Saturday, 25 March 2023

புத்தகம்-1


#30நாள்வாசிப்புப்போட்டி 

#TD038

புத்தகம்-1

தெய்வங்கள் முளைக்கும் நிலம்
-அ கா பெருமாள்
பக்கங்கள்-239

நாட்டார் என்ற சொல் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பு சொல்.Folklore என்ற சொல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் தெ.லூர்து நாட்டார் வழக்காற்றியல் என எண்பதுகளில் மொழிபெயர்த்தார். அது மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லாயிற்று.. என நாட்டார் இலக்கியம் பற்றி அறியாத தகவலுடன் இப்புத்தகம் துவங்குகிறது. எட்டு கட்டுரைகளில் சிறு தெய்வ வழிபாடு எவ்வாறெல்லாம் மேற்கொள்ளப்படுகிறது என்பதை ஆய்வு நோக்கில் அ.கா பெருமாள் அவர்கள் எழுதியுள்ளார்.

பண்டைய வழிபாட்டு நிலைகள் உள்ளுணர்வின்  வெளிப்பாட்டால் செயல்பட்டவை. இன்றைய நிலையில் நாட்டார் வழிபாடு மரபு வழி அல்லது கட்டாயம் என்பதற்காக இணைந்து கொள்ளும் பாங்கு பெரும்பாலும் நிகழ்கிறது என கூறுவதோடு முக்காலத்தில் பண்பாடு மற்றும் கடவுளின் வரலாறுகள் அதன் உருவானதுக்கான காரணங்களை ஆய்வு நோக்கில் விளக்குகிறார்.

நாட்டார் தெய்வம் எது என்பதற்கான காரணங்களை வகைப்படுத்தும் போது நாட்டார் வழிபாடு வேதத்துடன் தொடர்பற்றது ,மறுமை சாராதது, நாட்டா தெய்வங்களுக்கு பூஜை செய்பவர்கள் தெய்வம் சார்ந்த சாதியினராகவோ அல்லது பிராமணர் அல்லாதவராகவோ இருப்பார்கள்.இத் தெய்வத்தின் பிரதிநிதியாக கருதப்படும் சாமியாடி அத்தெய்வத்தின் அருள் பெற்றவராக தெய்வமாக கருதப்படுவார். தெய்வத்தை பிரித்துக் காட்டுவது நாட்டார் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் பலி வகைகள். இது போன்ற பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. 

நாட்டார் தெய்வ கோயில்களில் அமைவிடம் நிலைநாட்டப்பட்ட கோவில்களின் அமைவிடத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஊருணி குளம் ஏறி கணவாய் கரை ஊர் எல்லை, மரத்தை கோயிலாகவும் தெய்வமாகவும் வழிபடுவது முதலியவை. தெய்வங்களுடன் வேளாண்மை தொழில் பெருக்கம் வெப்புநோய் இணைந்து பேசப்படுகின்றன. ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரை விட்டு குடிபெயரும் போது அந்த ஊர் தெய்வம் அவர்களுடன் சேர்ந்து குடிபெயர்கிறது. பழிவாங்கும் குணம் உடையது நாட்டார் தெய்வங்கள். பெரும்பாலும் பெண் தெய்வங்களே செல்வாக்கு பெற்று இருக்கின்றன. என்று 16 வகையான நிகழ்வாக இதில் கூறப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் வில்லிசை பாடல்களின் மூலம் நாட்டார் தெய்வங்களின் தோற்றமும் நிலைப்பாடும் மக்களிடையே வாய்மொழியாக பரவி வருகின்றன. மனிதர்களின் அகால மரணம், தற்கொலை, பிறரால் நிகழ்த்தப்படும் கொலை கோர விபத்து என்பது போன்ற நியாயப்படுத்தும் செய்திகள், அவர்கள் மரணத்தின் மூலம் காரணமானவர்களை பழிவாங்குதல், மந்திரவாதிகளை அடக்குதல் போன்ற கதைகள் சொல்லப்படுகின்றன.

தமிழகத்தில் பிற்கால சோழர் காலத்தில் தான் தாய் தெய்வ வழிபாட்டின் போக்கு பரவலாய் இருப்பதை காண முடிகிறது. படை வீரர்களின் வீர உணர்ச்சியை தொய்வில்லாமல் வைத்திருக்க தாய் தெய்வ வழிபாட்டின் தொன்மம் தேவைப்படுகிறது. அதோடு வெற்றி பெற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த பொருட்கள் தாய் தெய்வ வடிவங்களும் கதைகளும் அடங்கும். கிபி 11ஆம் நூற்றாண்டில் உள்ள முதலாம் ராஜேந்திரனின் எண்ணாயிரம் கல்வெட்டில் அம்மன் வழிபாட்டுக்காக முதன் முதலில் தனி கோயில் ஏற்பட்டதை கூறுகிறது.

முத்தாரம்மன் வரலாற்றைப் பற்றி கூறும் பொழுது அக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இது முக்கிய தெய்வமாக நாட்டாரியலில் சொல்லப்படுகிறது. நிற்கும் வடிவம் அல்லது அமர்ந்த வடிவம் இருநிலையில் சிலை இருக்கும் 
மண் வடிவங்களில் நிறம் பூசப்பட்டவை ஆகும் அதிக வேலைப்பாடு இல்லாதவையாக உள்ளது சிற்பங்கள் மிக குறைந்த அளவில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 1950 க்கு பிற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல் ஆண் தெய்வமான சுடலைமாடன் சிவனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தென்பகுதியில் சுடலை மாடனுக்கு என தனி வடிவம் உண்டு. கோவில் வெட்ட வெளியிலேயே அமைந்திருக்கும். நான்கு பிறக்கும் திறந்தவெளி உடைய கோயில்களாக இருக்கும். மூன்று முதல் ஆறு அடி உயரம் செவ்வக நிலையில் அமைந்திருக்கும். அதேபோல் முனியாண்டி என்ற தெய்வம் முற்றிலும் திராவிட தெய்வமாக நாக வணக்கத்தை விட பழமையான தெய்வமாக ஆகிவிட்டனர்.

புத்தகத்தின் பின்னிணைப்பில் முத்தாரம்மன் கதை, சுடலை கடன் கதை, இடைகலை மாடசாமி கதை சந்தியடி மாடன் உள்ளிட்ட பல மாடல்களின் கதைகள் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளன.இந்நூலின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாட்டார் பாடல்களும் ,சங்க இலக்கியப் பாடல்களும் ,ஆய்வு நடத்திய போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. நாட்டார் வழக்கில் ஆர்வம் உள்ளவர்களும், சிறு தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களும் புத்தகத்தை படிக்கும் போது இதன் வரலாற்றையும் வாசிப்பு அனுபவத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள உதவும்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment