Sunday, 29 October 2017

தனிக்குடித்தனம்

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய
மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து
கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன்.
“பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?’

“என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம்
போயிடலாம்!’

“என்ன சொல்றே நீ?’

“ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட
வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும்
வர்றதில்லை.’

“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை.
அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா,
பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?’

“என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்’

“கொஞ்ம் பொறுத்துக்க பாக்கியம்’

“என் கஷ்டத்தை புரியாமப் பேசாதீங்க!’

“சரி, இதுதான் உன் முடிவுன்னா இன்னிக்கே
ஆபீஸ்ல டிரான்ஸ்ஃபர் அப்ளிகேஷன்
கொடுத்திடறேன், போதுமா?’

“முதல்ல அதைச் செய்யுங்க. ஒவ்வொரு மகனுக்கும்
கல்யாணம் செய்யும் போதெல்லாம் வர்ற மருமகள்
எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு நினைக்கிறேன்.
ஊஹூம்…! ஏன், போன மாசம் நம்ம கடைசி
மகனுக்கு கல்யாணம் பண்ணினோம். அந்தப்
பொண்ணாவது எனக்கு கூடமாட உதவியா
இருப்பான்னு பார்த்தா, அவளும் மத்த இரண்டு
மருமகளாட்டம், ஜம்முன்னு வேலைக்குக் கிளம்பிப்
போயிடறா. வயசான காலத்திலே நான் ஒருத்தியே
வீட்ல வேலைன்னு அல்லாட வேண்டிக் கிடக்குது.
அதனால்தான் நாம தனிக்குடித்தனம் போகலாம்னு
சொன்னேன். என்னை தப்பா நினைக்காதீங்க.’
-
மனைவியின் பேச்சில் நியாயம் இருப்பதைப்
புரிந்து கொண்டார் பாண்டியன்.
-
————————————-
> ஜெயா மணாளன்
நன்றி: குமுதம்

No comments:

Post a Comment