#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-6
Book-12
Pages-312
கருப்பு வெள்ளை இந்தியா
-முகில்
நவீன வரலாற்றை வாசிப்பவர்களுக்கு மிக எளிமையாகவும் சுவையாகவும் புதிதாகவும் தரக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். மதன், மருதன், ஆர்.முத்துக்குமார் போன்றவர்களின் வரிசையில் வைத்து பாராட்டப்பட வேண்டியவர் முகில் அவர்கள். இந்த புத்தகத்தில் வந்த 'ரயில் விட்ட கதை' கடந்த ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வந்த போது படித்தேன். அந்த கட்டுரை தலைப்பில் அமைந்த புத்தகம் இன்னும் கூடுதல் தகவல்களுடன் ரயில் குறித்த பல சுவையான சம்பவங்களையும், இப்புத்தகம் கூறுவதால் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி விட்டேன். இப்போதுதான் படித்து முடித்தேன்.
ரயில் விடுவதற்கான மூல காரணம் என்பது தொழில் புரட்சியின் பலனாக பிரிட்டனின் பருத்தி தேவையை பூர்த்தி செய்ய சந்தைகளை உருவாக்குவதற்காக என்பது புதிய தகவலா இருந்தது. 1825 ஆம் ஆண்டில் தான் பிரிட்டனின் முதல் ரயில் ஓட தொடங்கியது இது உலகின் முதல் பயணிகள் ரயிலும் கூட. இந்தியாவில் முதன் முதலில் ஹவுரா-ஹுக்ளி மற்றும் தானே பம்பாய் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் முதலில் ரயில் விட்ட பெருமை மும்பை தானே இடையே 1853 ஏப்ரல் 16 அன்று துவங்கப்பட்டது. அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 14 ரயில் பெட்டிகளுடன் 400 விருந்தினர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வாத்தியங்கள் ஒலிக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி கிளம்பியது என்ற செய்தியை படிக்கும் போதே அந்த முழு கட்டுரையும் படிக்க வேண்டிய ஆவலை அதை தூண்டியது.
இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன அல்ல அவை பல்வேறு தனியாரால் கட்டமைக்கப்பட்டது என்ற செய்தியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதன் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயிலில் வேல்ஸ் இளவரசர் பயணம் என்னும் கட்டுரையில் 1875 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களை மிகவும் சுவையாக இதில் சொல்லி இருக்கிறார். ரயில் நிலையத்தில் தென்னிந்திய ரயில்வேயின் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவையை தன் கரங்களால் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணித்து அவருக்கு வழி எங்கும் உற்சாக வரவேற்புகள். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் எட்டயபுரம் ஜமீன்தாரின் மதிய விருந்து.. மாலை 5 மணிக்கு மதுரையில் தங்கியிருந்தது. அங்கு கட்டி முடிக்கப்பட்ட திருமலை நாயக்கர் மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்த்துவிட்டு அங்கிருந்து திருச்சி கோவிலுக்கு சென்று..பின் மெட்ராஸில் ஆறு நாட்கள் தங்கி இருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை ராயபுரம் வரை சென்ற சொகுசு ரயில் தான் தமிழகத்தில் நீண்ட தூரத்துக்கு ஓடிய முதல் ரயிலாக சொல்கிறார் ஆசிரியர்.
சிம்லா எவ்வாறு இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்தது என்பதையும், சிம்லாவின் வரலாற்றையும் மிகவும் சுவாரசியமாக வரலாற்று பின்னணியுடன் நமக்கு தந்திருக்கிறார். இறுதியில் குரங்குகளின் பெருக்கம் அதிகரித்ததால்.. என்ன செய்வது என்று தெரியாமல் குரங்குகளையும் கொல்ல முடியாமல், குரங்குகளை ஏற்றுமதி செய்யவும் முடியாமல், பிரிட்டிஷார் தவித்ததை இந்த கட்டுரையில் நாம் காண முடிகிறது .சிம்லாவில் நீடித்து வாழ்வதற்கான உரிமை என்றுமே மனிதர்களை விட குரங்குகளுக்கு அதிகம். ஏனென்றால் அவையே நம்மை விட பழங்குடிகள் என்று ஆசிரியரின் டச் இதில் உணர முடிகிறது.
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா என்ற பாடலுக்கு உண்மையானவர்கள் யார் எனில் பங்காவாலாக்கள் தான் .பங்கா என்ற இந்துஸ்தானி சொல்லுக்கு சிறகு என்று பொருள். பறவை சிறகடிக்கும் போது காற்று எழும் ..அதுபோல விசிறி விடும் வேலைக்காரர்களை பிரிட்டிஷார்கள் தம் ஆவணக்களில் பங்காவாலா என்று குறிப்பிடத் தொடங்கினார்கள். வெயில் காலத்தில் விசிறி விடுவதுக்கு என்று ஆட்கள் பலரை நியமித்திருந்தார்கள். அவர்களின் பணியே காலையும் மாலையும் விசிறி விட வேண்டும் .விசிறி என்றால் கைவிசிறியல்ல. ஒரு அறை அகலத்திற்கு இருக்கும். பட்டுத்துணியால் இருக்கும். கயிற்றை இழுத்து இழுத்து காற்றை வழங்க வேண்டும் .ஒரு கட்டத்தில் அந்தரங்கமாய் பேசுவதை ஒட்டு கேட்டு விடுவார்களோ என்ற நினைத்து ஒரு ஓட்டை போட்டு சுவருக்கு அந்தபக்கம் இருந்து கயிற்றை இழுத்து காற்று வர வைக்க வேண்டும். இவர்களின் உண்மையான வரலாற்றை படிக்கும் போது நிச்சயம் துயர் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த புத்தகத்தில் நான் அறிந்து கொண்ட புதிய செய்தியாக இது உள்ளது.
மகாராஜாக்கள் தன்னை எவ்வாறெல்லாம் ஒப்பனை செய்து கொண்டனர். எவ்வளவு அழகாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். விதவிதமான ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டனர் என்பதை புகைப்படம் வாயிலாக பற்றி சொல்லும் போதே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
#ரசித்தது
*பிரிட்டிஷ் ரயில்வேயில் நான்கு வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு ஆடம்பரமாகவும் இரண்டாம் வகுப்பில் சில சொகுசுவசதிகள் மட்டும் மெத்தை போல் வசதியான இருக்கை உட்பட இருந்தன. மூன்றாம் வகுப்பு சாதாரண இந்தியர்களுக்கானவை அந்த பெட்டிகள் மரத்தால் செய்யப்பட்டவை. ஜன்னல் கம்பிகள் கூட இருக்காது. நான்காம் வகுப்பில் மரபெஞ்சுகள் கிடையாது. வெறும் பெட்டி மட்டுமே உடலை திணித்துக் கொண்டு நிற்க வேண்டும். இந்த நான்காம் வகுப்பு பெட்டிகளுக்கு ஆங்கிலேயர் வைத்திருந்த பெயர் cattle classes.
*1950 ஆம் ஆண்டில் இந்தியாவில் 8120 நீராவி என்ஜின்கள், 72 எலக்ட்ரிக் என்ஜின்கள், 17 டீசல் இன்ஜின்கள் மட்டும் நம் வசம் இருந்தன .அதிலும் பெரும்பாலான எஞ்சின்கள் சுமார் 10 ரயில் பெட்டிகள் வரைய இழுக்கும் திறன் கொண்டவை. பிரிவினைக்கு முன்பு 65 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு ரயில் பாதைகள் இருந்தன
*கல்கத்தாவில் ஒரு கடையில் புதிதாக குலோப் ஜாமுன் இனிப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதனை சுவைத்துப் பார்த்த கானிங்கின் மனைவி அகம் மகிழ்ந்து இதன் பெயர் என்ன என்று கேட்டார். பெயர் வைக்கவில்லை என்று சொன்னதும் உங்கள் பெயரை வைத்துவிடலாம் என்று சந்திர நாக் சொல்ல லேடி கானிங் என்று அந்த இனிப்புக்கு பெயர் வைக்கப்பட்டது. இன்றளவும் லெடிகேனி என்று நிலைபெற்றும் இருக்கிறது.
*1761 ஆண்டில் ஜாட் இனத்தவர்கள் தாஜ்மஹாலில் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட வெள்ளிக் கதவுகளை கழட்டி எடுத்துக்கொண்டு போனார்கள். அதன் அன்றைய மதிப்பு ஒன்றேகால் லட்சத்திற்கும் மேல்.
இந்த நூலில் இடம் பெற்ற பத்து கட்டுரைகளில் நான் படித்து ரசித்த சிலவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்து உள்ளேன். ஆனால் ஒவ்வொரு கட்டுரைகளுக்கு பின்னாலும் இடம்பெற்றிருக்கும் சுவாரசியமான தகவல்களும் புகைப்படங்களும் கொட்டிக் கிடக்கும் வரலாறுகளும் ஏராளம். வரலாற்றை படிக்க நினைப்பவர்களும் ,புதிதாக தெரிந்து கொள்ள வாசிப்பவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் தான் இந்த ஆண்டு வெளிவந்துள்ள கருப்பு வெள்ளை இந்தியா
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment