கற்றதும் பெற்றதும்-27
*மணி
மண வாழ்க்கை வெற்றியடைய இருவர் தேவை, தோல்வியடைய ஒருவர் போதும்...!
#ரத்னாபாயின் ஆங்கிலம்
*சுந்தர ராமசாமி
ரத்னாபாய் அழகான பெண். அத்துடன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. ஊரிலேயே நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது அவள் மட்டும் தான்.அவளைப் பார்ப்பதற்காக இளைஞர்கள் சாலையோரங்களில் குவிந்து கிடப்பார்கள்
ரத்னாபாய்க்கு வரும் காதல் கடிதங்களை அம்மா மீராபாய் ரகசியமாகப் பிரித்து பார்த்து மகிழ்ச்சி அடைவாள்.ஆனால்
ரத்னாபாயிடம் காதலை தெரிவித்த ஆண்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். ரத்னாபாய்க்கு எம்.ஏ படிக்க ஆசை.ஆனால் பிஎட் படித்து ஆசிரியை ஆகிறாள். அவளுக்கு வயதாகிக்கொண்டே செல்கிறது.
#சந்திப்பு
அப்போதுதான் அவள் பல்டாக்டரான ஜான்சனைச் சந்திக்கிறாள்.உற்சாகமான எதார்த்தமான இளைஞன் என்று அவள் அவனைப்பற்றி எண்ணி திருமணம் செய்துகொள்கிறாள். ‘உங்கள் எளிமையை விரும்பினேன்” என்று அவள் சொல்ல “எனக்கு உன்னிடம் பிடித்ததே இந்த ஆங்கிலம்தான்” என்கிறான் ஜான்சன்.இது அவளை ரசிக்கவைக்கிறது.பெண்களிடம் உள்ள திறமையை புகழ்ந்தால் சந்தோசப்படுவார்கள்.காரணம் எவரும் அதை பாராட்டியிருக்க மாட்டார்கள்.
#திருமணத்துக்குப்பின்
கணவனுக்குத் தொழிலில் ஈடுபாடும் இல்லை. முரட்டுக்குடிகாரன். வெறும் குறடைக்கொண்டு மயக்க மருந்துகூட கொடுக்காமல் பல்லைப்பிடுங்குமளவுக்கு மூர்க்கன். அவளுக்கு குழந்தைகள் பிறக்கின்றன. அவையும் அதே மூர்க்கமும் பொறுப்பின்மையும் கொண்டவை. மில்டன் பதினாறுவயதில் புகைபிடிக்கிறான்.பெண்கள் இருவரும் படிப்பில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.ரத்னாபாய் அவளது இளமையில் கண்ட மொத்த கனவுகளும் காணாமலாயின. அவள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு இரும்பு தொழிற்சாலைக்குள் பூவைக்கொண்டு போவது போல. தன்னுள் மிக மென்மையான பகுதியை அவள் நலுங்காமல் வைத்திருந்தாள் அது ஆங்கிலம்.
#ஆங்கிலம்
அவளுடன் படித்த தோழிகள் பெரிய பதவிகளில் டெல்லியிலும் மும்பையிலும் இருந்தனர். அவர்களுக்கு உயர்தர ஆங்கிலத்தில் ரத்னாபாய் கடிதங்கள் போடுவாள். ஷேக்ஸ்பியரிலிருந்தும் மில்டனிலிருந்தும் மேற்கோள் காட்டுவாள். மிக அழகான சொற்றொடர்களை யோசித்து யோசித்து எழுதுவாள். உயர்தரமான காகிதங்களை வாங்கி வந்து அவற்றில் நுட்பமான படங்களுடன் அந்தக் கடிதங்களை எழுதி அவர்களுக்கு அனுப்புவாள். அவளிடமிருந்து வரும் கடிதங்களுக்காக தோழிகள் காத்திருக்கிறார்கள். அந்தக்கடிதங்களுக்கு அவர்கள் பதில் போடுவர்,வியந்து பாராட்டுவார்கள். வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே பெருமிதம் அதுதான்.
#புடவை
ஒரு புடவை பார்த்ததாக தோழிக்கு கடிதம் எழுதுகிறாள். உண்மையில் அவள் எந்தப்புடவையையும் பார்க்கவில்லை.ஆனால் அவள் வர்ணிப்பில் மயங்கி..புடவை எடுத்து அனுப்புமாறு வேண்டுகிறாள்.எங்கே போவது என்று தெரியவில்லை. அவளுடைய வருமானத்தை நம்பி நடக்கிறது அவள் குடும்பம்.
ரத்னா பாய் கணவனிடம் பணம் கேட்கிறாள். பணமில்லை. இறுதியில் தன்னிடம் எஞ்சிய இரு வளையல்களை கழற்றி விற்று அந்த கடைக்குச் சென்று மலிவான ஐந்து புடவைகளை தோழிகளுக்கு அனுப்புகிறாள். புடவைகளைப்பார்த்துவிட்டு அவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஊகிக்கிறாள். ’உன் சிநேகிதி ஆங்கிலத்தில் ஒரு மேதை; ஒப்புக்கொள்கிறோம். ஆனால் புடவை தேர்ந்தெடுப்பதில் அவள் ஒரு அசடு”என்கிறார்கள் அங்குள்ளவர்கள் .மீண்டும் அழகிய ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுத ஆரம்பிக்கிறாள். ”பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி. இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்று அவள் சொல்லிக்கொள்கிறாள்.
#மீள் பார்வை
இது ஒரு சாதாரண கதை.ஆனால் ஒரு படிமம்.பெண்களின் அக உலகம் சார்ந்தது.கசப்பான மண வாழ்க்கை அமைந்தாலும் தமக்கு பிடித்த ஒரு செயலை செய்து சமப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.தன்னுடன் ஒத்த சிந்தனையுடைய தோழிகள் தான் உலகம்.இன்றும் மனதிற்கு பிடித்த தோழிகளை சந்திக்கும்போது காரணமேயில்லாம் வெடித்து சிரிப்பார்கள்.சொல்வதெல்லாம் நகைச்சுவையாய் தெரியும்.இதுவரை நடந்த அத்தனையும் பகிர்வார்கள். ஆழ்கடலில் கிடைத்த தக்கையைப் போல்தான் பெண்களுக்கு கிடைக்கும் தோழிகள்.
கரையேறுவார்களா எனத் தெரியாது.ஆனால் யாருமில்லாத கடலில் கிடைத்த தக்கையை போல சிறந்த ஆறுதல் வேறு இல்லை.
நல்ல கணவன் மனைவி என்பவர்கள் எலியும் பூனையும் அல்ல;எதுகையும் மோனையும் போல இயல்பானவர்கள்.ஆனால் தக்க ரசனை இல்லையெனில் நரகம் தான்.ஒருத்தர் ஆர்த்தடாக்ஸா இருந்து இன்னொருத்தர் அயோடக்சா இருந்தா நினைச்சுப்பாருங்க.கணவன் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம்தான் பெண்களுக்கு.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment