எல்லோரும் புழுதியைத் துடைத்துவிட்டு
உட்கார்கிறார்கள்
நான் புழுதியின்மீதே உட்காருகிறேன்
நானும் புழுதி என்பதும் ஒன்று
என் மேலும் படியட்டும் புழுதி என்பது
இன்னொன்றாக இருக்கலாம்
உலகத்தில் துடைக்க முடியாதது
எவ்வளவோ வேறு இருக்கிறது
என்னையும் புழுதியையும் தவிர!
* கல்யாண்ஜி
# கைக்குழந்தைகளுக்கு
சோறூட்டுகையில்
பூச்சாண்டியாகவும்,
குட்டிகளை வைத்து
ரவுண்டடிக்கும்போது
சைக்கிள் தாத்தாவாகவும்,
இரண்டு மகள்களைப்
படிக்க வைத்து, பின்
கட்டிக்கொடுத்த
பொறுப்பான தகப்பன் சாமியாகவும்,
மெதுவாகத் தோள்தொட்டு
நல்லாயிருக்கீங்களா தம்பி
எனும்போது மதிப்பிற்குரிய பெரியவராகவும்,
யாருடைய பிள்ளைகளுக்கோ
கல்விக் கட்டணம் செலுத்த,
யார் வீட்டு வாசலிலோ
தவங்கிடக்கையில் கடவுளாகவும்,
ஓடாத மில்லின் சக
தொழிலாளர்களுக்கு
நீதி கேட்டுப் போராடும்
மாதாந்திரச் சடங்கில்
தோழர் பாத்திரத்திலும்,
அழகாகப் பொருத்திவிட முடியும்
அருணகிரி அய்யாவை...
இடுப்பில் நிற்காத கால்சட்டையை
பெல்ட் போட்டு இறுக்கி,
ஒரு பக்கமாய்ச் சரியும்
தொப்பியைப் பதறியபடி சரிசெய்து,
அப்பார்ட்மெண்ட் செகரெட்டரிக்கு
வளைந்து, வலிந்து வணக்கம்
வைக்கும்போது மட்டும்,
ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை
ஆஃபீஸ் செக்யூரிட்டியாக மட்டும். (இளங்கோவன்)
# எங்கள் விடுதலையின்
பேரிசைக்காகத்தான்
உங்கள் தெய்வத்தை தொங்கவிட்டு
தோலை உரிக்கிறோம் நாங்கள்.....
-மாரி செல்வராஜ்
#இவன் நட்ட
மரங்களெல்லாம்
நிமிர்ந்துவிட்டன.
இவன்
நடும்போது குனிந்தவன் தான்
இன்னும்
நிமிரவில்லை.
- கோ.புண்ணியவான் - மலேசியத் தமிழர்களைப் பற்றி
# 'மனிதாபிமான உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனித துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்கவல்லது.
-ஜி.நாகராஜன்
# இறங்குமிடத்தில்
............
'இறங்கவேண்டிய
இடம் வந்துவிட்டது'
என்கிறான் வாகன ஓட்டுனர்
பாதிப்பாட்டுதான்
ஓலித்திருந்தது
'இந்தப் பாட்டு
முடிந்தபிறகு நான் இறங்கலாமா?'
என்றேன் பரிதவிப்புடன்
எப்போதும்
இறங்கவேண்டிய
நேரம் வந்தபிறகும்
எனக்கு ஏதோ ஒன்று
பாதியிலேயே மிஞ்சிவிடுகிறது
மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment