Tuesday, 18 April 2023

Book-69


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-25
Book-69
Pages-315

உளவியல் ஆலோசனை
-தி கு இரவிச்சந்திரன்

உள்ளம் என்பது ஆமை,
அதில் உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி,
நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி. என்று எழுதி இருப்பார் கவியரசர்.உள்ளத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். உளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை இப்புத்தகம் வழங்குகிறது. இதில் உள்ள 123 கட்டுரைகள் அனைத்தும் அரைப்பக்கம் ஒருபக்கம் மட்டுமே மீறினால் இரு பக்கங்கள
இருப்பதால் படிப்பது சுலபம். ஒவ்வொரு விசயங்களுக்கும் தேவையான மேற்கோள்கள் கொடுத்திருப்பதால் அனைத்தும் எளிதில் விளங்கும்படி இருக்கிறது.

உள்ளம் என்றால் என்ன உளவியல் படி நோக்கினால் நமது செயல்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றுதான் மனம் என்கிறது. பெரும்பாலும் மூளை செயல்பாட்டில் மனதை பொருத்திப் பார்க்கிறது உளவியல். அதிலும் நரம்பணுக்களின் செயல்பாடுகளையே மனம் என்கிறது .அப்படி என்றால் மனதை பொருளாக பார்க்கின்ற போக்கு உளவியலில் உள்ளது. உள்ளம் என்பதற்கு உள்ளுதல் அல்லது எண்ணுதல் என்று அதிலேயே விடை இருக்கின்றன. உள்ளத்தை குறிக்கின்ற psyche எனும் ஆங்கில சொல் கிரேக்கத்திலிருந்து கையாளப்பட்டு வருகிறது. இதன் நேரடி பொருண்மைகள் உயிர் மனம் ஆவி சிலவேளை சுவாசத்தையும் குறிக்க பயன்படுத்தியது உண்டு

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான் அவர் தனது மகளைக் காண அடுத்த ஊர் சென்றான். அது எப்படியோ சிலருக்கு தெரிந்து விட்டது .அவரை வழியில் பார்த்த முதல் இளைஞன் அண்ணே உங்க கண்ணு ஏன் ஒரு மாதிரியா இருக்கு? என்றார், ஒன்றும் இல்லையே என கூறிச் சென்றார். அடுத்ததாக வந்தவர் முகம் ஏன் தொலைவில் பார்க்க மாதிரியா இருக்கு.. அதற்கும் மறுத்தான். நடையில் கொஞ்சம் தொய்வு தெரிகிறது என்றான். இன்னொருவன் சொன்னதற்கு அதனையும் மறுத்தான். அதற்கு பின் நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணத் தொடங்கினான். நடை தளர்ந்தது, முகம் வாடியது, உடல் கொதித்தது. ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் சாய்ந்தான் என்று அந்த கதை முடிகிறது. நமது மனம் இயல்பில் பலவீனமானது என்பதை உணர்த்தும் கதை தான் இது

பித்த நிலை ,கூடுதல் புலனறிவு ,பால்நிலை மனம், நவீன நோய்கள் இச்சை என உளவியல் காரணங்கள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வருகிறார் .இதில் வாய் மோகம் முதன்மையானது என்கிறார்.லக்கான் கொள்கைப்படி கண்மோகம் முதன்மையானது என்கிறார்கள் .நம் மனதை அலைக்கழிக்கும் பணியில் வாய்ச்சுவையும் கண்ரசனையும் பெரும் பங்கு வைக்கின்றன. பிறந்த குழந்தையின் மனதுக்குள் விளைவுகளை ஏற்படுத்துகின்ற ஐம்புலன்களில் இவை இரண்டும் அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன

பிறக்கும் முன் நம் மனம் சூனியத்திலிருந்து இருந்தது. பிறக்கும்போது முதல் எண்ணம் தோன்றுகிறது. தோன்றியவுடன் அழுகை வந்து விடுகின்றது. அப்போதே நம் மனதில் கருவறை வேட்கை வந்து விடுகிறது. இதை கண்டுபிடித்தவர் தியோடர் ரெய்க். கருவறை பற்றிய எண்ணமே நமது முதல் எண்ணம். முதல் எண்ணமே வேட்கை என்றாகி விட்டது .அதனால் தான் வாழ்நாள் முழுவதும் வேட்கைப் போக்கில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிறார்‌.

ஐம்புலன்களும் உணர்வுகளும் என்னும் கட்டுரையில் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு மன வெளிப்பாடுகளை கூறுகிறார் ஆசிரியர். இனிப்பு என்பது இன்பத்தின் ஆதாரம் .அதனால் தான் மகிழ்வு நடந்தால் நாம் இனிப்புடன் கொண்டாடுகிறோம். உவகை உணர்வு வருகிறது. அடுத்த உவர்ப்பு மனித உடலில் பெரும் பகுதி உப்பு கலந்துள்ளது .இது அளவோடு இருந்தால் நல்லது. உப்பு அதிகம் எடுத்துக் கொண்டால் ரோஷம் இருக்கும் என்று நாம் நம்புகிறோம். காரம் என்றால் கோபம் .நாவில் காரம் பட்டவுடன் நரம்பு உணர்வுகள் கடுகடுப்பாவதன் வழியில் மனம் கடுகடுப்பாகும். புளிப்பில் சகிப்புத்தன்மை உள்ளது. சகிப்புத்தன்மை குறையும். அதேபோல் கசப்பானது விரும்புவோரிடம் சோகங்களை தாங்கிக் கொள்கின்ற மனநிலை ஏற்படும் .அதிக கசப்பு விரும்பினால் சுயநலம் அதிகம் உள்ளது என்று உளவியல் கூறுகிறது. இறுதியாக துவர்ப்பு சிரத்தை எடுக்கின்ற மன நிலை ஏற்படுத்தும் என்கிறது உளவியல் .பெரிய இலக்கில் மனதை ஈடுபடுத்த துவர்ப்பு சுவை துணை புரிகிறது. இவை அழுக்கை போக்கும் தன்மை உடையது.

ஒரு எண்ணத்தை செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும் போது டென்ஷன் ஏற்படுகிறது .இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு .அந்த எண்ணம் மீது நாம் ஏற்படுத்திக் கொள்கின்ற அதீத அவா. மற்றொன்று சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாமை அல்லது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படாமை. இரு மனங்களின் நெகிழ்ச்சி குறைபாடே இதற்கு காரணமாகும் என்கிறார்.

மனநலத்திற்கும் வாசிப்பு பழக்கத்திற்கும் மிகச் சிறந்த ஒற்றுமை உள்ளதாக உளவியலாளர்கள் சொல்கிறார்கள் .கல்வி புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு நோக்கம் உள்ளது .அது அறிவு சார்ந்தது .அறிவு விசாலம் அடையும். பொது புத்தகங்கள் படிப்பதற்கு நாம் வைத்த பெயர் பொழுதுபோக்கு. உண்மையில் இத்தகைய வாசிப்பு பொழுதுபோக்குடன் நின்று விடுவது கிடையாது .மனதை விசாலம் ஆக்குகிறது. நாவலையோ கவிதையோ வாசிக்கும் போது அதில் வரும் காட்சிகளை மனதுக்குள் கற்பனை செய்ய வேண்டி உள்ளது .படிக்க படிக்க நம் மனதுக்குள் காட்சிகள் ஓடும். இதனால் மனதில் எண்ணங்கள் புத்துணர்ச்சி பெருகும். சிந்தனை திறன் வளரும். சோம்பி கிடக்கின்ற உணர்வுகள் ஓட்டம் பெரும் மனதின் அகப்பார்வை விசாலமடையும் என்கிறார்.

மனித ஜாதியில் 
துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா ...

~ கண்ணதாசன் ~

*பிறழ்வு மனம் கொண்டவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருப்பதாக கருத வேண்டாம் சராசரி மனிதர் யாவரும் சற்று பிறழ்நிலை மனம் உடையவர்களே

* நனவு நிலையில் நாம் எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் கனவில் நாம் அனைவரும் பித்தர்களே என்கிறார் பிராய்டு 

*எண்ணங்களின் கணம்(set of thoughts) மனம் ஆகும்

*எண்ணங்களை அதன் போக்கில் ஓட விட்டு வெறுமனே கவனித்து வந்தாலே மனப்பயிற்சி கைக்கூடும்.

*நெடுந்தொடரை பார்க்கும் பெண்கள் பின்வரும் இரண்டில் ஒரு குணத்தை உள்வாங்கி வைத்து விடுகின்றனர். ஒன்று சோகத்தில் சுகம், இன்னொன்று கோபத்தில் சுகம்.

*சந்தேகப்படு என்கிறார் மார்க்ஸ். பலபேர் இதனை பிழைப்பாக கொண்டு இருக்கின்றனர். மார்க்ஸ் சொன்னது அறிவு சார்ந்த சந்தேகம். மனிதன் பின்பற்றுவது உணர்வு சார்ந்த சந்தேகம். இந்த சந்தேகம் நம்பிக்கையின் எதிர் முகம் .ஒன்று கூடினால் இன்னொன்று குறையும். இரண்டுக்கும் இடையில் மனிதனின் ஊசலாட்டம் நின்றபாடில் இல்லை

இவ்வாறு புத்தகம் முழுவதும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மனிதனை பண்படுத்த வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தகங்கள் உள்ளது. எந்த ஒரு பகுதிகளும் வீணாணவை என்று ஒதுக்கி விட முடியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் உளவியல் ரீதியான கருத்துக்களை பரவ விட்டுள்ளனர் .

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment