Saturday, 25 April 2020

கற்றதும் பெற்றதும்-91*மணி

கற்றதும் பெற்றதும்-91
*மணி

மு.வ எனும் இலக்கிய முன்னோடி

எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம் என்பார் மு.வ எனும் மு.வரதராசன். அவரின் எழுத்துகளும் என்றும் எளிமையானது.நேர்மறையான எண்ணத்தினை விதைத்தவர்.

#குறட்டை ஒலி

பள்ளிப்பருவத்தில் துணைப்பாட சிறுகதைகளை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.அப்போது படித்த இவரின் சிறுகதையான குறட்டை ஒலியை மறக்க முடியாது. எல்லா கதைகளும் கதைமாந்தர்தான் சொல்லுவார். அவ்வகையில் இதில் மேல்மாடியில் இருக்கும் ஹாவுஸ் ஓனர்தான் கதை சொல்கிறார்.

வாடகைவீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.அது குட்டி ஈன்றவுடன் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயை பிடித்து சென்றுவிடுகின்றனர்.தாயை பிரிந்த குட்டிகளை தேற்றுகின்றனர். இறுதியில் ஒரு குட்டி மட்டும் பசியால் கத்திக்கொண்டே இருக்கிறது.இறுதியில் அந்த தாய் தன் தாய்ப்பாலை பீய்ச்சி ஒரு தொட்டியில் அந்தக்குட்டிக்கு கொடுக்கிறார்.அதை படிக்கும்போது படிக்கிறவர்களின் நெஞ்சமும் கொஞ்சம் கலங்கிவிடும்.இப்போது அந்த மேல்மாடியில் குறட்டை ஒலி சத்தம் கேட்டது என முடித்திருப்பார். இதுதான் அவரின் கதைகளை தேடி வாசிக்க தூண்டுகோலாய் அமைந்தது.

#கல்வி

துவக்கக் கல்வியை வேலத்தில் நிறைவு செய்த வரதராசன், உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் பயின்றார்.முருகைய முதலியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். 1935ல் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய பரிசுத்தொகை ரூபாய் ஆயிரத்தைப் பெற்றார். தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து பின்  பி.ஓ.எல். பட்டம் பெற்றார்.  இவரது முதல் நூல் 'குழந்தைப் பாட்டுக்கள்' 1939ல் வெளியானது.

1944ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழத்தின் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.

#படைப்புகள்

1946-ஆம் ஆண்டு மு.வரதராசன் எழுதிய முதல் நாவல் "செந்தாமரை". 13 நாவல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். 1958-இல்   வெளிவந்த  "அகல்விளக்கு' 1961-ஆம் ஆண்டு  சாகித்ய அகாதெமி  விருது பெற்றது.  மு.வ. எழுதிய  "தமிழ் இலக்கிய வரலாறு' முக்கியமான படைப்பாகும்.

 தம் கருத்துக்களை "தம்பிக்கு" என கடிதமாய் எழுதினார். அவ்வகையில் அண்ணாவுக்கு முன்னோடியாய் விளங்கினார்.

#கதையின் தலைப்பு

ஒரு கதைக்கு பொருத்தமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். ஆனால் மு.வ அவர்களின் எல்லா கதைகளும் தலைப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். ஒரு பெண்ணை கள்ளாக பார்த்தலும் காவியமாய் பார்த்தலும் நம் கண்கள் தான் எனும் வகையில் கள்ளோ காவியமோ..

சிறுவயதில் செய்த தவறை நினைத்து வருந்துவதை நெஞ்சில் ஒரு முள் புதினத்திலும், ஒரு குடிசையில் எலிகளுக்கு மத்தியில் வாழ்வதை போலத்தான் பிரச்சனைகளுக்கு இடையில் மனிதர்கள் வாழ வேண்டும் என மண் குடிசையிலும்,இலக்கியம் கூறும் களவு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட பாவையிலும்,அணையும் விளக்கு பிரகாசமாய் எரிவதை அகல் விளக்கிலும் சுட்டிக்காட்டியிருப்பார்.

 #திருக்குறள்

கல்லூரியில் திருக்குறள் பாடம் எடுக்க வேண்டி இருந்தால் முன் தயாரிப்பு இல்லாமல் வகுப்பினுள் நுழையமாட்டாராம்.பரிமேழகர் உரைக்குப் பின் மு.வ வின் உரையே சிறப்பானதாக எளிமையானதாக இன்றளவும் கருதப்படுகிறது.

ஒரு முறை தன் நாவல் திருத்தப் பணியில் மா.ர.பொ.குருசாமி உள்ளிட்ட மாணவர்கள் அவர் நாவல் அச்சேற உதவினர்.அப்போது மா.ர போ அவர்கள் முகப்பு அட்டையில் தம் ஆசிரியர் பெயரை மு.வ என சுருக்கி அச்சிற்கு அனுப்பிவிட்டாராம். அச்சில் வந்த நூல்களை கண்ட மு.வ முதலில் அதிர்ச்சியடைந்து பின் ஏற்றுக்கொண்டதாக மா.ர.பொ ஒரு முறை நினைவுகூர்ந்தார்.

#பணிகள்

ஒரு எழுத்தராய்,ஆசிரியராய் பணியை துவக்கிய மு.வ பின் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.1961ல் சென்னை பல்கலையில் தமிழ்த்துறை தலைவரானார்.1971ல் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தரானார்.1972ல் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி இவரது தமிழ்ப் பணிக்காக டி.லிட். பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 

#ரசித்தவை

*கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது

*தெளிவாய் உணர்ந்து,முற்போக்காய் வாழ்ந்தால் சுற்றுப்புறம் வெறுக்கிறது.மந்தையோடு ஒன்றாய் கலந்து கண் மூடித்தனமாய் வாழ்ந்தால் மதிக்கிறது

*பாதை போட்டவர்களை பயணிப்பவர் நினைக்க வைப்பது வரலாறு

*பிறர் சுமையை சுமக்க ஆசைப்படாதீர்கள்,
உங்கள் புகழை மற்றவர் சுமக்கும் அளவுக்கு நீங்கள் வளர முயற்சி செய்யுங்கள்

*எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.

*ஜாதியை ஒழிக்க முடியாது.,
புறக்கணிக்க கற்றுக் கொள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment