#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:25
Pages:481
நானும் நீதிபதி ஆனேன்
-கே. சந்துரு
அதிகாரம் ஒருவரின் துடிப்பையெல்லாம் அடக்கி விடாமல் இருக்க ஒரு லட்சியமும் பிடிமானமும் நிச்சயம் தேவைப்படுகின்றன எனும் கருத்துக்கு உடன்பட்ட வாழ்க்கைதான் நீதியரசர் சந்துருன் வாழ்க்கையும். நீதிபதியானவர் ஒரு வழக்கின் வாதி பிரதிவாதங்களை கேட்டு சட்டங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து தனது முடிவை அறிவிக்கிறார். ஒரு வழக்கின் இறுதியில் வழங்கப்படுவது தீர்ப்பா?அல்லது நீதியா என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். சட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டு சொல்லப்படுகின்ற தீர்ப்புகளை நாம் அறிவோம். சட்டங்களை மட்டுமே பார்க்காமல் நியாயங்களையும் நினைவில் கொண்டு வழங்கப்படுகின்ற ஒரு தீர்ப்பு நீதி என்ற மதிப்பைப் பெறுகிறது என்ற எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் எழுதி இருப்பது அப்படியே பொருந்துகிறது இந்த புத்தகத்திறகும்.
தன் சுய வரலாற்று புத்தகம் என்றாலும் இதில் உள்ள கருத்துக்கள் சொல்லப்பட்ட விஷயங்கள் அத்தனையும் மனித உரிமை குறித்த வழக்குகளில் பதிவு செய்தவையே. கல்லூரி மாணவராக இடதுசாரி சங்க மாணவர் தலைவராக வழக்கறிஞராக பணியாற்றிய அவரின் காலங்களில் நடந்த வழக்குகளும் சமூகப் பிரச்சினைகளையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் நீதிபதி கபாடியா அவர்கள் சொன்னதைப் போல "துறவியாக வாழ் குதிரைபோல் உழை"என்ற வரிகளை மனதில் ஏந்தி தன் இறுதி பணிக்காலம் வரையிலும் முற்போக்காகவும் சமூக நீதியுடனும் இருந்திருக்கிறார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 1971 ஆம் ஆண்டு நடந்த மாணவர் படுகொலை விவகாரம் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளையும் அதில் தான் பங்கேற்ற போராட்ட வரலாறுகளையும் இங்கே நினைவு படுத்தி சொல்லியிரப்பார். இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி ராமகிருஷ்ணன் அன்று கல்லூரியில் இவருக்கு சீனியர் மாணவர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சம்பவம் ஒன்றினையும் விவரித்திருப்பார்.
"இல்லாதவர்களிடம் பொருளில் வறுமை என்றால் இருப்பவர்களிடம் அதை உணர்வதிலும் புரிந்து கொள்வதிலும் வறுமை இருக்கிறது" எனும் வாக்கியம் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தது.
மறக்க முடியாத பொங்கல் எது என்ற கேள்விக்கு 1976 ஆம் ஆண்டு அவசர நிலைப் பிரகடனத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் அப்போது வந்த பொங்கல் நிகழ்வும் தான் என்று நினைவு கூறுகிறார்.
மிசா சட்டம் குறித்து விரிவான கட்டுரையில் பேசியிருக்கிறார். சிறைத்துறை சீர்திருத்தங்கள் குறித்த இவரின் பார்வையில் ஒரு இடத்தில் சொல்லும்போது கைவிலங்கு உருவான கதையை சொல்லி இருப்பார்.."மனிதனை மிருகமாக வைத்திருப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் இரும்புச் சங்கிலியால் உருவாக்கப்பட்ட விலங்கு ஹேண்ட் கப். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20 அன்று கை விலங்குகள் நாள் அனுசரிக்கப்படும். 1912ஆம் ஆண்டு அந்த நாளில்தான் இதனை தயாரித்து அதற்கான காப்புரிமையும் பெறப்பட்டு.. பிரிட்டிஷ் பெருமளவு தயாரித்து விற்றது. இந்த கை விலங்குகள் தான் பல நாடுகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன என்னும் தகவல்களும் அறிய முடிந்தது.
எப்படி வந்தது என்கவுண்டர்/லாக்கப் மரணங்களுக்கு இழப்பீடு எனும் கட்டுரையில் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை நடத்தியதோடு பாண்டியம்மாள் வழக்கு ஜெய்பீம் படத்தில் வந்த ராஜாக்கண்ணு வழக்கு, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் வழக்கு உட்பட பல வழக்கு விபரங்களையும் கூறி கட்டுரையை நிறைவு செய்து இருப்பார்.
2021 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரியான ராஜேஷ் தாஸ் என்பவர் மற்றொரு பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த சந்துரு அவர்கள் ஏற்கனவே அவர் ஒரு வழக்கில் மனித உரிமை ஆணையத்திடம் ஆஜரான விபரங்களையும் தெரிவித்ததோடு மனித உரிமை குறித்தும் அது சார்பான வழக்குகளில் பங்கேற்றது மற்றும் பணியாற்றியது குறித்து எழுதி இருப்பார். மனிதருக்கான சுதந்திர உரிமைகளை நடத்திய சில வழக்குகளை புத்தகமாகிய அபிஷேக் சிங்வி அதற்கு "பதுங்கு குழியிலிருந்து" என்று தலைப்பிட்டு இருப்பார். அதாவது வழக்குகளை நடத்தி வெற்றி பெறுவதற்கு வழக்குரைஞர்கள் பதுங்குகுழியில் இருந்து போராட நேர்ந்திருக்கிறது என குறிப்பிட்டு இருப்பார்.
2007ஆம் ஆண்டு நீதிபதி ஷா அவர்கள் வருடாந்திர மலர் வெளியிடும் முடிவினை எடுத்து.. பணம் பார்க்காத வழக்கறிஞர்கள் அல்லது மூதாதையர்கள் திறமையான வழக்கறிஞர்கள் என்ற இரண்டு அளவுகோல்களை வைத்து எழுதச் சொல்லி இருந்தார். அதில் கட்டுரை எழுதி இருந்த சந்துரு அவர்கள்.. எந்த கட்டுரையிலும் இடம் பெறாத வி.ஜி ராம், மோகன் குமாரமங்கலம், இராமச்சந்திரன், ஜீ.வசந்த், கே.டி பால்பாண்டியன் ,எஸ் டி வானமாமலை, கே.வி சங்கரன் போன்ற போன்றவர்களைப் பற்றி எழுதி இருந்தார்.' என்ன ஜட்ஜ் ஒரே கம்யூனிஸ்ட் வழக்கறிஞரின் பெயராக இருக்கிறதே என்று ஒருவர் கேட்க.. நான் வைத்திருக்கும் அளவுகோலின்படி தேறியவர் பெயர்கள் இவ்வளவுதான் என்று சொல்லியிருப்பார்.
இவர்கள் ஒவ்வொருவரின் சாதனைகளையும் நிகழ்த்திய வழக்கின் தன்மையை யும் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.சமீபத்தில கோகுல்ராஜ் கொலை வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞரும் ஓர் இடதுசாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீதிபதி சந்துரு அவர்கள் எழுதியது முற்றிலும் உண்மையே.
கற்சிலைகளும் கலை கலாச்சாரம் கட்டுரையிலும் கனிமவளங்கள் மதுரையில் சகாயம் தலைமையில் சீர்படுத்திய நடவடிக்கைகளைப் பற்றி சொல்லும்போது ஊடாக சிலைகளைப் பற்றி ஒரு வரி தகவலை சொல்லி இருப்பார். 2010ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் என்பவர் தொடுத்த வழக்கில் பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அரசின் முன் அனுமதி பெறவண்டும் என கூறியதுடன், வைக்கப்படும் சிலைகள் வெண்கலத்தில் இருக்க வேண்டும் என்று கூறியதும் புதிய செய்தியாக இருந்தது. மேலும் விழாக்கள் நடைபெறுவதற்கான நோக்கம் அரசு விழாக்கள் எவ்வாறு
நடத்தப்படவேண்டும் என்பது குறித்தெல்லாம் விரிவாக அலசி சொல்லியிருப்பார்.
"கெட்ட அரசியலுக்கு மாற்று நல்ல அரசியலேயொழிய அரசியலை விட்டோடுவதல்ல" என்று கூறியதோடு மாணவராக இருந்தபோது நாவலர் நெடுஞ்செழியன் "மாணவர்கள் அமைதியின்மை" குறித்த கருத்தரங்கில் பேசிய போது நிகழ்ந்த சம்பவமும் தொழிற்சங்க வழக்கறிஞராக பணியாற்றிய போது ஆஜரான பல்வேறு வழக்குகளில் சுவையான சம்பவங்களும் இதில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன.
இறுதியாக தான் நீதிபதியான நினைவுகளை சுட்டிக் காட்டியதோடு அப்போது தனக்கு பாராட்டுரை யாக வந்திருந்த சக நீதிபதிகளில் கடிதத்தை பதிவுசெய்துள்ளார். அதில் இவரின் நிதர்சனமான உண்மை முகம் தெரியும். மூத்த வழக்கறிஞரான கே ஜி கண்ணபிரான் அவர்கள்
வாழ்த்துரை கடிதம் அனுப்பியது "உன்னுடைய நியமனம் தாமதிக்கப்பட்ட நீதிக்கான சரியான உதாரணம். நீதி கிடைக்காததைவிட தாமதிக்கப்பட்ட நீதி மேல் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்றிருப்பார்.
இவர் ஓய்வு பெறும் நாளில் நிகழ்ந்த சம்பவம் தமிழ் நாடே அறியும் . நீதிபதியாக பணியாற்றிய 7 ஆண்டுகளில் ஒரு அறுவை சிகிச்சைக்காக விடுப்பு எடுத்தது மூன்று வாரங்கள் மட்டுமே அதைத் தவிர்த்து நீதிபதியாக விடுப்பு எடுத்ததே இல்லை .ஆனால் பணி நிறைவு விழா அன்று சேம்பரில் வந்து வாழ்த்து தெரிவித்தவர்கள் 10பேர் மட்டுமே. தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 47 என்பதை மனதில் கொள்ளவும் என்று சொல்லும்போது நமக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. இருப்பினும் இவர் வரவுக்காகக் காத்திருந்த வாழ்த்து சொன்ன சாமானிய மனிதர்கள் தான் இவரின் இத்தனை வருட நேர்மையான பணிக்கு கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும் .நேர்மையுடன் பயணிக்கும் சந்துருவின் பயணத்தில் நாமும் அவரை பின் தொடர்வோமாக நேர்மையுடன்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment