Wednesday, 20 December 2017

திருமாவேலன்

உயரும் என் குரல்
............................

நான் உரக்கக் கத்துவேன்
புதைக்கச் சொன்னவர் எவரோ
அவரின் நிம்மதியழியும் வரைக்கும்
நான் கத்துவேன்
இனியும் எவரையும் எதையும்
புதைக்க நினைக்கவும் முடியாமல்
அவர் அமைதி குலைந்து
ஆன்மா அலைந்து
உடல் நடுங்கி இதயம் சிதைந்து
வாய் பிதற்றும் வரையில்
நான் கத்துவேன்.

ஒரு சொல்
ஒரேயொரு சொல்
கதைப்பதற்கும் வழியின்றி
புதைக்கப்பட்ட
அத்தனை மனிதருக்குமாய்
அடிவயிற்றிலிருந்து எழும்
என் கதறல்
செம்மணி வெளி கடந்து
பிரபஞ்சமெங்கும் பரவும்
நட்சத்திரங்களை உலுக்கும்
புயலின் திசையை மாற்றும்
எரிமலையின் குமுறலையும்
பூகம்ப அதிர்வையும்
புதைக்கச் சொன்னவர் வீட்டு
முற்றத்துக்கு வரவழைக்கும்
கடைசி மூச்சை அவர்
விடும் கணத்திலும்
காதுக்குள் இரையும்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட
மனிதரை
எழுப்பும் வல்லமை எனக்கில்லை
ஆனால் கொல்லச் சொன்னவரை
உயிருடன் உலவும் பிணங்களாக்க
என் குரலுக்கு இயலும்.

-போராளியாகவும் படைப்பாளியாகவும் செயல்பட்டு 1998 முள்ளிகுளம் போரில் வீரமரணம் அடைந்த மலைமகள் எழுதியது.

(திருமாவேலன்)

No comments:

Post a Comment