"கண்ணதாசனின் கன்னல் வரிகளில்.. குழந்தை தூங்கட்டும்.. கவிதை வரிகள்..!!*
அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே
அமைதியினைக்காணட்டும்
அன்புக் குழந்தையவன்
அரையாண்டுச்செல்வனவன்
இந்த வயதினிலே
இப்போது தூங்குவதே
சுகமான தூக்கம், அவன்
சுகமாகத் தூங்கட்டும் !
கண்ணை விழித்திந்தக்
காசினியைப்பார்க்குங்கால்
என்ன துயர்வருமோ
எங்கெங்கே அடிவிழுமோ
காதல் வருமோ
காதலுக்குத்தடைவருமோ
மோதல் வருமோ
முறைகெடுவார்துணைவருமோ?
நன்றியிலாநண்பர்கள்தாம்
நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்தபெண்ணொருத்தி
நாயகியாய் வருவாளோ
செய்யத்தொழில்வருமோ
திண்டாட்டந்தான்வருமோ
வெய்யில்அழைத்துவரும்
வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்
றலைகின்றநிலைவருமோ?
என்ன வருமென்று
இப்போது யாரறிவார்
அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும் !
கோடிக் கதிபனெனக்
குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென
நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம்
கிடைத்தாலும், அவன்வீட்டு
மாட்டுக்கும் கூட
மரியாதை கிடைத்தாலும்
பஞ்சணைகள்இருந்தாலும்
பால்பழங்கள்உண்டாலும்
சொத்துள்ளகாரணத்தால்
தூக்கம் பிடிக்காது!
அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!
பூப்போலத்தூங்குகிறான்
பூமியிலேஉள்ளதெல்லாம்
பார்க்காமல்தூங்குகிறான்
பாவிகளை இன்றுவரை
சேராமல் தூங்குகிறான்;
தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகிறான்;
"லாலிலா" பாடுகிறான்!
வெள்ளை மலர்முகத்தை
வெள்ளிநிலாப்பெட்டகத்தைப்
பிள்ளைக் கனியமுதைப்
பேதையீர் எழுப்பாதீர்!
அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!
No comments:
Post a Comment