Wednesday, 20 May 2020

கற்றதும் பெற்றதும்-94*மணி



அயோத்திதாசர் திராவிட இயக்கங்களின் முன்னோடி

இங்கே எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி நியாயங்கள் கற்பிக்கப்படும் . ஆனால் தர்மம் ஒன்று தான் எனும் 
புத்தரின் சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் அயோத்திதாசர்.தமிழர்,திராவிடர் என்ற இரண்டு அடையாளச் சொற்களையும் அரசியல் மையப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

தமிழகத்தில் திராவிட இயக்க முன்னோடியாய் திகழ்ந்தவரும் முதல் தலித் தலைவருமான க.அயோத்திதாசர் சென்னையில் பிறந்தாலும் நீலகிரி மாவட்டம் காத்தவராயன் எனும் ஊரில் புலம்பெயர்ந்து குடும்பத்தினரோடு வாழ்ந்து வந்தனர். எல்லீஸ் துரை காலத்தில் இவருடைய தாத்தா கந்தப்பன் ஆர்லிங்டன் பிரபுவிடம் வேலை பார்த்தவர்.இளம் வயதிலேயே தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம்,பாலி மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.நீலகிரியில் தோடர்கள் மற்றும் பழங்குடியினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து அவர்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கிய அனுபவத்தினால் அவருக்கு திராவிடர்கள் குறித்து ஆர்வம் ஏற்பட்டது.

#தியோசபிகல் சொசைட்டி

அயோத்திதாசரின் வாழ்வில் தியோசபிகல் சொசைட்டி முக்கிய பங்காற்றியது.1882ல் சொசைட்டி பம்பாயிலிருந்து சென்னை அடையாறுக்கு மாறியது. முக்கியமான பல ஆளுமைகள் இதில் இருந்தனர்.
அன்றைய நாளில் சுயமரியாதை உணர்ச்சியை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது தியாசபிகல் சொசைட்டி.அயோத்திதாசர், லட்சுமி அரசு முதலான மாற்று சிந்தனையாளர்களுக்கு உறைவிடமாய் இருந்தது. முக்கியமாக ஏழை மற்றும்
பஞ்சம சிறுவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தது.

அயோத்திதாசரின் வரலாற்றுப் பார்வையில் பண்டைய பறையர்கள் பெளத்தர்கள் என்றும்,நிலச் சொந்தக்காரர்கள் என்றும், அவர்களுடைய நிலத்தை ஆரியர்கள் எடுத்துக்கொண்டனர் எனவும் கூறினார்.கர்னல் ஆல்காட்டை சந்தித்து புத்த மதத்துக்கு மாறுவதாக கூறியதுடன் இலங்கை சென்று பிக்கு சுமங்கள நாயகேவிடம் தீட்சை பெற்று திரும்பினார். ராயப்பேட்டையில் 1898ல் சாக்கிய புத்த சங்கம் ஏற்படுத்தினார். சிக்காகோவில் இருந்த டாக்டர் பால்காரஸ் இதன் தலைவராக இருந்தார்.பெளத்த தர்மத்தை பரப்ப பத்திரிக்கை ஆரம்பிக்க எண்ணினார்.பத்திரிக்கை ஆரம்பிக்கும் முன் இந்திய தேச வரலாற்றை எழுதினார்.1500 ஆண்டுக்கு முன் அரசர்களையும் பெருங்குடிகளையும் வசப்படுத்தி வாழ்ந்தவர் உயர்சாதி எனவும், அவர்களை எதிர்த்தோரை தாழ்ந்த சாதி என பிரித்திருப்பதை உணர்ந்தார்.

#பத்திரிக்கையாளராக

பிராமணிய நலனை மையப்படுத்திய இதழ்களுக்கு நடுவே சமூக சீர்திருத்தத்திற்காக பத்திரிக்கை துவங்கும் அவசியம் ஏற்பட்டது. சாதிபேதமின்மை,திராவிடரை மேம்படுத்துதல்,அனைவரும் சமம் எனும் நோக்கத்திற்காக செயல்பட ஆரம்பித்தார்.

1907ல் "ஒரு பைசா தமிழன்" வார இதழ் துவங்கி 1908 ல் தமிழன் என வந்தது.தமிழன் பத்திரிக்கைக்காக, கோலார் தங்கவயல் பெளத்தர்கள் கூடி சிறு அச்சு இயந்திரம் வாங்கித்தந்து உதவினார்கள்.1914 வரை தாசர் இதன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார்.தலித்துகளை அவமதிக்கும் அன்றைய சுதேசமித்திரன் உள்ளிட்ட பிராமணிய இதழ்களோடு விவாதப்போர் புரிந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்வகோஷர்,நந்தன் எனும் பெளத்த அரசர்கள் ஆண்ட தேசத்தில் ஆரியர்,பாரசீகர் குடியேறினர் எனும் வரலாற்றிலிருந்து துவங்கி 
1910-11 ம் ஆண்டில் 'இந்திரர் தேச சரித்திரம்' எனும் முழு ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துகளை தொடராய் வெளியிட்டார். வரலாறு அற்றவர்களுக்கான வரலாறு என தெரிவித்தார்.திருக்குறள்(திரிபீடகத்தின் வழிநூலாக திரிகுறள் என்றே எழுதினார் ஆனால் முற்றுபெறவில்லை),ஆத்திச்சூடி உள்ளிட்ட நீதிநூல்களுக்கு உரைகளை தமது பத்திரிக்கையில் எழுதினார்.

#பெளத்தராக

இந்துக்களிடம் சாதிமுறை உண்டு.பெளத்தத்தில் இல்லை என கூறி பெளத்தத்தை தழுவினார்.

1917ல் சென்னையில் முதல் பெளத்த மாநாட்டை கூட்டினார்.இதில்தான் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவிடம் ஆதிதிராவிடர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கோரி லட்சுமி நரசு தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதை தொடர்ந்து 1920,1932,1952ம் ஆண்டுகளில் பெளத்த மாநாடுகள் நடைபெற்றன.நவீன விழிப்புணர்வு விதைகளை விதைத்தாலும் தலித்துகள் முழுமையாய் அறுவடையை அனுபவிக்கவில்லை.
புரொட்டஸ்டண்ட் கிறித்தவம் இக்காலத்தில்தான் வேகமாய் வளர்ச்சி பெற்றது.குறிப்பாக கன்னியாகுமரியில் 99%பேர் இணைந்தனர்.கல்வி,மருத்துவம், வசதி என தலித்துகள் தங்களையே முன்னேற்றிக் கொண்டனர். வட தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு மேலை நாட்டு பெளத்தர்களின் உதவி கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மைசூர் கோலார் தங்கவயல், மாரிக்குப்பம்,வட ஆர்க்காட்டிலும் பர்மா,இலங்கை, தென்னாப்பிரிக்கா என கடல்கடந்து  பெளத்த சங்கங்கள் துவங்கி நடைபெற்றன.

#தாழ்த்தப்பட்டோரின் முன்னோடியாக

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே அகவிடுதலையாகிய சமூக விடுதலை அடைய முயன்றார். தரிசு நிலங்களை உழைப்பவனிடம் அளிப்பதன் மூலம் வர்க்கப் பிரச்சனையை தகர்க்கலாம் எனக்கூறியதோடு விவசாயம், தொழில்கள்,கல்வி,மனித விருத்தியென நான்கு படிகளை முன்வைத்தார்.தமிழ்நாட்டில் ஆதிவாசிகளையும்,தமிழர்களையும்
திராவிடர் வழி வந்தவர்களாகக் கருதினார்.தலித்துகள் புத்த மதத்துக்கு மாறினால் அவர்களின் கீழ்நிலை நீங்கும் என வெளிப்படையாய்க் கூறினார்.

யாவற்றிற்கும் மேலாக சித்த வைத்திய நிபுணராகத் திகழ்ந்தார்.வாதம்,பித்தம், சிலோத்துமத்தால் தோன்றும் வியாதிகளுக்கு மனம்தான் முக்கிய காரணம் என்பார்.மேலும் சித்த மருத்துவ குறிப்புகளையும் எழுதியுள்ளார்.

*புத்தரின் தேகத்தைத் தகனம் செய்ய எடுத்துப்போன போது ஆனந்த கூத்தாடி கொண்டாடியது கால மாற்றத்தில் துக்கக் கூத்தாகிவிட்டது. இதனை தடை செய்ய வேண்டுமென கூறினார்.

*பழந்தமிழ் இலக்கியங்கள்,பெளத்த சமய நூல்கள் மறுவாசிப்பு செய்து பெளத்த மதத்தை விளிம்பு நிலை மக்களின் மதமாக உருவாக்க நினைத்தார்.

*பெளத்தர்கள் வேறு;இந்துக்கள் வேறு என 1881 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாசர் கூறியதை பிரிட்டிஷார் ஏற்று அடுத்த கணக்கெடுப்பில் 1911ல் சாதியற்ற திராவிடர்கள்(ஆதித்தமிழர்கள்) என பதிவு செய்தனர்.

*அந்நாளில் இவரை ஆங்கிலேய ஆதரவாளர் எனக்கூறினர்.ஆனால் தன் சமூக மக்கள் கெளரவத்தோடு வாழ வேண்டுமென பாடுபட்டார்.

*தாசரின் வாழ்வும் வாக்கும் அம்பேத்கர்,பெரியாருக்கு மிகுந்த உத்வேகம் தந்தது.அயோத்திதாசரின் எழுத்துக்களை தலித் சாகித்ய அகாதெமி வெளியிட்டது.மறைந்த தலித் எழில்மலையின் முயற்சியால் அயோத்திதாசரின் நினைவாக சென்னையில் தேசிய சித்த வைத்திய ஆராய்ச்சி மையம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது. 
அயோத்திதாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது. தனித்துவமானது.
அனைத்து சமயத்தாரையும் சகோதரர்களாக பார்த்தது.இன்றைய தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக எழுப்பிய முதல் குரல் அயோத்திதாசர் என்பதை அவரின் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment