Sunday, 27 August 2017

முகநூல் பதிவு

இரட்டை வரி நோட்டில்
நாங்கள் அழகாக தமிழ் எழுதியும்
நாலுவரி நோட்டில் ஆங்கிலம் எழுதியும்
' வெரி குட்..' என டீச்சர் ஒப்பமிட்ட போதும்
தேன்மொழிகள் எம்மைக் காதலிக்க வில்லை ...

ஓட்டப்பந்தயத்தில் முதல் வந்தோம்
பேச்சுப்போட்டியில் பரிசு பெற்றோம்
ஏரியின் இருகரை தொட்டோம்
தேன்மொழிகள் அசையவில்லை

குழாயில் நீரடித்துத் தந்தோம்
கோயிலில் நவக்கிரகம் சுற்றினோம்
கல்லாங்காயில் விட்டுக் கொடுத்தோம்
தேன்மொழிகள் கனியவில்லை

ஒன்றாக ராட்டினம் சுற்றினோம்
திருவிழாவில் தேர் இழுத்தோம்
தெப்பத்தில் சேர்ந்தமர்ந்தோம்
தேன்மொழிகள் இளகவில்லை

ஐஸ்கலர் வாங்கிப் பகிர்ந்தோம்
பேருந்தில் இடம் பிடித்தோம்
பிடித்த பாடல் போடச்செய்தோம்
தேன்மொழிகள் கரையவில்லை

தவிட்டில் ஈச்சம்காய் வைத்தோம்
தொரட்டில் கொடுக்காபுளி பறித்தோம்
பனைமரம் ஏறி இறங்கினோம்
தேன்மொழிகள் மலைக்கவில்லை.

பிறிதொருநாள்...
அப்பாவுக்கு சுகமின்றிப் போக
சேறிரங்கி
ஏர் பிடித்தபோது ..
திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே போன
தேன்மொழிதான்
ரெகார்டு நோட்டு எழுதித் தந்தாள்
உள்ளே காதல் கடிதத்தையும் வைத்தனுப்பினாள்.

Ram Vasanth

No comments:

Post a Comment