Sunday, 10 December 2017

கவிதை


கனத்து கனத்து
மிகக் கனத்துப்போயிருக்கும் மனதை
சுமக்கமுடியாமல்
யாரிடமாவது கொடுக்கலாமென யோசித்தபடி
அமர்ந்திருக்கையில்
என்னருகில் வந்து பறந்த பறவையிடம்
கேட்டேன்
என் கனத்த மனதைச் சற்றே சுமக்கும்படி
தூக்கிப் பார்த்த பறவை தூக்கமுடியாமல்
முடியாதெனச் சொல்லிவிட்டுப் பறந்தது
எப்போதோ என்னிடம் ஏதோ
வாங்கிச் சாப்பிட்ட நாயாக இருக்கவேண்டுமது
என்னைப் பார்த்ததும் வாலாட்டியபடி
அருகில் வந்தமர்ந்த நாயிடம் கேட்டேன்
என் கனத்த மனதைச் சுமக்கச் சொல்லி
நன்றியோடு தூக்க முயறசித்த நாயால்
தூக்க முடியவில்லை
மன்னித்துவிடச்சொல்லி சோகத்தோடு
திரும்பிப்போனது அந்த நாய்
பின் ஓர் ஒற்றை மேகமொன்று
என்னைப் பார்த்தபடி வானில் வந்தது
மேகமும் முயன்றுவிட்டு முடியவில்லையென
அகன்றது
முகம் மோதிக்கொண்டிருந்த காற்றிடம் கேட்டேன்
மென்மையான தன்னால் இத்தனை கனத்தை
தூக்கமுடியவில்லையென நகர்ந்தது
பகலெல்லாம் எனக்குத் தெரிந்த
எல்லாவற்றிடமும் கேட்டேன்
எவற்றாலும் என் கனத்தை மனதை
சற்று நேரம் கூட தூக்கிச் சுமக்க முடியவில்லை
அந்தியில் முளைக்கத் தொடங்கிய
நட்சத்திரங்களிடம் கேட்டேன்
முயன்று பார்த்த அத்தனை நட்சத்திரங்களும்
முடியவில்லையென்று கைவிரித்துப் போயின
பிறகு வெகு அடர்த்தியாய் வந்த இரவிடம்
மிகுந்த நம்பிக்கையோடு கேட்டேன்
இரவும் தன் மிகப்பெரிய கைகளால்
தூக்கிப்பார்த்துவிட்டு முடியவில்லையென
அலுத்துப்போய் உறங்கத் தொடங்கியது
எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து உதவிகேட்ட
என் கண்களிடம் கேட்டேன்
அவை கண்ணீரைச் சொட்டி சொட்டி
கனத்த மனதை உடைக்கத் தொடங்கியது
யாருக்கும் கேட்காமல்
யாரையும் சலனப்படுத்தாமல்

-சௌவி

#காகிதம்

பணம் ஆனது...

பணம் மீண்டும்

காகிதமாகிவிட்டது!

பணத்தை

என்ன செய்வதென்ற

கவலை -

அதிபர்களுக்கும்

அதிகாரங்களுக்கும்!

பணத்திற்கு

என்ன செய்வதென்ற

கவலை -

அப்பாவிகளுக்கும்

அபலைகளுக்கும்!

கொள்ளை நோட்டுகளும்

கள்ள நோட்டுகளும்

குளிர் சாதன அறைகளில்

கூடிப்பேசுகின்றன...

பாவம் -

நல்ல நோட்டுகள்தான்

அலைகின்றன

நடுத்தெருவில்!

வங்கி வங்கியாய்

ஏறி இறங்கிக்கொண்டிருக்கும்

ஏழை எளியவர்களின்

பயத்தையும் பதற்றத்தையும்

பார்த்துப் பார்த்துத்

தொலைக்காட்சியில்

ரசிக்கின்றன

மாட மாளிகைகள்!

அதில் -

பணம்

பிணமாகும் முன்பே

பிழைத்துக் கொண்ட

முதலைகள்!

நோட்டுகள் செல்லாதென்று

அறிவித்த இந்தியா

ஓட்டுகளும் செல்லாதென்று

உறுமிடும் நாள்வருமோ?

அலைவரிசை மாறலாம்...

அலைகள் மாறுவதில்லை!

காந்தியின்

கண்ணெதிரிலேயே

கலகம் செய்தவர்கள்

காகிதத் தாள்களில்

கவனித்துக் கொண்டிருக்கும்

அவரது

கண்ணாடியைப் பற்றியா

கவலைப்படப் போகிறார்கள்?

#எதையேனும் சார்ந்திரு...
கவித்துவம்.. தத்துவம்
காதல்.. சங்கீதம்...
இங்கிதம்.. இப்படி
எதன் மீதேனும்
சார்ந்திரு...
இல்லையேல்
உலகம்
காணாமல் போய் விடும்..

-வண்ண நிலவன்

No comments:

Post a Comment