Friday, 18 June 2021

ஓட்டை விழுந்த கப்பலில் தண்ணீரை அள்ளி கொண்டிருக்கிறோம்! - விழிப்புணர்வு பதிவு #MyVikatan


எதிர்காலம் இனி வழக்கமான எதிர்காலமாக இருக்காது'

-ஆர்தர்.சி.க்ளார்க்

அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்டது ப்ளாஸ்டிக்.இரும்பை விட உறுதியாக, ரப்பரைவிட அதிக வளையும் தன்மையுடனும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் விரட்டி அடித்துவிட்டு ப்ளாஸ்டிக்களே அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுகின்றன.இதில் பெரிய அரக்கனாய் உலகெங்கும் வியாபித்திருப்பது ஒற்றை பயன்பாடு ப்ளாஸ்டிக் தான்.சூழலியலுக்கு அதிகம் குந்தகம் விளைவிப்பதும் இவைகள் தான். இதில் உள்ள மூலக்கூறுகள் மறுசுழற்சிக்கும் ஒத்துழைப்பதில்லை என்பதும் வேதனையான விஷயம்.பல நாட்கள் இதன் பயன்பாடு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் புழக்கத்தில் அதிகம் வந்து கொண்டிருக்கிறது.1862ம் ஆண்டு அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் லண்டனில் நடைபெற்ற கண்காட்சியில் ப்ளாஸ்டிக் அறிமுகப்படுத்தப்பட்டது.


#உலகளவில்

உலகில் உள்ள ப்ளாஸ்டிக் பொருட்களில் பாதி ஒரு முறை பயன்படுத்தும் பொருட்கள்தான்.

ஆண்டு தோறும் 300 மில்லியன் டன் ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

எனவே 2025ம் ஆண்டுக்குள் உலகில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றியது. சுற்றுச்சூழல் சட்டமன்றத்தில், 170 நாடுகள் 2030க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை "கணிசமாகக் குறைப்பதாக" உறுதியளித்தது.

2019 ல் 450 பில்லியன் டாலர்களாக இருந்த உலகளாவிய பிளாஸ்டிக் சந்தை அளவு 2027 க்குள் 579.19 பில்லியன் டாலராக இருக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இது 73 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கருத்துப்படி, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 79 சதவீதம் குப்பை கிடங்குகளிலும், பொது வெளிகளிலும் குவிந்துள்ளதாக கவலை தெரிவித்தது. ஆண்டுதோறும் அதிகம் உற்பத்தியாவதும், அதிகம் வீணாவதும் ப்ளாஸ்டிக்குகளே.


#இந்தியாவில்


ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (single use plastic) இந்தியாவில் ஜூன் 5, 2018 அன்று, ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் ஜூலை 1, 2022 க்குள் நாடு தழுவிய தடை விதிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டது.120 மைக்ரான் தடிமன் கொண்ட ப்ளாஸ்டிக் கேரி பேக்குகள் படிப்படியாக அகற்றவும், ப்ளாஸ்டிக்கிலான சிறு பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பொருள் உற்பத்தி குறைக்கவும் அறிவித்தது.


இதனை தொடர்ந்து மாநிலங்களும் ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு தடை விதித்தது.

சிக்கிம் அரசாங்கம் நாட்டின் முதல் பிளாஸ்டிக்-பை தடையை 1998 இல் நிறைவேற்றியது.இதனை தொடர்ந்து இந்தியாவில் 1999ல் ஒரு முறை பயன்படுத்தும் பாலிதின் பைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


2011ல் குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா, சாக்லெட்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்தது ஆனாலும் அது முடியவில்லை.2016ல் ப்ளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் பலபொருட்களின் பேக்கேஜிங் முறையில் இரண்டாண்டு திட்டத்தை விதித்து பின் 2018ல் நீர்த்துப் போனது.


*இந்தியாவின் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு 11 கிலோவாக உள்ளது.


*ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு மலிவு விலையில் மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை.அதனால் இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை


*எளிமையானது,விலை குறைவு என்பதால் இன்று வரை மக்கள் இதனை தொடர்ந்து உபயோகிக்கின்றனர்.


*தடைகள் விதிக்கப்படும் போது சிறிது காலம் கட்டுப்பாடு இருக்கிறது. பின் மீண்டும் வந்துவிடுகிறது.


* ப்ளாஸிடிக் கழிவுகளை பிரித்தலில் சில மாநிலங்கள் மட்டும் சிறப்புற செய்வதால் மற்ற மாநிலங்கள் இத்திட்டத்தில் தோல்வியடைந்தன


*,ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் உற்பத்தியை குறைக்காமல் நுகர்வை குறைக்க முடியாதது இதில் உள்ள குறை

*மத்திய அரசு தடை விதித்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் போன்றவை பலவீனமாக இருப்பதால் இச்சவாலில் தோல்வியுறுகின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.


*நுகர்வோரும் கடைக்குப் போகும் போது துணிப் பை எடுத்துச்செல்லும் விழிப்புணர்வு குறைவாய் உள்ளனர்


*சுற்றுலா தளங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ப்ளாஸ்டிக் இல்லாத நிலை உள்ளது.



#தமிழகத்தில்

தமிழகத்தில் 2018 ஜூன் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு ஜனவரி 1, 2019 முதல் ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் தடை செய்தது. பெரிய துணிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் துணி பைகளுக்கு மாறியது நல்ல முன்னேற்றம். அரசும் அபராதம், சட்ட விரோதமாய் இயங்கும் நிறுவனங்களுக்கு சீல் வைத்த நிகழ்வுகளும் நடந்தன. சில மாவட்டங்களில் அங்கு உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதால் குப்பைகள் சற்று குறைகிறது.


ப்ளாஸ்டிக் வெகுவாக குறைந்தாலும் முற்றிலும் அகற்றப்படவில்லை. ரகசியமாய் தொடர்ந்து உற்பத்திகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு மாற்றான வாழை இலை, தரமான ப்ளாஸ்டிக் பைகள் விலை அதிகம் என்பதால் சிறு வியாபாரிகள் மலிவு விலை ப்ளாஸ்டிக் பைகளை நாடுகின்றனர்.


ஹோட்டலில் சாம்பார் பொட்டலங்கள், டீக்கடையில், மீன் கடையில் இங்கெல்லாம் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. உள்ளூர்களில் தடை விதித்தாலும் வெளி மாநிலங்களிலிருந்து இப்பைகள் நுழைந்துவிடுகின்றன. இதனை முதலில் தடுக்கும் செயலில் ஈடுபட வேண்டுமாய் வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மக்கும் ப்ளாஸ்டிக்களிலும் போலிகள் உலாவுகின்றன. உதாரணத்திற்கு 400ரூ பைகள் 250ரூபாய்க்கு கடைகளுக்கு கொடுக்கப்படுகிறது.இதனால் இதில் இன்னும் வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கிறது


#சவால்கள்


ப்ளாஸ்டிக்குகளில் இரு வகைகள் உள்ளன.வெப்பத்தால் இளகுபவை இது வெப்பப்படுத்தும் போது இளகும், குளிர்விக்கும் போது இறுகும். மதிப்புமிக்கது. உதாரணத்திற்கு PVC, வினைல், செல்லுலாய்டு போன்றவை. இத்தன்மையுடைய பொருள்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.


மறுசுழற்சி செய்யப்படும் ஒவ்வொரு முறையும், பிளாஸ்டிக்கின் தரம் மற்றும் ஆயுள் குறைவதாலும், பிளாஸ்டிக் மறுசுழற்சியை 2 அல்லது 3 முறை தான் செய்ய முடியும்.


மற்றது வெப்பத்தால் இறுகுபவை.இது குளிர்விக்கும் போது இளகாது. மதிப்பு குறைந்தவை. உதாரணத்திற்கு ஆஸ்கைடு ரெசின்,மெலனின் ரெக்சின் போன்றவை.இந்த இறுகும் பொருட்கள். மின் உற்பத்தி, சிமெண்ட் தொழிற்சாலையில் இணை எரிபொருளாய் பயன்படுகிறது.


நாடு தழுவிய ஒரு முறை பயன்பாடு ப்ளாஸ்டிக் பைகளுக்கு உற்பத்தி தடை மிகவும் அவசியம் என்கின்றனர் ஆர்வலர்கள். கொரொனா காலம் என்பதால் இதில் உள்ள இடர்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இதுவும் தேவை என்கின்றனர். நுகர்வோர்களை விட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருளின் விலை குறைவாக இருக்க வேண்டும். நுகர்வு தேவையின் அதிகரிப்பிற்கேற்ப மாற்று வழி காண வேண்டும். ஓட்டை விழுந்த கப்பலில் தண்ணீரை அள்ளி கொண்டிருக்கிறோம். ஓட்டைகளை அடைக்க வேண்டும். அதுவரை விழிப்புணர்வை மட்டுமே செய்ய முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியாது.

-மணிகண்டபிரபு


No comments:

Post a Comment