Saturday, 24 April 2021

இனியவை இனியவை இறையன்பு-சுந்தர ஆவுடையப்பன்

#30D0044
நாள்-30
புத்தகம்-49

#
இறையன்புவின் எழுத்துக்களை நான் பள்ளிக்காலம் தொட்டு படித்து வருகிறேன். இப்பொழுதும் இறையன்பு என்று புதிய புத்தகத்தினைக் கண்டால் உடனடியாக வாங்கி விடுவேன். ஏனெனில் அவரின் கருத்துக்கள் ஆகட்டும், படித்த தகவல்கள் ஆகட்டும் மிகவும் புதுமையாக இருக்கும். புதுமையான பல புத்தகங்களிலிருந்து அதிலிருந்துதான் ரசித்தவற்றை முக்கியமானவற்றை தொகுத்து சுந்தர ஆவுடையப்பன் இப்புத்தகத்தில் தந்துள்ளார். சிந்தனை உலகம் ரசனை உலகம் சித்திர விசித்திரங்கள் படைப்புலகம் ஆளுமை துளிகள் என ஐந்து தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களில் தான் ரசித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

#வாழ்க்கை

இறையன்புவின் சிந்தனை வானம் பெரிது. அதில் வாழ்க்கை ஒரு வழிபாடு புத்தகத்தில் சொல்கிறார்.. மனிதன் விழிப்புணர்வோடு இருந்து விழிப்புணர்வை கூர்மைப்படுத்தி வந்தால் அடுத்தவர் எண்ணங்களை கூட படித்து விடலாம் என்று மனதை பண்படுத்தும் வித்தையைக் கூறுகிறார். பாதுகாப்பின்மை ஏற்பட ஆரம்பித்து விட்டது என்ற எண்ணமே அதன் பயத்துக்கு காரணம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கள், கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள் சீன கதைகள் என கட்டுரையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

இல்லறம் குறித்து கூறுகையில் முல்லாவின் கதையை சொல்கிறார்.

 திருமணம் செய்து கொண்டவர்கள் அதிக நாள் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது உண்மையா?

 முல்லா சொன்னார் :இல்லை ஆனால் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அதிக நாள் வாழ்ந்து விட்டு ஒன்று சலிப்பு ஏற்படும்.. என்று தலைப்புக்கு ஏற்ற சுவாரஸ்யமான தகவல்களை சொல்வதில் அவர் இன்னும் ஒரு படி மேலானவர்.

ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள கன்ஃபூசியஸின் கருத்தை மேற்கோள் காட்டுகிறார் "நான் ஒவ்வொரு நாள் முடிவிலும் மூன்று கேள்விகளை கேட்டுக் கொள்வேன். நான் என் திறமைகளை அடுத்தவர்களுக்கு பணியாற்ற ஏதுவாக பயன்படுத்தியுள்ளேனா? என் சொற்களெல்லாம் உண்மையுடனும் நம்பகத்தன்மையுடன் இருந்தனவா? நானே கடைபிடிக்காத அறிவுரையை நான் கூறியிருக்கிறேனா? என்று. இப்படி பலரும் இந்த மூன்று கேள்விகளை கேட்டுக் கொண்டால் வீண் சண்டையோ விவாதமுமோ இருக்காது.

#சமூகம் சமூக மதிப்புகள்

சமூகம் சார்ந்த கருத்துக்களையும், அறச் சொற்களையும் பயன்படுத்துபவர் இறையன்பு. போரிடாமல் வாழ்வது குறித்தும்
கோபம் கொள்ளாது, கீழ்ப்படிந்து நடப்பதற்கான காரணங்களையும், எளிமையாகவும் ஆடம்பரம் தவிர்த்தும், அறிவை வளர்க்க நாள்தோறும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறார். ஆன்மீக தேடல் குறித்து சொல்லும்போது சீன கதைகளையும் ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்களையும் நமக்கு கூறுகிறார். 

புகழ் குறித்து கூறும்போது காலம் தாண்டியும் சிலருக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்துக்கு காரணம்.. அவர்கள் அங்கீகாரத்துக்கு ஆசைப்படாமல் வாழ்ந்ததால் தான்.. உண்மையைத் தேடுவதாகவே அவர்களுடைய பயணம் அமைந்திருந்த காரணத்தால் தான் என்று மேலும் கூறுகிறார். நேர்மை என்று கூறும் போது மற்றவர்களுக்காக நேர்மையாக இருப்பவர்கள் அவர்கள் தனிமையில் இருக்கும் போதெல்லாம் தவறிழைப்பார்கள் என்ற உளவியல் காரணத்தையும் கூறுகிறார்.இதைத்தான் உள்நோக்கத்துடன் சொல்லப்படுகின்ற உண்மையும் பொய் போல்தான் என்று தாகூரின் மேற்கூற்றையும் கூறுகிறார்.

#முன்னேற்றத்தின் மூலங்கள்

ஒரு இளைஞன் புது செருப்பு வாங்க கடைக்குள் நுழைகிறான். கால் அளவை எடுத்து வைத்த கயிறு வீட்டில் வைத்து விட்டு வந்ததால்.. நாளை வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி திரும்பி விட்டான். கால்களே இருக்கும்போது கால் அளவை தேடுவதை போலத்தான் சிலரின் அறிவு இருக்கிறது என்று சிந்தனை நிந்தனை என்னும் கட்டுரையில் கூறுகிறார்.

தனித்து இயங்காது சில காரியங்களில் கூட்டு சேர்ந்து இயங்குவது மிக முக்கியமானதாகும். ஒரு மூளையில் சிந்திப்பதை விட இரு மூளைகளில் சிந்திப்பது மிகவும் அற்புதமானது என்ற ஒரு ஆங்கில மேற்கோள் இருப்பதைப்போல.. எறும்புகளின் உவமையை அருந்ததிராயின் கட்டுரை வழியே விளக்குகிறார். எறும்புகள் இணையும் போது அவற்றின் மூளை ஒரே மூளையாக திரண்டு விடுகிறது என்கிறது விஞ்ஞானம். எறும்பு போல மனிதர்களும் கூட்டு சேர்ந்து ஒரு காரியத்தில் ஈடுபடும் போது அவர்களின் சிந்தனை வளர்ச்சி அடைகிறது என்கிறார்.

#எழுத்து சொல் பேச்சு

ஒவ்வொன்றும் உயிர் எழுத்து என்னும் கட்டுரையின் கிப்பன் தன்னுடைய ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி எனும் நூலை எழுத 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம். பிளாட்டோ தன்னுடைய குடியரசு நூலின் முதல் வரியை ஒன்பது விதமாக எழுதி திருத்தி வந்த பிறகுதான் வடிவமைத்தாராம்.
 ஹெமிங்வேயின் வயோதிகமும் கடலும் என்ற நூல் 202 தடவை திரும்பத் திரும்ப எழுதினாராம். இவ்வாறு எழுத்தினைப் போல சொற்களுக்கு உண்டான ஆற்றலும், சொற்களின் முக்கியத்துவமும் உள்ள பகுதிகளும், மனிதர்களின் பேச்சு குறித்தும், புரிதல் குறித்தும் ,அவர்களின் நகைச்சுவை குறித்தும் சிந்திக்கும் திறன் குறித்தும் இக்கட்டுரையில் முழுநீளமாக எடுத்து ரைக்கிறார்.

#ரசித்தது

*போருக்கு தோட்டாக்களைக் காட்டிலும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது அவசியம் பெர்னாட்ஷா.

*உலகத்தில் விலை மதிப்புள்ளவை
நம்மிடம் இருப்பவையல்ல,
நம்மிடம் இருப்பவர்கள்.

*உதிர்ந்த பூக்கள் ஒட்டுவதில்லை,
கழிந்த நாட்கள் கிட்டுவதில்லை

*கிடைத்ததிலிருந்து நினைத்ததை அடைய பாடுபட வேண்டும்

*ஒரு மாடி வீடு எழ ஆயிரம் குடிசைகள் இடிக்கப்பட வேண்டியதாகிறது -கஜல்

*தான் அழகு என்று நினைக்காத போது தான் அழகு அரும்ப ஆரம்பிக்கிறது

*நம்முடைய பிரார்த்தனை என்பது புகார் பட்டியல் தான்

*கருணையும் கோபமும் இயல்பாக வராவிட்டால் அது அழகாக இருப்பதில்லை 

*உண்மை எப்போதும் தன்னை மெய்ப்பிக்க முயற்சி செய்வதில்லை

*கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம்

சிறுகதையோ நாவலோ தன்னுடைய புனைவின் வழியாக எப்படியும் எழுதிக் குவித்து விடலாம். ஆனால் ஒரு கட்டுரை எழுதுவது என்பது தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிப்பது போல.. பல்வேறு ஆழ்ந்த அனுபவங்கள், புத்தகங்கள், அறிவியல் கருத்துகளிலிருந்து தகவல்களை திரட்டி.. ஒன்றுகூட்டி படிப்பவர்களுக்கு இனிமையாக தரவேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் இத்தகவல்களை ஏற்கனவே அவர்கள் படித்து இருக்கக்கூடும்.. படித்ததை சுவையாக தரக்கூடிய வித்தையை கட்டுரையாளர்கள் கையாண்டு இருப்பார்கள். ஒரு நல்ல புத்தகம் நூறு புத்தகங்களை அறிமுகப்படுத்தும் என்பார்கள், அதன் வழியே இப்புத்தகத்தின் மூலம் சீன கதைகள் அறிஞர்களின் தத்துவங்கள் படிக்கவேண்டிய நூல்கள் என ஒவ்வொரு கதவையும் திறந்து கொண்டே செல்கிறது. இறையன்புவின் புத்தகங்களை சுருக்கமாய் படிக்க விரும்புபவர்கள் இப்புத்தகத்தைப் படிக்கலாம். 

தொடர்ந்து பகிர்வோம்

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment