Wednesday, 31 May 2023

வல்கனை சிங்க்


அது வல்கனை சிங்க் அல்ல !வல்கனைசேஷன் !.

ஆங்கிலத்தில் VULCANAISATION எனப்படும்.

நான்கு சக்கர வாகனங்களில் பங்ச்சர் ஆனால் சாதாரணமாக சைக்கிள் மற்றும் பைக் டியூப்களில் ஸ்டிக்கர் ஓட்டுவது போன்று ஓட்டினால் டயர்களில் அதிக அழுத்தம் காரணமாக மீண்டும் ஸ்டிக்கர் உரிந்துவிட வாய்ப்புண்டு.

அதனால் அதனை தவிர்க்கும் விதமாக சற்றே பெரியளவில் துளை விழுந்த இடத்தில் மற்றொரு ரப்பார் துண்டினைநடுவில் சிறிது கந்தகம் வைத்து பசையால் ஒட்டிவிட்டு இரண்டு இரும்பு துண்டுகளின் நடுவே ரப்பர் டியூபினை வைத்து அழுத்தி சூடு செய்தால் இரண்டு ரப்பர் இணைப்புக்களும் இன்னும் சற்று உருகி ஒன்றுடன் ஒன்று ஒட்டி கனமாக இறுகிவிடும்.

அதன்பின்னர் அங்கே ஸ்டிக்கர் உரியாது.அந்த இடம் தடிமன்(THICKNESS) அதிகரித்த காரணத்தால் மீண்டும் பங்ச்சரும் ஆகாது.

இது வல்கனைசேஷன் என்றழைக்கப்படும் ப்ராசஸ்.நமது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு விட்டார்கள்.

Tuesday, 30 May 2023

ஒளவையார்


கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்

பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

*சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேரமாட்டார்கள்ம். கல் உடைந்ததை போல

*சிலர் கோபப்படுவர் மீண்டும் சேர்ந்துவிடுவர்.தங்கம் உடைந்ததுபோல்

**சான்றோரின் கோபம்,வில்லை எடுத்துத் தண்ணீரில் அம்பு எய்தாற்போல்..ஒரு நொடி தண்ணீர் விலகும்.மீண்டும் சேர்ந்துவிடும்

-ஒளவையார்

Monday, 29 May 2023

நீட்சே


ஒரு ஆழமான மாயைக்குள் வாழ்ந்து வருகிறோம்-அதுதான் நம்பிக்கை,நாளை,வருங்காலம் என்னும் மாயை. மனிதர் இன்று இருக்கிற நிலையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் உயிர்வாழ, உண்மையுடன் ஒன்றி வாழ முடிவதில்லை

-நீட்சே

Sunday, 28 May 2023

போகன்


மகாத்மா காந்தியின் பிரார்த்தனை .
(ஒரு சுமாரான மொழிபெயர்ப்பு)

கடவுளே!
வலியவர்கள் முன்பு சத்தியத்தை உரைக்கும் துணிவை எனக்குக் கொடு.
பலவீனர்களின் கைதட்டலுக்காகப் பொய் உரைக்க என்னை விடாதே.

நீ எனக்கு அதிர்ஷ்டத்தை அளித்தால் என் அறிவை எடுத்து விடாதே
நீ எனக்கு வெற்றியை அளித்தால் எனது பணிவை எடுத்து விடாதே.
நீ பணிவை எனக்கு அளித்தால் எனது கவுரவத்தை எடுத்து விடாதே.

எப்போதும் நாணயத்தின் மறுபக்கத்தைக் காண எனக்கு உதவி செய்.
என்னைப் போலவே சிந்திக்காதவர்களை  துரோகிகள்  என்று எண்ண 
என்னை அனுமதியாதே.

என்னை நான் விரும்புவது போலவே மற்றவரையும் விரும்பக் கற்றுக்கொடு
வெல்லும்போது ஆணவத்தினாலும் 
தோற்கும்போது  மனத் தளர்ச்சியினாலும் 
வீழ்ந்துவிட என்னை அனுமதிக்காதே.

வெற்றியைவிடவும் தோல்வி நீடித்திருக்கும்  ஞானம் 
என்று எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இரு.
மன்னிப்பது மேன்மையின்
பழிவாங்குதல் தீமையின் அறிகுறி
என்று எனக்குக் கற்றுக்கொடு.

நீ என்னிடமிருந்து வெற்றியை எடுத்துக்கொண்டால்
அதிலிருந்து கற்றுக்கொள்ளும் ஊக்கத்தை எனக்கு வழங்கு
நான் மற்றவரைக் காயப்படுத்தினால்
அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பான்மையை எனக்கு வழங்கு.
மற்றவர்கள் என்னைக் காயப்படுத்தினால்
அவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை எனக்கு வழங்கு.

கடவுளே!
எப்போதேனும் நான் உன்னை மறந்தால்
தயவுசெய்து 
நீ என்னை மறந்துவிடாதே.

-போகன் சங்கர்

Thursday, 25 May 2023

கறையான்


அண்மையில் கண்ட பிழைப்பயன்பாட்டுச் சொற்களில் ஒன்று ‘கரையான்’ என்பது. உள்ளிருந்து அரிக்கும் செல்லுப் பூச்சியைக் குறிக்கும் சொல்லாகக் ‘கரையான்’ என்று பயன்படுத்துகின்றனர். 

இடையின ரை ஆளப்படும் ‘கரையான்’ என்ற சொல்லுக்குக் கரை + ய் + ஆன் = கரையான் என்ற பொருளைத்தான் கொள்ள வேண்டும். அதாவது கரையிலிருப்பவர் என்பது பொருள். 

கரையில் இருப்பவர் யார் ? மீனவர்கள். அவர்களை வலைஞர்கள் என்பர். அவர்கள்தாம் வலையிட்ட பின்னர்க் கரையில் காத்திருப்பவர்கள். கரையில் வாழ்பவர்கள். அதனால் கரையான் என்ற சொல் மீனவர்களையும் கரைவாழ் மக்களையுமே குறிக்கும். அச்சொல் ஒருபோதும் புத்தகங்களை அரிக்கும் பூச்சியைக் குறிக்காது. 

புத்தகத்தை, மரத்தை அரிக்கும் பூச்சியின் பெயர் எது ? அதனைக் ‘கறையான்’ என்று எழுத வேண்டும். 

கறித்தல், கறத்தல், கறள்தல், கறுத்தல் முதலானவை ஒன்றுக்கொன்று அருகிலான பொருளுடைய சொற்கள். 

கறித்தல் என்றால் பல்படுபொருளைக் கடித்தல். இதுவே பிறகு கொறித்தல் ஆகியிருக்க வாய்ப்புள்ளது. அணில் கறித்த/கொறித்த கொய்யா. 

கறத்தல் என்றால் உள்படுபொருளை உண்ணற்கு (அல்லது பயன்பாட்டிற்கு) எடுத்தல். பால் கறக்கிறோம். 

கறள்தல் என்றால் வளர்ச்சியறுமாறு செய்தல், அவ்வளவிற்கு உண்டு அகற்றுதல். 

கறுத்தல் என்றால் அழுக்கு/மாசு/குறை ஆதல். 

இச்சொற்கள் அனைத்தோடும் அருகுத்  தொடர்புடைய சொல்தான் ‘கறை’ என்பது. உண்ணற்குச் செய்யும் உறுவழி அல்லது ஊறுவழி. அதன்வழியுற்ற குறைவு, கெடுவு. 

ஊர்ப்புறத்துப் பேச்சு வழக்கினை ஊன்றிக் கவனியுங்கள். உடைபட்ட தேங்காய்ப் பாதியைப் பற்களாலேயே அரித்துத் தின்பார்கள். அதனைக் ‘தேங்காயைக் கறண்டு தின்னுட்டான்’ என்று கூறுவர். 

இங்கே கறளுதல் என்பது வினை. இந்தக் கறள்பாடுற்றது கறை. அந்தக் கறையைச் செய்யும் பூச்சியினம் என்பதால் அது கறையான். அப்பூச்சி ஒரு பொருளைக் கறிக்கிறது / கறக்கிறது / கறள்கிறது. கறை உருவாக்குகிறது. எனவே அது கறையான். 

அதனால் அரிக்கும் செல்லுப் பூச்சியைக் குறிப்பதற்குக் ‘கறையான்’ என்றே எப்போதும் ஆள்க ! 

- கவிஞர் மகுடேசுவரன்

Wednesday, 24 May 2023

marriage


திருமணம் வெற்றி பெற இரண்டே விதிகள் தான்…

ஆக்டன் நாஷின் (Ogden Nash) மேற்கோள் இது.

To keep your marriage brimming

With love in the loving cup

Whenever you are wrong, admit it…

Whenever you are right, shut up..

எழுத்தாளர் சுஜாதாவின் மொழிபெயர்ப்பில்…

"இல்லற இன்பத்துக்கு

இதுமட்டும் கத்துக்கொள்

தப்பென்றால் ஒத்துக்கொள்

சரியென்றால் பொத்திக்கொள்!"

வரலாற்றை மாற்றிய புகைப்படம்




அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன். 

இந்த புகைப்படம் பற்றி, 'மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கின்றன.  அதிகாலை 3:30 மணிக்கு வேலையைத் தொடங்கி, மாலை 5 மணி வரை வேலை  செய்ய எதிர்பார்க்கப்படுகிறது" என்று எழுதினார்.  

சிகாகோவிலிருந்து புளோரிடா வரை நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகளை புகைப்படங்களாகப் பதிவுசெய்தார். இவை  குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக கூக்குரலை எழுப்ப உதவியாக இருந்தது. மேலும், பிரச்னையின் தீவிரம் பற்றி அமெரிக்க மக்களுக்குப் பரவலாக  தெரியப்படுத்தியது.

விளைவாக, 1904 ஆம் ஆண்டில் தேசிய குழந்தைத் தொழிலாளர் கமிட்டி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இது குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு வழிவகுத்தது.

Tuesday, 23 May 2023

அ.மு


வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான்.அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.

அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான்.அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான்.அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான்.அது எந்திரம் என சொல்லவில்லை.

ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான்.மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான்.சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழித்துக் கொண்டது.பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.

இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான்.பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும்,பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது.

#எஜ்சிவெல் எழுதிய கதை.மதங்கள் உருவானதை கூறுகிறார்.இது வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.

படித்தது

Saturday, 20 May 2023

sudharsan


என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.

சுஜாதாவின் குரலோடு ஆரம்பமாகிற பாடல். கதையின்படி பெண்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். களைப்புத் தெரியாமல் பாடுகிற பாடல். பின்னணியில் ரஹ்மான் ஓர் ஓசையைப் பயன்படுத்தியிருப்பார். பாடல் நெடுக அந்த ஓசை இருக்கும். கிராமிய உணர்வுக்காக அந்த ஓசை பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும். 

அதைப் பெண்கள் நெல் குற்றும் ஓசைபோல கற்பனை செய்துகொள்ளவும்.
பெண்கள் உலக்கையால் நெல் குற்றும்போது, இருகைகளையும் மாற்றி மாற்றிக் குற்றுவர். அப்போது அவர்கள் அணிந்திருக்கும் வளைகள் குலுங்கி ஓசை எழுப்பும். அதை வள்ளைப்பாட்டு என்பார்கள். உள்ளத்தில் இருப்பதை உள்ளபடி தலைவி பாடுவாள். இடிக்க இடிக்க உமி எப்படிக் கழன்று போகுமோ அதுபோல இந்தப் பாடல்மூலம் அவள் உள்ளத்து துன்பம் நீங்கும். காதல் வெளிப்படும்.

முற்றத்தில் தினை குற்றுகையில், தலைவி கோபத்தில் தலைவனைப் பழித்துப் பாடுவாள். தோழி, தலைவனுக்கு ஆதரவாகப் பாடுவாள். உதாரணமாக, அவனுடைய நாட்டு வண்டுகள் எல்லாம் பூவினை மணந்துவிட்டு அதன் அழகு கெட கைவிட்டுச் செல்லும் என்று தலைவி சொல்வாள். 

உடனே அதற்கு மறுமொழியாக, அவனுடைய நாட்டு ஆண் யானை, தான் விரும்பிய பெண்யானைக்கு கடினப்பட்டுக் கரும்பு கொண்டுவரும் என்று தோழி கூறுவாள். கலித்தொகையில் கபிலர் எழுதிய "அகவினம் பாடுவம்" பாடல் தலைவிக்குத் தோழி மறுமொழி சொல்லும் பாடல்.

"என் வீட்டுத் தோட்டத்தில்" பாடலில், ஒருபக்கக் காதல் மட்டும் கொண்டிருக்கும் இவள், தன் காதலை பூக்களிடமும் ஜன்னல் கம்பிகளிடமும் கேட்டுப்பார்க்கச் சொல்கிறாள். இருவரும் மாற்றி மாற்றி எதிர்ப்பாட்டு பாடுவார்கள். முதலில் பெண் மறுத்துக் கூறுவாள். பிறகு ஆண் மறுத்துப் பாடுவான். வைரமுத்து அதைக் கையாளும் நயம் அழகு.

வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது.
வாய்ப்பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது.

வண்டெல்லாம் சத்தம்போட்டால் பூஞ்சோலை தாங்காது. மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது.

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே 
சொல்லுக்குள் அர்த்தம்போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது 
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.

-சுதர்சன்

டால்ஸ்டாய்



நினைவில் வைத்துக் கொள்வாய்,முக்கியமான நேரம் என்பது இந்த நொடிதான்.
அப்போது யாருடன் இருக்கிறோமோ அவர்களே முக்கியமானவர்கள்.ஏனெனில் அதற்குப் பின் அவர்களை சந்திப்போமா தெரியாது. அவர்களுக்கு நன்மை செய்யவதே முக்கியப்பணி. இதற்காகவே இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டோம்

-டால்ஸ்டாய்

Thursday, 18 May 2023

காப்சா


கற்கை நன்றே-32
*மணி

CAPTCHA - Completely Automated Public Turing Test to Tell Computers and Humans Apart.

