செல்போன் அறிமுகமாத நேரம்.
விடுதியில் தங்கிப் படிக்கும் காலக்கட்டங்களில் பாட்டுப் புத்தகம் தான் ஒரே பொழுதுப்போக்கு. சீனியர்கள் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் அதுவும் ஒன்று.பாட்டுப்புத்தகத்தில் எண்ணற்ற ஆச்சர்யம் காத்திருக்கும். நாம் காலம் காலமாக இவர் இசையமைத்திருப்பார், இவர் பாடியிருப்பார் எனும் அனுமானத்தை சுக்கு நூறாய் உடைக்க வல்லது. அப்போது அருகில் இசை மேதை நண்பர்கள் அதை உணர வைக்கும் போது அந்த பாடகர் மீதும் அபரிமித மரியாதை வரும். அவர்கள் பாடிய பாடல்களை புதையல் எடுப்பது போல் தேடித் தேடி கேட்டு பரவசமடைந்த காலம்.
கட் பன்னினா சில நண்பர்களுடன் காரில் பயணம்.உடன் பாடல் கேட்டுக்கொண்டே..அப்போது ஒரு பாடல் 'செண்பகமே செண்பகமே' (எங்க ஊரு பாட்டுக்காரன்)ஒலித்த போது இதை பாடியது யாரென கேட்டேன்.நண்பரும் உடனே ஆஷா போன்ஸ்லே என்றார்.நான் அதில் வரும் சோகப் பாடல் மட்டுமே ஆஷா என்றும் சந்தோசப்பாடல் யாருடையது என்றேன்.இரண்டுமே ஆஷா தான் என்றார்.உடனே வண்டியை நிறுத்தி அவரையே கூகுளில் தேடச் சொன்னேன். தேடியதன் விடையில் கண்டது பாடகி சுனந்தா.நண்பர் என்னிடம் தோற்றதற்கு நூறு ரூபாய் கொடுத்தார்.
மீண்டும் எங்கள் உரையாடல் துவங்கிய போது சூரிய வம்சம் படத்தில் நட்சத்திர ஜன்னலில் பாடல் யார் என்று கேட்டேன். தயக்கத்துடன் சுஜாதா என்றார்.இதுபோல் பல பாடல்களை நமக்கு தெரிந்த ஒரு சில பாடகர்கள்தான் பாடியிருப்பார்கள் என நினைப்பது சலனப்பிழை என்பார் ஆத்மார்த்தி. இல்லை சுனந்தா என்றேன்.இது போல் லைம் லைட்டுக்கு வராத பாடகிகளில் சுனந்தாவும் ஒருவர்.கேரளாவில் முறைப்படி சங்கீதம் படித்து..சென்னைக்கு பணி மாற்றலான தந்தையோடு வருகிறார். தான் பாடிய பாடல் கேசட் நண்பர்களின் உதவியோடு இளையராஜா வுக்கு அனுப்புகிறார். அவர் பாடல்களை ஓரிரு நாளில் கேட்டுவிட்டு இளையராஜா சில ஆலாபனைகளை பாட கேட்டு புதுமைப்பெண் படத்தில் வரும் கா..தல் மயக்கம் எனும் பாடலை ஜெயச்சந்திரன் அவர்களுடன் இணைந்து பாடியது ஹிட் ஆகிறது.
ரேவதிக்கு உமா ரமணன் குரல் போல சுனந்தாவின் குரலும் இயல்பாய் பொருந்திப் போனது.இப்பாடலின் முன்பு வரும் துவக்கவரிகள்
'அன்பே உன் பாதங்கள் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்' எனும் வரிகளுக்கு இசையும் ஜுவனும் அந்தப் பாடலோடு நம்மையும் கட்டிப்போடும்
அதனைத் தொடர்ந்து சின்ன வீடு படத்தில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து 'வெள்ளை மனம் உள்ள மச்சான்' பாடல் மற்றொரு வெற்றிப்பாடலாய் அமைந்தது. சொல்லத்துடிக்குது மனசு படத்தில் இடையில் ஒரு சங்கதி பாட சுனந்தாவை அழைத்துப் பின் அது நன்றாய் இருந்ததால் பூவே செம்பூவே பாடலைப் பாடியது இன்னொரு வைரக்கல்லாக அவரின் வெற்றி மகுடத்தில் சூட்டப்பட்டது.
அதன் பின்பு ராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.பாடகர் ஜெயச்சந்திரனுடன் இவர் பாடிய பூ முடித்து பொட்டு வச்ச வட்ட நிலா பாடல் மேலும் இவரை பிரபலமாக்கியது.
இன்றும் பல பேருந்துகளில் எவர் கிரீனாய் ஒலிக்கும் செவ்வந்தி படத்தில் வரும் செம்மீனே செம்மீனே பாடல் இவர் பாடியதுதான்.இவர் பாடிய பாடல்கள் முக்கால்வாசி தாலாட்டு பாணியிலான பாடல்களாய் அமைய ராஜா வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் மன்னவா மன்னவா பாடல் இவரின் தேன்குரலுக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. படத்தின் சிச்சுவேசனே கேட்காமல் தாலாட்டு என்று நினைத்துக் கொண்டு பாடிய பாடல் நம்மையும் அந்த குரல் அக் குழந்தையை நினைத்து கண்ணீர் சொந்த வைக்கும்.
பொன்விலங்கு படத்தில் வரும் 'ஒரு கோலக்கிளி' மற்றும் ஊட்டி மலை பாட்டும் இவருக்கு பெயர் சொல்லும் படி அமைந்தது.செந்தமிழ் பாட்டு படத்தில் சுஜாதாவுக்கு பின்னனி குரலாய் சொல்லி சொல்லி பாடல் அந்த கதாபாத்திரத்துக்கு ஒத்திசைந்து இருக்கும்.இதே போல் உழைப்பாளி படத்தில் அம்மா அம்மா பாடலை எஸ்பி பி பாடியதோடு பெண் குரலில் சுனந்தாவும் சுஜாதாவுக்கு பாடியுள்ளார்.
ரஹ்மானின் இசையில் வித்தியாசமாய் கிழக்குச் சீமையிலேவில் எதுக்கு பொண்டாட்டி பாடல் பாடினாலும், காதலனில் வரும் இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
பெரும்புள்ளி படத்தில் வரும் மனசும் மனசும் சேர்ந்தாச்சு பாடல் ரேடியோவில் வந்தால் காலை மணி 9 ஆனது போல் நினைத்து ஸ்கூலுக்கு கேட்டுக்கொண்டே ஓடியிருக்கேன்.
பல குரலில் பாடகிகள் வரும் போது இதுபோன்ற பல பாடகிகள் கால வெள்ளத்தில் போய்விட்டாலும் இவர்கள் விட்டுச்சென்ற பாடல்கள் என்றும் அழிவில்லாதது.இதுபோன்ற பாடல்கள் இவர்களின் திறமைகளை குரல் வளத்தை நினைக்காமல் விட்டுவைப்பதில்லை.மீண்டும் ஸ்வரம் தா என சுனந்தாவின் குரல் கேட்க காத்திருக்கிறோம்
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment