Monday, 29 May 2017

கவிதை

உயிரடங்கிய சிறு பறவை
-வ.முருகன்

அதிகாலை நடைப்பயிற்சியில்
நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது
விரைந்த வாகனம் மோதி
விழுந்துகிடந்த சிறு பறவையொன்று.
 
இதயம் படபடக்க
இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன்.
அதற்காகவே காத்திருந்ததைப்போல்
அடங்கிப்போனது அதன் உயிர்.

கனத்த மனதோடு
கைவிரல்களால் மண்பறித்து
போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள்
அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன்.
 
செந்நிறப் பிசுபிசுப்புப் போக
கைகளை நீரால் அலசிய பின்
மென்சோகத்தையும் நுண்வலியையும்
கடந்து வரவென்று
சிவப்பு மசிப் பேனாவால்
கவிதையொன்றை எழுதி முடிக்கிறேன்.
 
எழுத்துகள் அத்தனையும்
அச்சிறு பறவை சிந்திய உதிரத்துளிகளாயும்
காற்றில் அலையும் காகிதத்தின் முனைகள்
உயிரடங்குகையில் துடிதுடித்த
அதன் சிறகுகளாயும் தெரிகின்றன.

No comments:

Post a Comment