Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-9

கற்றதும் பெற்றதும்-9

*மணி

கள்ளிக்காட்டு இதிகாசம்

எழுத்தைப் போலவே பேச்சினை தமிழ் மக்களின் மனங்களில் நிலைக்கச்செய்தவர்  வைரமுத்து. மண் வாசனையை தன் எழுத்துக்களில் கொண்டு வந்தவர்.

வார வாரம் விகடனில் தொடராய் வரும்போதே ஒவ்வொரு வாரத்தையும் பேயத்தேவரின் குடும்பத்தையும் அவரின் கவலைகளையும் நம்மையும் பக்கத்திலிருந்து பார்ப்பது போல் ஒரு அனுபவம்.

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14  கிராமங்களின் பூர்வ கதை.

மண்சார்ந்த மக்கள், மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன இந்த படைப்பு, அந்த மண்ணின் வட்டார வழக்கோடு எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2003ம் ஆண்டு சாகித்திய அகாடமி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கதை:

பேயத்தேவர், அவரது பேரன் மொக்கராசு, மகள்கள் செல்லத்தாயி & மின்னல், மனைவி அழகம்மா, மகன் சின்னு மற்றும் முருகாயி.

பேயத்தேவரின் இரு மகள்கள் ஒருத்தி அழகம்மா. இளம்விதவை.அவளின் மகன் தான் மொக்கராசு பேரன்.மறுமணம் செய்து அனுப்புவார்.கஷ்டம்னு வந்து கண்ணை கசக்கும்.பணம் கொடுத்து அனுப்புவார். மற்றொரு மகள் மின்னல் நல்ல குடும்பம்.ஆனால் கணவன் ஒரு தகராறில் கொலை செய்துவிட்டு சிறை சென்றுவிடுவார்.மகள் மின்னலும் அவ மகளும் பேயத்தேவருடன் இருப்பாங்க.மகன் சின்னு உதவாக்கரை.மனைவியின் திடீர் மரணம்.

அட ஒரு ஆளுக்கு இத்தனை சோகமா..

இறிதியில் வைகை அணை கட்ட நிலத்தை எடுப்பது என  இறுதியில் மனம் கனக்க வைக்கும்,கல்லையும் கரைய வைக்கும் வரிகளுடன் முடித்திருப்பார்.

பேயத்தேவரே!முன்னோர் பொருட்களை எடுத்தது போதும்.. ஓடுங்க..ஓடுங்க னு தண்ணீர் வருது!” என்று நம்மையும் கெஞ்ச வைப்பார்..

செவுரு சாஞ்சு விழும்போது திடீரென நம். கையும் இயல்பாய் பிடிக்கப்போகுது

இத்தனை சோகம் இருந்தாலும் ஒத்தை ஆளாய் தாங்கி,கதையை ஜெட் வேகத்தில் சுவாரஸ்யமாய் கொண்டு செல்வது கவிப்பேரரசுவின் கிராமிய நடைதான்.

பெரிய தத்துவத்தை எளிய மொழியில் இவ்வளவு அழகாய் வெளிப்படுத்த முடியுமா? என சிந்திக்க வைப்பார்.

#வார்த்தை விளையாட்டு

*மகன் சின்னுவை பற்றி சொல்லும்போது பால் திரியத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்கு தெரியாது என்பது போல பிள்ளைகள் கெடத் தொடங்கும் நேரம் பெத்தவங்களுக்குத் தெரிவதில்லை என்பார்

*மனுச வாழ்க்கையில நல்ல இடம் சுடுகாடுதான்.மனசு மட்டுப்படுவது அங்கேதான்.
செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற உலகத்தின் பழைய்..ய பள்ளிக்கூடம் அதுதான்

*கிணறு வெட்ட குழி தோண்டும்போது மம்பட்டிக்கு மசியல மண்ணு. பொறாம புடிச்ச மனசு மாதிரி இறுகிக்கெடக்கு கெட்டியா

*மனைவி இறந்த பிறகு மனுசனுக்கு என்ன இருக்கு என்பதை "தாம்பத்யத்தின் தேவை தீர்ந்த பிறகுதான் ஒரு குடும்பத்தில் உண்மையான கணவனும் மனைவியும் பிறக்கிறார்கள்"

*தல குளுந்திருக்கணும்:பாதம் சூடாயிருக்கனும் அதான் நல்ல மனுச உடம்பு

*கிராமத்து மக்களின் வாழ்வியலை சொல்லும்போது

கிராமத்து இரவு ஆழமானது.

நிஜமான நிசப்தம் நிலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரண்டு மணி நேரம் உழைத்தவர்கள்,பகல் தூக்கத்தை தரித்தரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும் மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய்

*இறுதியா நிலத்தை எடுக்கிற சேதி கேட்டவுடன் "உலகமே காலடியிலிருந்து நழுவிவிட்டது போல இருந்ததா எழுதியிருப்பார்.எத்தனை நயம்

#வைர வரிகள்

*நாம பஞ்சம் பொழைக்க வந்த பத்து பதினொரு ஊரு தானா சிக்குச்சு? சுண்டெலிய  ஒளிச்சு வைக்க சோத்துப்பானை தானா கிடைச்சது

*அழுத பிள்ளைக்கு தான் சோறு அடிச்சு பேசினாதான் காசு

*சீலைய தொவச்சு தரையில காயப்போட்ட மாதிரி அளவா வந்துக்கிட்டிருந்த தண்ணி, அணை கட்டி முடிக்க கங்கு கரையெல்லாம் பொங்கி வரத் தொடங்குச்சு

*தண்ணியில சாக வேணாம்
எங்கியாச்சும் போய் தரையில சாகலாம்

*மண்ணை விடமாட்டேன்னு சொன்னார்,
கடைசியா மண்ணும் விடல

இன்னைக்கும் வைகை அணை மேல அடிக்கிற வருசநாட்டு காத்துமட்டும் ஒட்டிச்சொல்லி அழுது போகுது ஓ' என்று என முடிச்சிருப்பார்.

நிச்சயம் அனைவரும் வைரமுத்து வின் மண் வாசம் வீசும் அந்த கள்ளிக்காட்டில் வாழும் அனுபவத்தை பெற அதை வாசிக்க வேண்டும்

-தொடரும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment