#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:12
Pages:340
ராஜீவ் காந்தி படுகொலை -புலனாய்வு-
டி ஆர் கார்த்திகேயன்
ராதா வினோத் ராஜூ
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது..சமூக வலைத்தளங்களும் மீடியாக்களும் அதிகம் இல்லாத காலகட்டம்.காலை 6:45 மணிக்கு ரேடியோவில் இந்த துயரச் செய்தி கேட்டபோது தான் தமிழகமே வருத்தத்தில் அழுதது. "விருந்துக்கு வந்தவனே மேசையில் பரிமாறப்பட்ட தினம் என வைரமுத்து பாடிய கவிதை நினைவுக்கு வருகிறது. இந்தியா டுடே புத்தகம் அப்போது அதிக அளவில் விற்பனை ஆனது. அதில் கொலை செய்யப்பட்ட தற்கொலைப்படை பெண்ணின் உருவப்படம் அதில் இருந்தது. ராஜீவ் காந்தியை அவர் எப்படி மனித வெடிகுண்டாக வெடிக்க வைத்தார் என்பது போன்றவற்றை ஓவியமாக வரைந்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டிஆர் கார்த்திகேயன் அவர்களும் ராதா வினோத் ராஜ் அவர்களும் திறம்பட புத்தகத்தை எழுதி இருந்தாலும் தமிழில் எஸ் சந்திரமௌலி அவர்கள் நல்ல முறையில் மொழிபெயர்த்துள்ளார் .15 கட்டுரைகள் அமைந்துள்ள இப்புத்தகத்தில் ஒவ்வொன்றும் விறுவிறுப்பான நடையில் நாவல் போன்ற வடிவில் அமைந்துள்ளது.
ராஜீவ் காந்தியை தான் சந்தித்த தருணத்தையும், அவரின் ஆளுமை பற்றியும் முதல் அத்தியாயத்தில் விவரித்துள்ளார்.
1991 மே 21 ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவரை வரவேற்பதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மரகதம் மற்றும் காங்கிரஸ் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தியும் மூப்பனாரும் காத்துக் கொண்டிருந்தனர். அவரோடு தனிப்பட்ட பாதுகாவல் அதிகாரியான பீகே குப்தாவும் காத்திருந்தார்.
பின்னர் மேடைக்கு வரும் போது ராஜீவின் வருகைக்காக தனி மேடையில் வாழப்பாடி யாரும் இந்திரா காந்தியின் சிலை அருகே மூப்பனாரும் இருந்தனர். ஜெயந்தி நடராஜன் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார் "அப்போது வரை நான் தலைவருடன் தான் நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பைலை எடுத்து வரும்படி எனக்கு கட்டளையிட்டார். நான் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவர் மிகவும் சத்தமாக விரைந்து எடுத்து வாருங்கள் என்று கூறியவுடன் நான் அந்த இடத்தை விட்டு பைலை எடுக்கச் சென்று விட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் சொன்னார்.
முன்னதாக விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பும் போது விமான ஓட்டுநரான கேப்டன் சாந்த்டோக் விமானத்தின் தொடர்பு கொள்ளும் சாதனம் பழுதடைந்து இருந்ததை கண்டுபிடித்தார். ஆகவே இரவு விசாகப்பட்டினத்தில் தங்க முடிவு செய்திருந்து விருந்தினர் மாளிகையை நோக்கி காரில் சென்றார் ராஜிவ். ஆனால் விதியின் சதியோ வேறாக இருந்தது. வேறு விமான் இஞ்சினியர் வந்து பழுதடைந்ததை சரி செய்தபின் உடனே ராஜீவ் விமான நிலையத்துக்கு திரும்பி வந்துவிட்டார். மாலை ஆறரை மணிக்கு சென்னை நோக்கி விமானம் புறப்பட்டது.
மொத்தம் 23 பேர் ராஜீவ் காந்தியை மேடையில் சந்திக்க சிபாரிசு செய்து முடிவு செய்து இருந்தனர். அதில் ஒரு சிறுமியை தவிர அனைவரும் ஆண்களே. இதற்கிடையில் பச்சையும் ஆரஞ்சு நிறமும் கலந்த சல்வார் கமீஸ் உடை அணிந்த பெண் ஒருவரை அங்கே காணமுடிந்தது. அவர் கண்ணாடி அணிந்து இருந்தார். அவர் எப்படி அங்கு வந்தார், அவர் எதற்காக வந்தார் இன்னும் சற்று நேரத்தில் நிகழும் இதற்கான மூல காரணமாக அவர் நின்றிருந்தது ஏன் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. இதற்குப் பின் நடந்த நிகழ்வையும் குண்டு வெடிப்பையும் ஒவ்வொரு வரியாக திரைப்படம் பார்ப்பது போல் அச்சுப்பிசகாமல் விவரித்திருப்பார். தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் ,ராஜீவ் காந்தி படுகொலை குறித்த புலனாய்வை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உடனடியாக கேட்டுக்கொண்டார் என்ற அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் பணியும் தொடங்கியது.
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலையை கண்டுபிடித்தது போல் இல்லாமல் இது ஒரு மர்மமான வழக்காக கருதப்பட்டது. பலர் முன்வராத போது இந்த வழக்கை விசாரிப்பதற்காக டி.ஆர் கார்த்திகேயன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இறந்த பகுதியிலிருந்து முக்கிய ஆதார பொருட்களாக நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு இரும்பு குண்டுகள், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரி, எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், தலைமுடி 2 ஸ்விட்ச்சுகள் தவிர அங்கு எதுவும் கிடைக்கவில்லை. வேறு எந்த விதமான முக்கிய தடயங்களோ ஆதாரங்களோ கிடைக்கவில்லை.
பல்வேறு தரப்பினர் எழுப்பிய யூகங்கள், செய்தியாளர்கள் தரும் நெருக்கடிகள், நாட்டின் தலைவனை பலி கொடுத்தபின் உண்மையான குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்புணர்வும் கடமை உணர்வும் என முழு முயற்சி மேற்கொண்டு ஒவ்வொன்றாக தேடி தேடி இறுதியில் குற்றவாளியை கண்டு பிடித்த கதையையும் அதிலுள்ள இடர்பாடுகளையும் மிக விரிவாக கூறியிருக்கிறார்.
தேடிப்போகும் சாட்சியங்கள் இல்லாதது, தடயங்கள் இல்லாதது உண்மையான குற்றவாளிகளையும் தேடி கண்டுபிடிக்க வேண்டியது என ஒவ்வொரு பக்கங்களிலும் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது தெரிகிறது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தான் தமிழ்நாட்டில் முதல் தடவையாக தடா சட்டம் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். கன்னடத்தில் ஆர் எம்.ஆர் ரமேஷ் இயக்கிய குப்பி படத்தில் குற்றவாளிகள் எவ்வாறு பிடிபட்டனர் என்பதை காட்டியிருப்பார். அதுபோல இப்புத்தகத்தில் விறுவிறுப்பான முறையில் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக விரிவாக இப்புத்தகத்தில் படிக்கலாம்
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment