Thursday, 11 August 2022

Old is gold-5*மணி


இருளும் ஒளியும் 
-ச.தமிழ்ச்செல்வன்

மேல் தட்டு மக்கள் கல்வி பெறுவதும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கல்வி பெறுவது ஒன்றல்ல. அவர்களின் கல்வி அவர்களுக்கே பயன்படும். பாட்டாளிகள் கற்பது சமூகத்தை மாற்றும். புரட்சி என்பது ஒரு கற்றல் (Art of knowing)

-பாவ்லோ பிரையர்

1990 களில் சோவியத் ரஷ்யா சிதறுண்ட காலம். இடதுசாரிகளை எல்லாரும் தூற்றிக் கொண்டு இருக்கும்போது அவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மக்களை நோக்கி பயணம் செய்தனர். மக்களை கல்வி கற்றவர்களாக மாற்றும் நோக்கத்துடன் அறிவொளி இயக்கத்தை கையில் எடுத்தனர். அதில் வெற்றியும் கண்டனர். அவ்வாறு தான் இந் நூலின் ஆசிரியர் தமிழ்ச்செல்வன தான் மேற்கொண்ட அறிவொளி இயக்க செயல்பாடுகளையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் இந் நூலின் வழியே நமக்கும் சொல்லியுள்ளார். இந்நூலை படிக்க படிக்க 90களின் காலகட்டம் நம் நினைவில் வந்து செல்லும்.

தபால் ஆபிசிலுள்ள இந்தி எழுத்தை அழிக்க தார்ச்சட்டியோடு வந்தார்கள். கீழே நின்று கூட்டம் முழக்கம் செய்து கொண்டிருக்க- தார்சட்டியோடு மேலே ஏறியவர் கீழே பார்த்து கேட்டார். ஏண்ணே இதில் இந்தி எழுத்து எது என்று.. இப்படித்தான் கல்வி கற்காதவரின் அப்போதைய நிலை இருந்தது என்பதை தன்னுடைய ஒற்றை வரியில் கூறியிருப்பார். எழுதப் படிக்க தெரியாதவர்கள் இருந்தபோது அவர்களை கல்வி கற்க வைக்க அறிவொளி இயக்கம் தீராது பாடுபட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொறுப்பாளராக நியமனம் பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊர் ஊராக கரும்பலகைகளை தலையில் சுமந்து கொண்டு, சிலேட்டுகளை தாங்கிக் கொண்டு மக்களை நோக்கி சென்றார்.அவரைப்போல பல தன்னார்வலர்கள் தீராத வேட்கையுடன் கற்பிக்கச் சென்றனர்.

கல்லாதவர் மனதில் நம்பிக்கை விதைப்பது, கற்றவர் மனதில் நம்மை சுற்றி இருப்பவர்கள் எத்தனை பேர் கல்லாதவர்களாக இருக்கிறார்களே எனும் குற்ற உணர்வை ஏற்படுத்துதல் என இரண்டையும் தீர்மானமாக அறிவொளி இயக்கம் செய்தது. நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 பேருக்கு ஒரு ஆசிரியர் எனும் வீதம் 23 ஆயிரத்து 600 கற்பிப்போர் தேவை. ஊதியம் இல்லாமல் 15 வயதுக்கு மேல் 35 வயதுக்குட்பட்ட பல்வேறு தரப்பு தன்னார்வலர்களும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர் 

"டிராக்டர் ஓட்டும் கைகளுக்கு 
ஒன்னு ரெண்டு கஷ்டமா?
 கோலம் போடும் கைகளுக்கு 
ஆனா போடுவது கஷ்டமா?"..

என்பன போன்ற  பாடல்கள் மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் சத்தமாக வாசிக்கவும், 35 வார்த்தைகளை மௌனமாக வாசிக்கவும், 50 வரையிலான எண்களோடு பரிட்சையமும் எளிய கூட்டல் கழித்தலும் முதல் லட்சியமாய் கொண்டு செயல்பட்டனர்.

ஆரம்பத்தில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் தான் முன்வைத்த காலை பின் வைக்காமல் மாவோ நடத்திய (long march) நடைபயணம் போல் மேற்கொண்டு மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி அறிவொளி இயக்கத்தில் இணைய வைத்தனர்.

கியூபா விடுதலை அடைந்த பிறகு அனைத்து கல்வி நிறுவனங்களும் 10 மாதங்கள் மட்டுமே பாடம் நடத்தி, இரண்டு மாதங்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கற்றவர்களை அனுப்பி கல்லாதவரை கண்டுபிடித்து கற்பிக்கச் செய்வார்களாம். இரண்டு மாத காலம் நாடே பள்ளிக்கூடமாக மாறி முதல் வகுப்பு படித்து அடுத்தடுத்த வகுப்புகளில் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்தனர். இது பெரிய கல்விப் புரட்சியை அங்கு ஏற்படுத்தியது. அதேபோல் அறிவொளி இயக்கமும் பல்வேறு தரப்பு மக்களை கல்வி கற்றவராக மாற்றியது என்றால் அது மிகை இல்லை.

எண்ணறிவும் எழுத்தறிவும் மட்டும் போதாது.. கற்போராகிய மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களை நம்பிக்கைகளை மேற்கொள்ள வைத்தனர். இதற்கு உறுதுணையாக அந்த மாவட்டத்தின் ஆட்சியரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கதை கூறுதல் மூலம் மக்களை தன் வசப்படுத்த மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள், வேல.ராமமூர்த்தி யின் கிறுக்கு சண்முகம், தனுஷ்கோடி ராமசாமியின் 'தரகன் பாடு,' கந்தர்வனின் சீவன் ஆகிய கதைகளை மக்களை கல்வி கற்பிக்க தூண்டியது என்று கூறுகிறார் ஆசிரியர்.

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு அறிவொளி இயக்கத்தின் மாணவரான ஒரு பெண்மணி தன்னுடைய சொந்த முயற்சியால் ஒரு கடிதத்தை அவருக்கு எழுதியதை படித்ததும் ஆட்சியருக்கு நா தழுதழுத்த நிகழ்வும், மேலும் மற்றொரு பெண்மணி தானே சொந்த முயற்சியில் பேருந்து ஊர் பெயரை வாசித்து மதுரை வரை சென்று வந்ததாகவும் கூறியது மகழ்ச்சியை தந்தது. அந்த ஆட்சியர் வழியனுப்பு விழாவில் புதிதாய் கல்வி கற்றவர்கள் எழுதிய தபால் அட்டைகளை மாலையாக கோர்த்து அணிவித்து வழி அனுப்பி வைத்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது.

*மனம் ஒரு திறந்த மேடையாக இருந்தால் யாரும் வந்து சகஜமாய் நெருங்குவார்கள். மூடிக் கிடக்கும் வீடுகளின் முன்னால்தான் கூச்சத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது -ச மாடசாமி

*படிப்பினையே பாலுக்கு மேல் மிதக்கும் ஆடையாக முதன்மை பட்டுத் தெரிகிறது. படிப்பினையின் மறுபக்கம் தீர்வும் தென்படுகிறது

*கற்போம் கையெழுத்து 
ஒழிப்போம் கைநாட்டு

*தோற்றுப் போக நமக்கு அனுமதி இல்லை -ஆத்திரேயா

*சோர்வுக்கும் நம்பிக்கைக்கும் இடையே வலுவான ஒரு போராட்டமே
மனதிற்குள் நடக்கிறது

அறிவுடை இயக்க நிகழ்வுகளில் பேராசிரியர் சா மாடசாமி அவர்களின் பங்கு குறித்து மிகவும் சிலாகித்துக் கூறியுள்ளார்.மேலும் அவருடன் எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி அவர்கள் பங்கு பெற்றதும் அறிய முடிந்தது.முத்து நிலவன் ஒரு கூட்டத்தில் பேசும்போது அறிவொளி இயக்க நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் போது புதுக்கோட்டையில் புதிதாக பெண்கள் சைக்கிள் ஓட்டிய நிகழ்வை மிகவும் சிலாகித்துக் கூறுவார். அதில் சைக்கிள் ஓட்டுவது என்பது பெண்களுக்கு சாகச நிகழ்வு போலும். ஊர்காரர்கள் பெருமிதம் பொங்க பார்த்ததை தன் பதிவில் செய்திருப்பார்

"சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி வாழ்க்கை சக்கரத்தை சுத்தி விடு தங்கச்சி" என அவர் எழுதிய பாடல் அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் ஒலித்தது. இன்று பெண்கள் கார் ஓட்டுவதை சாதாரணமாக கூறும் நாம் அப்போது சைக்கிள் ஓட்டுவது பெரிய அசாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டது. இவ்வாறான பல கல்வி சார்ந்த புரட்சிகள் நம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை படிக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. தற்போது நடைபெறும் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய செயல்பாடுகளுக்கு முன்னோடியாக அறிவொளி இயக்கம் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.மலை வாழை அல்லவோ கல்வி என்பதை எளிய மக்களுக்கும் அன்று கொண்டு சேர்த்த அறிவொளி இயக்க அன்பர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்களே.!

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment