Tuesday, 15 June 2021

அது ஒரு பால்பாய்ண்ட் பேனா காலம்..! - 90s கிட்ஸ் பக்கங்கள் #MyVikatan


பேனா நிப்புகளின் இறுதி வரலாற்றை

பால் பாய்ண்ட் பேனாதான் எழுதியது

-பாரதி கிருஷ்ணகுமார்


சிறு வயதில் பால் பாய்ண்ட் பேனாவில் பால் ஊற்றி எழுதுவதாக நினைத்திருந்தோம். ஒன்றாம் வகுப்பில் பென்சில் பிடிச்சு எழுத ஆரம்பித்து.. அப்படியே பென்சிலுக்கு முன்னேறி.. கடைசியாக ஐந்தாம் வகுப்பில் தான் பால் பாய்ண்ட் பேனா அறிமுகமானது. வேகத்தையும், நிதானத்தையும் கற்றுக்கொடுத்தது இந்த பேனாக்கள்தான். கையெழுத்தை வைத்தே நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தது.


இன்று பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ பால்பாய்ண்ட் பேனா நிச்சயம் இருக்கும். ஆண்டவன் படைப்பில் அடுத்தவங்ககிட்ட இருந்து வாங்கி எழுதும் பேனா அத்தனையுமே அருமையா எழுதுவது இன்றளவும் ஒரு அதிசயமே.


#பால் பாய்ண்ட் பேனா


TNPSC போட்டித் தேர்வு எழுதும் போதுதான் பந்து முனைப் பேனா என்பது பால்பாய்ண்ட் பேனாவின் இன்னொரு பெயர் என தெரிந்தது. பித்தளை,எஃகு, டங்ஸ்டன் கார்பைடால் அந்து பந்து செய்யப்பட்டதாக இருந்தது. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பதுபோல ஆரம்பத்தில் மரத்தின் மீது எழுத, தோலின் மீது எழுத இறகில் எண்ணெயை தொட்டு எழுத இயலாததால் தோல்மீது எழுத 1888ல் ஒரு பேனாவை உருவாக்கினார் ஜான் ஜே.லவுட். ஆனால் அதற்குப் பின் அடுத்தகட்டத்தை எட்டவில்லை


நுனியில் சிறிய சுழலும் எஃகு பந்து.. கடிதம் எழுதுவதற்கு கரடு முரடாய் இருந்தது. மை நிரப்புதல், மை மற்றும் பந்து முனை அமைப்பதில் வணிக ரீதியில் தோல்வி கண்டன. காகிதத்திற்கு பொருத்தமாகவும் எழுத முடியவில்லை


அதன் பின் லாஸ்லோ பைரோ எனும் ஹங்கேரியின் செய்தித்தாள் ஆசிரியர் மை இட்டு நிரப்பி எழுதுவதிலும், வேதியியலாளர் ஜியோர்க்கியுடன் இணைந்து மை உலருதல் போன்ற விஷயங்களிலும் வெற்றி கண்டார்.

நிப் க்கு பதிலாக பந்து முனையை உருவாக்கினார். ஆறு மாதங்களுக்கு மை நிரப்ப வேண்டியதில்லை என்பது அப்போது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. பிரிட்டனில் ராயல் விமானக் குழுவினர் 3000 அடி உயரத்தில் பால்பாய்ண்ட் பேனாக்களை பயன்படுத்தும்போது பவுண்டைன் பேனா போல் மை கசியாது இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் விற்பனைக்கு வந்தது. அர்ஜெண்டினாவில் காப்புரிமைபெற்றார். ஓரளவு வெற்றி கிடைத்த பின் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.


பிரிட்டனில் மைல்ஸ் -மார்ட்டின் பென் நிறுவனம் 1945 கிறிஸ்துமஸ் முதல் பால் பாயிண்ட் பேனாக்களை பொதுமக்களுக்கு விற்றது. பிரான்சில் பேனாக்களின் காப்புரிமையை வாங்கியவர் மார்செல் பிச். இவர் பால் பாயிண்ட் பேனாவில் லாபம் பெறாமல் அதை மலிவாய் விற்க தீர்மானித்து வெற்றி கண்டார்.


அர்ஜெண்டினா வணிக பயணத்தில் இப்பேனாவை பார்த்த மில்டன் ரெனால்ட்ஸின் மூளையில் ஒரு பொறி தட்ட.. இப்பேனாவை மறுவடிவமைப்பு செய்து தன் ரெனால்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரித்து விற்றார்.

நியூயார்க் நகரில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சில ஆயிரம் பேனாக்கள் விற்றுத்தீர்ந்தது. ஒவ்வொரு சிந்தனையும் விற்பனைக்கு உள்ளது என விளம்பரப்படுத்தினர். இரண்டு வருடத்திற்கு மை நிரப்ப வேண்டாம், தண்ணீருக்கு அடியில் எழுதலாம் எனக்கூறினர். எவர்ஷார்ப் மற்றும் ரெனால்ட்ஸ் இடையே போட்டி அதிகரித்தது. காப்புரிமை பிரச்னையில் ரெனால்ட்ஸ் விலக பார்கர் பென்ஸ் நிறுவனம் புதிய பால்பாய்ண்ட் பேனாவை 1954ல் அறிமுகப்படுத்தியது.


#அன்று


*நுகர்வோருக்கு பந்து முனை பேனா பெரும் நிம்மதியை அளித்தது.

*பவுண்டைன் பேனாக்கள் போல் மை தொட்டு எழுத வேண்டியது இல்லை. மை கசியாமல் இருந்ததால் கைகள் சுத்தமாக இருந்தன.

*பல மை ரீபிள்கள் இருந்ததால் பல வண்ணங்களில் எழுதினர்.

*உலோலங்கள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டதால் எங்கும் எடுத்துச் செல்வது எளிதாய் இருந்தது.

*பொதுவாக பந்துமுனை பேனா மையில் 3 வகைகள் உள்ளன.
High viscosity, Low viscosity, Ultra low viscosity இதில் மூன்றாம் வகை மைக்கு மட்டும் gel follower அவசியம்


*Refill தயாரிக்கும் போது centrifugal process மூலம் மையில் உள்ள காற்று குமிழிகள் வெளியேற்ற படும் உக்தி சரிசெய்யப்பட்டது


#பால்யமும் பால்பாய்ண்ட் பேனாவும்


பென்சிலில் எழுதிப் பழகிய பின் தான் பால்பாய்ண்ட் பேனா வாங்கித் தருவார்கள். முதன் முதலில் விலை குறைந்த பேனாதான் வீட்டில் கிடைக்கும். எழுதும்போதே பஞ்சு பஞ்சாய் வரும். பருத்தி ஆபிசில் தயாரிச்சிருப்பாங்க போலனு நினைச்சு எழுதுவோம். சில பேனாக்கள் முனையில் கல் இருப்பது போல அழுத்தி உளி போல எழுத்தை செதுக்குவோம். அந்த அச்சு அடுத்த பக்கம் மட்டும் தெரியாம கடைசிப் பக்கம் வரை தெரியும். அப்ப ரெனால்ட்ஸ் பேனா வைத்திருப்பவன் ஊருக்குள்ள ஜமின் தார் மாதிரி. கடன் கேட்டாலும் கொடுக்க மாட்டான். அவனா இங்க் எவ்வளவு இருக்குதுனு கழட்டி பார்க்கும் போது ஆளுக்கொரு பாகம் கையில் வச்சிருக்க கொடுத்தால் தான் உண்டு.


Reynolds பேனாவை மூடி சூடிய மன்னன் எனலாம். ஐந்து ரூபாய்க்கு வெள்ளை மற்றும் நீலவண்ணத்தில் இருக்கும். புளூ கலர் கண்ணாடியின் கீழ் பாகத்தில் சிறிய பேப்பரில் நம் பெயர் எழுதி ரீபிளில் சுற்றிக்கொள்வது அடையாளம். புகையிலை விரிஞ்சா போச்சு, ரெனால்ட் பேனா உடைஞ்சா போச்சு என்பது போல் மேல் பாகம் உடைந்தால் டைவர்ஸ் அப்ளை பண்ணின கணவன் மனைவி போலத்தான். அப்புறம் வெள்ளைப்பாகத்தின் டேப் சுத்தி சீலை கட்டியிருப்போம்.


யாராவது கிட்ட காசு கொடுத்து செகண்ட் ஹேண்ட் வாங்கி மாட்டுவோம். பேனா எழுதலைனா அதற்கென நிபுணர்கள் இருந்தனர். பல்லால் நிப்பை கடித்து இழுத்து.. அந்த நிப்பை இட்லிக்கு சட்டினியை தொடுவது போல் இங்க்கை தொட்டு மாட்டினால் மீண்டும் பேனா எழுத துவங்கும். அதெல்லாம் அவசர சிகிச்சைக்கான நிமிடங்கள்.


ரெனால்ட்ஸ் பேனா வைத்திருப்பவனுக்கு நம்பி பொண்ணு கொடுக்கலாங்கிற ரேஞ்சுக்கு இருந்த காலம். கையெழுத்து போட்டிக்கு இதில் எழுதினால் பாதி பரிசு நிச்சயம்.

கல்லிலே கலை வண்ணம் கண்டது மாதிரி அந்த ரெனால்ட்ஸ் உறையின் எழுத்துக்களை ப்ளேடால் சுரண்டி இந்தியா எழுத்து வருவது போல் செய்வோம்.


*040 மற்றும் 045 என இருவகை இருக்கும். அதை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் FLAMES போடாமலேயே எளிதில் ப்ரண்டாவார்கள்.


*டேப் ரெக்கார்ட்ல டேப் சுத்த பால்பாய்ண்ட் பேனாவே பயன்படும்.


*கோபத்தில நகத்தை கடிப்பதன் முன்னோடி இதன் மூடிதான். கோபம், துக்கம், சந்தோசம் என அத்தனையும் பதம் பார்த்தது.


*பேனாவை பரிசு கொடுத்தால் பிரிஞ்சிருவோம் என்பதால் மூச்சிருக்கும் வரை பெண்களுக்கு மட்டும் பேனா பரிசு கிடையாது.


*உன் பெயர் எழுதிய சந்தோசத்தில் இருக்கிறது பேனா என கவிதை எழுதி முதல் பேனாவில் முதல் கையெழுத்து மனசுக்கு பிடிச்சவங்க பெயர் எழுதுவோம்


*இன்றைய டாட்டூ நவநாகரிகத்தின் முன்னோடியாய் அன்றே பால்பாய்ண்ட் பேனாவில் உடலில் ஓவியம் வரைந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள்.


*செகணட் ஹேண்ட் கார் போல செட்டாகாமல் போகும் இரண்டாம் முறை பயன்படுத்தும் ரீபிள்.


*பேனா காணாமல் போகும் போது கண்ணகி சிலம்பை உடைத்தது போல் என் பேனாவில் இந்த எழுத்து சுரண்டியிருக்கும். பேனாவின் பின் துளை இருக்கும், மூடி கடித்திருக்கும்னு உண்மையை நிரூபிக்க முடியும்.


*பேனா மூடி சிறிதாய் இருப்பதால் பாக்கெட்டில் வைக்க சரிவராது. கீழே விழுந்து அடிக்கடி தொலைந்து விடும்.


*உலகம் விரும்பும் உன்னத பேனாவை வாங்க முடியாத பலருக்கு டூப்ளிகேட் பேனாதான் கிடைத்தது.

மேல்நிலை வகுப்புக்குச் சென்றவுடன் மை பேனாவுக்கு மாறினாலும் கையெழுத்து அழகாய் இருக்க பால்பாய்ண்ட் பேனாக்களையே தேர்வு செய்கின்றனர். இன்று பேனாவுக்கு பேங்கில் இருக்கும் மதிப்பு அபரிமிதமானது. ஒன் யூஸ் பென் வந்த பிறகு பால்பாய்ண்ட் அதிகம் குப்பைகளில் காணமுடிகிறது. மீண்டும் இங்க் பேனாக்களுக்கு மக்கள் செல்வது சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது.


"கிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலில் முடிகிறது ஒரு பால்பாய்ண்ட் பேனாவின் வாழ்க்கை’’ என இணையத்தில் படித்த வரி நினைவுக்கு வருகிறது.


-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment