#அதிகாரத்தில் உள்ளவர்கள் சிபாரிசு செய்யலாமா?
நீதிக்கட்சியில் சென்னை மாகாண முதல்வராய் இருந்த பனகல் அரசர் பரிந்துரை கேட்டு வருபவர்களிடம் சொல்வாராம்
"For every one recommendation,I create nine enemies and one doubtful friend
ஒவ்வொரு சிபாரிசினைச் செய்யும்போதும் நான்,ஒன்பது விரோதிகளையும்,ஒரு உறுதியற்ற சந்தேகமான நண்பனையும் உருவாக்கிக் கொள்கிறேன் என்றாராம்.
#ஆரோக்கியத்தை பாதுகாக்க வழி?
ஆரோக்கியத்தை பாதுகாக்க எளிய வழி..ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் என்று அப்துல்காதிர் ஜிலானி எழுதிய வரி நினைவுக்கு வருகிறது
#ஒரு நெகிழ்ச்சிக் கதை?
நடிகர் ராஜேஷ் பகிர்ந்த ஒருகதை ஒரு பணக்கார குடும்பம் கோவிலுக்கு போறாங்க. அந்த வீட்டுக்குழந்தை அங்குள்ள குளத்தில் விழப் போகும் போது அங்கு வந்த ஒரு மருத்துவர் காப்பாற்றிவிடுகிறார். அதற்கு நன்றிக் கடனாக ப்ளாங்க் செக் ஒன்றை கொடுத்து 50 லட்சம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்.
திரும்பி மருத்துவமனைக்கு வருகிறார் மருத்துவர். அங்கு பணிபுரியும் கம்பவுண்டர்.. டாக்டரிடம் அவசரத்தேவைக்கு பணம் கேட்கிறார். டாக்டர் தன் பையிலிருந்த அந்த செக்கை கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார்
அதிகம் ஆசைப்படாத ஊழியர் 50 ருபாய் மட்டும் எழுதிக்கொண்டு புறப்படுகிறார்.
கதையின் தலைப்பு Good-Better-Best
மூவருக்கும் பொருந்தும் தலைப்பு.
நல்லவன்-மிக நல்லவன்-மிகமிக நல்லவன்
#மூடநம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி எது?
வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான். அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.
அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான். அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான். அது எந்திரம் என சொல்லவில்லை.
ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான். மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான். சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழுத்துக் கொண்டது. பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.
இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான். பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும், பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது என நினைக்கிறார்
எஜ்சிவெல் எழுதிய இக்கதை.. வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.
#சில பிரச்சனைகளை மெளனத்தினால் தீர்க்க முடியுமா?
எழுத்தாளர் சுந்தரராமசாமி கூறியது
Never explain! Never miss a good chance to keep silence
"மெளனம் கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்து விடுகிறது என்கிறார்
#ஒரு நீதிக்கதை?
காட்டுப்பன்றி மரத்தில் தன் கொம்புகளைப் தீட்டிக் கொண்டிருந்தது. அதை பார்த்த நரி எதிரி ஒருவரையும் காணவில்லையே, பின் ஏன் கொம்புகளை தீட்டுகிறாய் என்றது.
பன்றி சொன்னது.. எதிரி நம் முன்னால் வந்து விட்டால் அப்பொழுது எப்படி கொம்புகளை தீட்ட முடியும் என்பதால் இப்போது தீட்டுகிறேன் என்றது.
யுத்த காலத்திற்கு வேண்டிய காரியங்களை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்
#பணத்தை மட்டும் தேடிக்கொண்டு இருக்கிறவர்கள் பற்றி?
ஒருவர் காட்டுக்குள் கோல்ஃப் பந்தை பல மணி நேரமாக தேடிக் கொண்டிருந்தார். இறுதியில் ஆ பந்தை கண்டுபிடித்துவிட்டேன். இனி மைதானத்தை தேட வேண்டியதுதான் என்றார். இதுபோலத்தான் பணத்தை தேடும் அவசரத்தில் பலர் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்
#கடவுள் எந்த உருவத்தில் வருவார்?
டால்ஸ்டாய் எழுதிய dream merchant கதை இதற்கு பதில் சொல்கிறது.
ஒரு வணிகனின் கனவில் நாளை கடவுள் வருவதாக அறிவிக்கிறார்.மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறான்.
முதியவர்,சிறுமி,பெண்மணி மூன்று பேரும் வருவதை பார்த்து புறக்கணிக்கிறான்.அன்றைய கனவில் மீண்டும் இந்த மூன்று பேரும் கடவுளாய் வந்து மறைகின்றனர்.
தான் கற்பித்து வைத்திருக்கிற உருவத்தில் கடவுளை எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை உணர்ந்து வருந்துகிறான்.
#மதிப்பது எப்படி இருக்க வேண்டும்?
சிலரை மதிப்பது மரியாதைக்காகவும்
சிலரை மதிக்காமல் இருப்பது சுயமரியாதைக்காகவும் இருக்க வேண்டும்
#விருதுக்கான தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?
காப்காவின் விசாரணை நாவலில் வரும் குட்டிக்கதை
"சட்டத்தின் வாசலில் ஒரு வாயிற்காவலன் நிற்பான். நீதி பெற விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரையும் உள்ளே விடாமல் பலவந்தமாக தள்ளிக்கொண்டே இருப்பான். அவன் களைப்புறும் போது மட்டும் ஒருவர் அந்த வாசலுக்குள் நுழைய முடியும்" என்பார். இது சில முக்கிய விருதுக்கான தேர்ந்தெடுத்தலுக்கும் பொருந்தும்
#அழகின் அளவுகோல் என்ன?
அந்த அளவுகோல் பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு விதமாகவும்,பெண் தேடுவோர்க்கு ஒருவிதமாகவும் அமைந்திருக்கிற மர்மம் என்னவென்று புரியவில்லை என்பார் ஜெயகாந்தன்.
#ஒருவரின் செயல் மற்றொருவருக்கு இடையூறாவது எப்போது?
வழிபாட்டுக் கூட்டத்தில் ஒருவரின் குறட்டை ஒலி சத்தம் அதிகம் கேட்டது. விழித்தெழுந்த அவன் குருவிடம் மன்னிப்பு கேட்டான்.அதற்கு குரு நீ கவனமாக இருக்கனும்.மற்றவர்களின் தூக்கத்தை குறட்டை விட்டு கெடுத்துவிடாதே என்றாராம்
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment