Tuesday, 16 October 2018

கற்றதும் பெற்றதும்-48

கற்றதும் பெற்றதும்-48
*மணி

நதி அமைதியாக உறைந்திருக்கிறது.
மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன
-ஜென்

#கூழாங்கற்கள் பாடுகின்றன
*எஸ்.ராமகிருஷ்ணன்

வழக்கமான கவிதைகள் அர்த்தத்தை உருவாக்க முயற்சிக்கையில் ஜென் கவிதைகள் நாம் முன் அறிந்த அர்த்தத்திலிருந்து நம்மை விடுவிக்க முயற்சிக்கிறது.

அறிந்த சொல்லின் வழியே அறியாத அனுபவத்தைத் தருவதே ஜென்.போலியான எண்ணங்களை நிஜமென நினைத்துக்கொண்டு அலுப்பூட்டும்போது,நாம் கவனிக்கத் தவறிய வெறுமையை சுட்டிக்காட்டி,கடந்து போக வைக்கிறது.

#எளிய சொற்களை வைத்து கட்டமைத்து ஆழமான எண்ணங்களை விதைப்பது ஜென் கவிதை

"இருப்பது இல்லாமலிருப்பதன் ஓர் அம்சமே
இல்லாமலிருப்பது இருப்பதிலிருந்து வேறானது அல்ல"

#மனதின் அடையாளங்களை சிறு வார்த்தைகளில் காட்டுகின்றனர். அனுபவத்தின் முடிவின்மை அதில் தெரியும்.சுயதேடலை இயற்கையுடன் ஒன்ற வைக்கும். கவிதை என்பது எளிய அர்தத்தையும் தத்துவத்தையும் தேடுவதில் கவனம் செலுத்துகிறோம்
.ஜென் அடுத்த கட்ட புரிதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது.இதற்கு தேவதச்சனின் மத்தியானம் என்ற சொல் "மத் தியானம்" என்று பிரித்து வரும் கவிதையை மேற்கோள் காட்டுகிறார் எஸ்.ரா.

#உரைநடை என்பது சந்தையை வேடிக்கை பார்ப்பது போன்றது. அங்கே காண் உலகம் மிக யதார்த்தமாகத் தெரியும்.

இரைச்சலும்,இடைவிடாத பேச்சும் நிரம்பியிருக்கும்.கவிதை என்பது நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது போல.சொற்கள் சிறகடிக்கும். கவிதை ரசனை கொண்டவன் தன் அளவில் வாழ்வின் அரூரமான தளங்களின்மீது நின்று தன்னை அதில் பொருத்திப் பார்க்கிறான்.

#தோஜென்னின் கவிதை பற்றி கூறுகையில்

"நள்ளிரவு அலைகளில்லை
காற்றுமில்லை வெற்றுப்படகு
மிதந்து கொண்டிருக்கிறது நிலவொளியில்"

மிதத்தல் என்பது மனதின் அடையாளம்.நிலவொளி பேரன்பின் வெளிப்பாடாகவும், புற உலகின் இயக்கங்கள் ஒடுங்கிப் போனாலும் ஒரு மிதத்தல் இருந்து கொண்டுதானிருக்கிறது.

#"ஓடும் தண்ணீரில் நிழல் விழுவதில்லை" எனும் வரி சுட்டும் உண்மை அடர்த்தியானது எனக்கூறி தாகூரின் "அம்பின் சுதந்திரம் வில்லின் தயவால்தான் சாத்தியமாகிறது" என்கிறார் எஸ்.ரா

#பாஷோவின் இக்கவிதை எல்லா ஹைக்கூ புத்தகத்திலும் இருக்கும்.ஆனால் எஸ்.ரா மட்டும் விளக்கம் தருகிறார்

"பழைய குளம்
தவளை குதிக்கிறது
க்ளக்...க்ளக்..

தவளை ஒரு குறியீடு.அதாவது தவளை குதிப்பது தண்ணீர் உள்ள குளத்தில் மட்டுமில்லை நிசப்தம் என்ற பெருங்குளத்தில்.ஆகவே அது க்ளக் சப்தம் உண்டாக்குகிறது. நிசப்தம் போடுகின்ற சப்தம் என்று புரிந்துகொள்ளலாம்.

#if your heart is pure,then all things in your world are pure  எனும் ஜென் வரி எளிமையாய் உணர்த்துகிறது.

#பிச்சைக்காரனின் பாத்திரத்தில் விழுந்து கிடக்கின்றன
சில நாணயங்களும் மாலை நேரத்து மழைத்துளியும்

-கோபயாஷி இஷா

#குழந்தை நிலாவைக் காணும்போது அடையும் வியப்பும் கற்பனையும் ஏன் பெரியவர்களுக்கு ஏற்படுவதில்லை.
காரணம், நிலவைப் பற்றிய அறிவும் அதைப் பயன்பாடு சார்ந்த ஒன்றாக மாற்றி வைத்துள்ளதாக கூறுகிறார் எஸ்.ரா

#மனதை தொட்ட வரிகள்

*நேற்றைய தெளிவு என்பது
இன்றைய முட்டாள்த்தனம்"

*பூ என்பது கிளையில் இருக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சி

*வண்ணத்துப்பூச்சியே
எதைப்பற்றி கனவு காண்கிறாய்
நீ இறக்கை அசைக்கையில்

ஜென் நிலையை உணரும்போது நாம் அகப்புற இடைவெளிகளைத் தாண்டி இயற்கையை அறியத்துவங்குகிறோம். அப்போது இயற்கையும் நாமும் வேறில்லை என்பதை சொல்லின் துணையின்றி நாமே உண்ரமுடியும் என முடித்திருப்பார் எஸ்.ரா

#கற்றதும் பெற்றதும்
நான் ரசித்த ஜென் வரிகள்

#சாலையில் வெயிலைத் தவிர யாரும் இல்லை
-ஜென்

*உங்கள் நண்பர்களை தூரத்தில் தேடுங்கள்,
பகைவர்களை பக்கத்தில் தேடுங்கள்
-ஜென்

*உலகின் அனைத்து நீர்நிலைகளிலும் ஒரே நிலா தான் நீராடுகிறது
#ஜென்

*வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்துவிடுகிறது
#ஜென்

*இரவு நீள்கிறது என்பதற்காக, சூரியன் தன் வரவை ஒத்திப் போட போவதில்லை
#ஜென்

*கொடி அசைகிறதா?,காற்று அசைகிறதா?...
"மனம் தான் அசைகிறது"
-ஜென்

*பெருமையடையாதே
பெளர்ணமியின் முழுமையும்
ஓர் இரவுக்குத்தான்
-ஜென்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment