ஒரு வழிகாட்டின்றி தேடி அலையும் பாதையிலே நடப்பவனுக்கு இரண்டு நாள் வழியும் நூறுநாள் வழியாக ஆகிவிடும்ரூமி மஸ்னவி
பொதுவாக சூழ்நிலையியல் வகுப்பில் உனக்குத் தெரிந்த காட்டு விலங்குகள் பெயரையும் நாட்டு விலங்குகள் பெயரையும் எழுதி வரச்சொல்லுவோம். உண்மையில் வீட்டு விலங்குகள் வீட்டிலேயே தோன்றியதா என யோசித்து இருக்கிறேன். ஒவ்வொரு வீட்டு விலங்கினங்களுக்கும் இருக்கும் வரலாற்றினை அறியும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. மனிதன் தன் சுய தேவைக்காக விலங்கினங்களை மாற்றியதும், வணிகத் தேவைக்காக இந்த நாட்டு விலங்கினங்கள் படும் துயரத்தையும் விளக்கும் நூலாக சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதி குறிஞ்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஒரு ஆறு துவங்கும் இடத்தில் இருக்கும் ஒருவர்.. இறுதியாய் கடலில் கலக்கும் இடத்தை பார்க்கும் போது எவ்வளவு துயர் அடைவாரோ அது போலத்தான் நாய்களின் வரலாற்றினை அறியும் போது தெரிகிறது. நாயினம் காட்டு விலங்கான சாம்பல் நிற ஓநாயிலிருந்து பரிணாம வளர்ச்சியிலிருந்து வந்தது. நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும், ஊளையிடல், குரைத்தலுக்கான காரணங்களையும், நாய்களின் வரலாறினையும் விரிவாய் எடுத்துக்கூறுகிறது. நாயின் நாக்கு போல் விளிம்பு முனை கொண்ட நாவாய் கப்பல் உருவாக்கியதும், நாய்களின் பல்வேறு குணாம்சங்களை கூறுவதுடன் தெருநாய்கள் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு ஒரு வாரம் உயிர்வாழப் பழகியவை என இது போன்ற பல அறியப்படாத செய்திகளை சொல்கின்றன.
மாடும் முருங்கையும் இருந்த வீடு வறுமையை சந்திக்காது என்பது பெரியோர்களின் மொழி. மேய்ச்சல் நிலத்தில் தொழுவத்திற்குப் பின்பே குடில் அமைப்பார்கள் என்றும், யானைக்கு நிகரான பலமுள்ள காளையை மனிதன் ஏன் அடக்கினான் என்பதை காரண காரியத்துடன் விளக்குகிறது. Man's best friend ஆக நாயைச் சொன்னாலும் மாடுகள் தான் மனிதனுக்கு நீர் இறைக்க, உழவுக்கு, பொதிசுமக்க என குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்து வருகிறது. அந்த அற்புதமான நாட்டு மாட்டினங்கள் அருகி வரும் உண்மையும், கலப்பின மாடுகளின் அதிகரிப்பையும் படிக்கும்போது இத்தனை மாட்டினங்கள் வலம் வந்த நம் தமிழகத்தில் நாம் தொலைத்தவை என்ன என்பதை உணர வைக்கிறார்.
"கருங்காலி கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலி கட்டைக்கு நாணும்- பெருங்கானில்
கார் எருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிறவு துஞ்சாது என் கண்
கருங்காலி கட்டையால் ஆன கோடாலி எந்த பெரிய மரத்தையும் வெட்டிவிடும். ஆனால் வாழை மரத்தை வெட்டும் போது வழுக்குவது போல் எருமை மேய்க்கும் சிறுவனிடம் தான் தோற்றதை பாடுகிறார் ஒளவையார்.சோதனை முடிந்தவுடன் தோன்றும் முருகன்..ஒளவையின் தமிழை அறியவே பெருமைக்கு எருமை மேய்த்ததாய் சொல்லுவார்.
இதன் மூலம் மேய்ச்சல் நில காலத்திலிருந்தே எருமை இருப்பதும் அதனை மனிதன் மேய்த்ததும் அறிய முடிகிறது. ஆனால் நவீன கால மனிதன் எருமை என்றாலே அபசகுனம், எமனின் வாகனம் என உதாசீனம் செய்கிறான். ஆனால் மாடுகள் சமவெளியில் உழுவது போல் சதுப்பு நிலங்களில் எருமைகள் தான் உழுகின்றன. அதாவது சேற்று நிலத்தை உழக்க எருமைகளை பயன்படுத்தி தமிழர்கள் பயிர் செய்ததை இப்புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.பழங்குடியினரான தோடர்கள் ஏன் எருமைகளை வளர்த்தனர்,சபரிமலையில் உள்ள எருமேலி என்பதற்கான பெயர்காரணம் என்ன என கூறுவதும் சுவாரஸ்யமானது.
கால்நடை பொருளாதாரத்தில் ஆடுகளின் பங்கு இன்றியமையாதது. சங்கப் பாடலில் வரையாடுகள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆடுகள் மனிதனுக்கு எங்ஙனம் உதவியாய் இருந்ததை விளக்கும் ஆசிரியர் வெள்ளாடுகளின் தனிச்சிறப்பையும்,
கிடாமுட்டு, உணவுச்சங்கிலியில் ஆடுகளின் பங்களிப்பையும், அதன் தோல்கள் இன்று வணிகமயமானதையும் கூறுகிறது.
இதனை படிக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது..
"ஒரு செம்மறி ஆட்டு மந்தையின் மேய்ப்பன்..ஆடுகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறான். குளிர்காலம் நெருங்குவதால் ஒவ்வொரு ஆடுகளுக்கும் கம்பளிப் போர்வை தருவதாக கூறுகிறான். அனைவரும் கைதட்டி மகிழும் போது ஒரு செம்மறி ஆடு மட்டும் இந்த
கம்பளிக்கான ரோமங்கள் எங்கிருந்து வரும் என கேட்டவுடன் திகைப்படைகிறான்.மற்ற ஆட்டினங்கள் தங்களுக்கு கம்பளி கிடைக்காமல் செய்யப் பார்க்கிறாயா எனக்கூறி அடித்து விரட்டுகின்றன. இதனை படித்தவுடன் இக்காலத்தின் மக்களுக்கும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.
காடறிதல் பயணத்தில் ஆதி உழவனான பன்றியை சந்திக்காமல் இருந்ததில்லை என்கிறார் கோவை சதாசிவம். பன்றிகள் குறித்து அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களை இதில் பகிர்ந்துள்ளார்.
ஆடுகள் மேய்க்கும் கீதாரிகளை தெரிந்து கொள்ளும் நாம் பன்னியாண்டிகளைப் பற்றியும் அவர்களின் பணிகளையும் இன்றைக்கு அவர்களின் வாழ் நிலையினையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
You own a dog but cat owns you. உங்களுக்கு நாய்களைப் பிடித்தால் போதும்.ஆனால் பூனைகளுக்கு உங்களைப் பிடித்தால் மட்டுமே பழக முடியும்.பூனைகளின் வரலாறும் அதன் குணங்களும் கூறும்போது அதன் தனிச்சிறப்புகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.பூனையின் மீசையில் இத்தனை விசயங்கள் இருக்கிறதா எனவும் இன்றைய உலகில் பூனைகளை மனிதன் எவ்வாறு நடத்துகிறான் எனவும் பாடம் எடுத்திருக்கிறார்.அடுத்து முட்டையா? கோழியா? என்பதற்கு விளக்கமும், கூமுட்டை என ஏன் சொல்கிறோம் என்பதற்கான பெயர்
காரணத்தையும் இதில் விளக்கியுள்ளார்.முல்லை நிலத்தில் காட்டுயிரியாகவும், மருத நிலத்தில் வீட்டு உயிரியாகவும் மாறிய கோழிகளின் வாழ்வியலைப் படம் பிடித்துள்ளார்.இன்றைய நாட்டுக் கோழிகளையும் பிராய்லர் கோழிகளையும் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
கடைசி அத்தியாயத்தில் ஆதிகாலத்தில் விலங்கினங்கள் பலியிடுவதற்கான நம்பிக்கைகளின் வேர்களையும், கிராமத்து மக்களின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறார்.சிறு தெய்வ வழிபாடு,தூய்மையின் குறியீடாக நெருப்பு இருந்ததையும், மனிதர்கள் குலசாமியிடம் தூய்மையை நிரூபிக்க தீ மிதிப்பதும், தீ சட்டி தூக்குவதும் என இன்றளவும் புழக்கத்தில் உள்ள வழக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.சடங்குகளில் கலப்பின ஆடு,மாடு, கோழிகளை குலசாமிகளுக்கு ஏன் நேர்ந்து விடுவதில்லை என கேள்வி கேட்கும் போது நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வைக்கிறார்.
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என காந்தி சொன்னதற்கான காரணங்களில் தற்சார்பு பொருளாதாரமும் ஒன்று.
தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்றனர்.இதற்கு அங்கிருந்த நாட்டு விலங்கினங்களும் உதவி செய்தன.
ட்ராக்டர் கண்டுபிடிக்கப்பட்ட போது ட்ராக்டர்கள் சாணி போடுமா என ஜே.சி குமரப்பா சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
தற்போது கிராமத்துக்குள் நுழைந்த பன்னாட்டு வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கையோடு இயைந்த வாழ்வை சிதைத்து வருவது வருத்தத்திற்கு உரியது. ஒவ்வொரு விலங்கினங்களின் வரலாற்றை பார்க்கும் போது.. தற்போது யாரும் கண்டு கொள்ளாமல் தெரு விலங்குகளாய் இருப்பதையும், கலப்பின ஊசிகளின் விளைவால் நாட்டு உயிரினங்கள் அழிந்து வருவதையும் படிக்கும் போது குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. சூழலியலில் நாட்டு உயிரினங்களின் தாக்கத்தையும் பேசுகிறது.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment