்கத்துடன்
என் மரிப்பினை
நாடகித்து நிம்மதித்தவர் மரண பீதி பெற
அவதரித்தலின்
அத்தியாவசியம்
திறக்கப்படும்
ஏழு கதவுகள்
எல்லைகளை ஏளனிக்கும் புயற்பருந்து
அலை நீராடிய எருமைகள் திரும்பும் நேரம்
நீ பெண்ணாகத்தான்
என்றும் விரித்த படுக்கையில்
என் அருகாமையில்
மிக.
     - பிரம்மராஜன்

No comments:

Post a Comment