*அன்பின் சிறிய நிமிடங்கள்*
கடற்கரையில்
தோளோடு தோளாகச்
சாய்ந்துகொள்வதில் அப்படி
என்ன கிடைத்துவிடும்?
இருசக்கர வாகனப் பயணத்தில்
தோளைப் பிடித்துக்கொள்வதில்
என்ன நிறைந்துவிடும்?
அவ்வளவு அவசரமாக
பத்து விநாடிகள்
கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில்
எதை நாம் கடந்துவிடுவோம்?
எல்லா கதவுகளும்
திறந்துகிடக்கும் முற்றத்தில்
மின்னலென அணைத்து விலகும் பொழுதில்
அப்படியென்ன சாகசம் இருக்கிறது?
லி ப்டின் ஒரு தளத்திலிருந்து
இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில்
என்னதான் நிகழ்ந்துவிடும்?
அன்பின் சிறிய நிமிடங்கள்
நம்மை ஆட்கொள்கின்றன
அவை நிகழ்கிறபோது
அப்படியொன்றும் அவை
அவ்வளவு சிறிய நிமிடங்களாக இல்லை.
-மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment