கன்னி
-பிரான்சிஸ் கிருபா
தமிழில் கொண்டு கூட்டி பொருள் கோள் போல் சுவாரஸ்யத்துக்காக முன்னும் பின்னும் கலைத்துப் போட்ட காட்சிகளால் நாவல் துவங்குகிறது.
திரைக்கதையின் பலம் மூலம் சினிமா வெற்றியடைவது போல சாதாரண ஒரு கதையை தன்னுடைய அற்புத சொல் வளத்தால் சிருஷ்டித்து நம்மை நாவலின் இறுதிவரி வரை விடாமல் உடன் பயணிக்க வைத்தது இந்நாவலின் சிறப்பு.கற்பனையை எழுத்து வடிவில் கொண்டு வந்து படிக்கிறவரின் கற்பனையும் தன்னோடு இணைத்துக் கொண்டு செல்லும் நடையே முக்கிய படைப்பாக உருவெடுக்கிறது.
ஆணின் அக உலகில் நுழைந்து பார்த்தால் நிச்சயம் தான் பிரம்மித்த பெண்களின் உருவம் நிச்சயம் இருக்கும்.அவளை ஆராதிக்கும் போது தான் உணர்ந்த அத்தனை உணர்ச்சிகளையும் அலைக்கழிப்புகளையும் மொழி நடையில் கொட்டினால் எப்படியிருக்கும்.வார்த்தைகளின் உச்சம் மெளனம் எனில் அதன் முந்தைய நிலையில் வார்த்தைகள் பேரருவியாய் மனதிலிருந்து விழும். அந்த அருவியின் திளைப்பில் நீராடும் போது நாமும் அந்த பிரம்மிப்பு உணர்வை உணர்வோம்.
கதை
மூன்று பாகங்களாக விரியும் கதையில் முதல் பாகத்தில்
கடலோர கிராமத்தில் வசிக்கும் சந்தன பாண்டி எனும் பாண்டி கதையின் நாயகன்.முதல் பாகத்தில் பித்து நிலையில் இருக்கும் நாயகனின் மனவெழுச்சியும் ஊராரின் நம்பிக்கைகளும் நுட்பமாய் ஒவ்வொரு இடமும் விவரிக்கிறது.அவன் பித்து நிலைக்கு என்ன காரணம் எனவும் கையில் விலங்கு செய்ய வரும் ஆசாரியின் உரையாடல் மூலமும் முதல் பாகம் செல்கிறது.
இரண்டாம் பாகத்தில் தன் அக்கா போல இருக்கும் அமலா அக்காவின் பாசமும் நட்பும் உள்ள பகுதி சொல்லப்படுகிறது.நித்யா மேனன் தனுஷ் போல பாசமாக பழகினாலும் காதல் இவர்களுக்குள் இல்லை என்பது பெருத்த நிம்மதி.தன் அக்கா மீது அவன் வைத்திருக்கும் அதீத பாசம் வெளிப்படுகிறது. கல்லூரியில் தேவதேவனின் கவிதைகளை ஆய்வு செய்யு மாணவனாக கதை பரிணமிக்கிறது.
தமிழ் படித்துவிட்டு மும்பையிலும் சிறிது காலம் பணி செய்கிறான். வாழ்க்கையின் அலைக்கழிப்பில் மனதிலும் அதே அலைக்கழிப்பு என சுழல்கிறது பாண்டியின் வாழ்வு.
ஊருக்குப் போகும் தனுஷ் நோ சொன்ன பிரியா பவானி சங்கரை காதலித்தால் எப்படி இருக்கும் என்பது போல் சாரா எனும் பெண்ணை பார்த்து கடிதத்தில் காதலை தெரிவிக்கறான்.முதலில் அவமானப்படுத்தி அனுப்பும் சாரா பின்னர் தேர் விழாவில் தன் ஆசையை கூறுகிறாள் அதன் பின் என்ன ஆனது காதல் ரசம் சொட்ட சொட்ட இறுதிப்பகுதியில் இருபது பக்கங்களில் விரிகிறது.
நாவலின் பெரிய பலம் அதன் கவித்துவமான இயல்பான மொழி நடை.430 பக்கங்கள் நான் ஸ்டாப்பாக சென்று கொண்டே இருக்கும். வர்ணிப்பின் திளைப்பில் நல்ல வாசிப்பனுபவத்தையும் சொற்களால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்த இன்பத்தை தருகிறது.ஒரு ஆணின் வாழ்வில் பெண் ஏற்படுத்திய மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.
மனிதன் ஆதியிலிருந்து வந்தவன்.
அறிவு அதன் பின் தான் வந்தது. மனதில் அறிவை விட உணர்ச்சிகள் தான் ஆதிக்கம் செய்கிறது.ஆனாலும் அறிவை தான் நம்பனும் எனும் வரி நெஞ்சுக்கு நெருக்கமாய் இருந்தது.
நீந்தி நீந்தியே உயிரை மாய்த்துக்கொள்ளும் வரத்தை விழுங்கிய மீன்களென இரண்டு உயிர்கள் கடலின் அடியாழத்தை துளைத்து சிலும்பிய வண்ணம் தொலைந்து போயின என முடிவடைந்திருக்கும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
கடவுளிடம் கூட அல்ல
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment