விளக்கங்களுக்கு எதிரான மனநிலையின் குறிப்புகள்
- ஜீவன்-சூர்யா
1
ஒரு மரம்
எப்படி இருக்கிறதென ஏன் உங்களிடம் விளக்க வேண்டும்
அதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது இப்போது
அதை விளக்காவிடில் அது மரமாக இல்லாமல் போய்விடுமா என்ன
அது ஒரு மரம் அவ்வளவு தான்
2
ஏன் அனைத்திடமிருந்தும்
அர்த்தத்தை எதிர்பார்க்கிறீர்கள்
சற்று அர்த்தத்தை மறந்து வாழ்ந்தால் தான் என்ன
மாற்றங்கள் வருகிறது போகிறது
ஏன் மாற்றங்களை அறிவித்துக்கொண்டு கணத்தை வீணாக்குகிறீர்கள்
உங்களைத் தான் கேட்கிறேன்
3
அது ஒரு உதிர்ந்த இலை அவ்வளவு தான்
அந்த இலை விளக்கங்கள் இல்லாதபோது அழகாகத் தான் இருந்தது
நீங்கள் விளக்க தொடங்கியபோது தான் அந்த இலை தன் உன்னதத்தை இழந்திருந்தது
விளக்கமளித்து விளக்கமளித்து சலிக்கவில்லையா உங்களுக்கு
எதையும் விளக்க உதவாத மொழியை எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம் ?
No comments:
Post a Comment