தமிழில், மனிதர்கள் மற்றும் கணினிகளை வேறுபடுத்திக் காட்டும், முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் டூரிங் சோதனை

இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானிய நாஜிக்களின் ரகசிய சங்கேத செய்திகளை புரிந்து கொண்டு, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் போரில் ஜெயிக்க உதவியவர் அலன் டூரிங். அவர் பிரபல கணினி மேதை. அவர் இயந்திரங்கள் மனிதர்களைப் போன்று அறிவாட்சித்தரம் பெற்றிருக்க முடியுமா என்பதற்கு டூரிங் சோதனை(Turing Test) என்ற ஒன்றைக் குறிப்பிட்டார். அதில், ஒரே கேள்வியை மனிதன் மற்றும் இயந்திரத்திற்கு எழுப்பி, அதன் மூலம், பதிலைக் கொண்டு, இயந்திரத்தினால் மனிதனைப் போல , வேஷமிடமுடியுமா(Imitate) என்று கண்டுபிடிக்கலாம் என்றார்.

அலன் டூரிங்

அதுதான் இன்று காப்ட்சா(CAPTCHA) என்று அழைக்கப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டு, லூயிஸ் வான் ஆன்(Luis Von Ahn) மற்றும் அவரது பேராசிரியர் மேனுவல் பிளம்(Manuel Blum) அவர்களால் , கணினிகளை மற்றும் கணினி வலையமைப்புகளை(computer network), தானியங்கி நிரல்களின்(automated programs) தாக்குதலிலிருந்து காப்பாற்ற கண்டுபிடிக்கப்பட்டது.

இயந்திர செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) பெருகியுள்ள இந்தக் காலத்தில், இந்த காப்ட்சா தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது. திருடர்களைக் கொண்டு, பூட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதைப் போல், இதுவும் தொடர்ந்து கடினமாகிக் கொண்டே வருகிறது.

2000 ஆம் ஆண்டில், லூயிஸ் வான் அஹ்ன் என்ற 22 வயது இளைஞன் தனது பேராசிரியர் மானுவல் ப்ளூம் உடன் இணைந்து தானியங்கு நிரல்களை வெவ்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் இணையதளங்களைத் தாக்குவதைத் தடுப்பதற்காக கேப்ட்சாவை உருவாக்கினார்.

பயனர் மனிதரா இல்லையா என்பது சரிபார்க்கப்பட்டது
இது OCR ஆல் படிக்க முடியாத வார்த்தையை சரிபார்த்து, மனித அறிவுக்காக அதை டிஜிட்டல் மயமாக்கியது

கேப்ட்சா வகைகள்

கேப்ட்சாக்கள் பொதுவாக மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன-

1.உரை அடிப்படையிஎழுத்துக்கள்
-சிதைந்த எழுத்துக்கள்

2.CAPTCHA படம்

3.ஆடியோ கேப்ட்சா

பின்னர் இன்று நாம் பயன்படுத்தும் புரட்சிகர API வந்தது - NoCAPTCHA reCAPTCHA.

I'm not a robot  வகை

இதுவும் பாதுகாப்பு
 குறைவாகவே உணரப்பட்டது

சைபர் செக்யூரிட்டியின் பாதுகாப்புற்காகவே இவையெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இன்னும் எதிர்காலத்தில் மாற்றமடையலாம்

இனியகாலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 17 May 2023

காஃப்கா


புகழ்பெற்ற ஜெர்மனிய எழுத்தாளரான "ஃபிரான்ஸ்  காஃப்கா"  வரிகள்....

எழுத்துக்கு கை,கால்,கண், காது, இதயம் எல்லாம் இருக்கிறது. யாராவது அழுதால்
எழுத்தின் கரங்கள் நீண்டு சென்று துடைத்துவிடும். உங்களை விட்டு யாராவது பிரிந்து சென்றால் எழுத்தின் கால்கள் விரைந்து சென்று அவரை கொண்டு வந்து உங்களிடம் சேர்த்துவிடும். உங்களுக்கு துயரமென்றால் எழுத்தின் இதயம் 
உங்களுக்காக துடிக்கும். உங்களை தன்னோடு சேர்த்து அணைத்துகொண்டு நம்பிக்கையளிக்கும் நூறு கதைகளை உருவாக்கி சொல்லும்"...

எல்லா திருப்திகளையும் ஒரு ஏக்கம் தாண்டிச் செல்லும். அதை துரத்திச் செல்லும் பாதையில் இவ்வாழ்வு தொலையும்

-சேரவஞ்சி

Tuesday, 16 May 2023

ஜா.தீபா


எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் வசனம் எழுதிய திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நாவலுக்கும் திரைக்கதைக்குமான செய்திறனை நன்றாக அறிந்த எழுத்தாளர் என்றால் அவர் பாலகுமாரன் தான்.  அவரது நாவலின் முத்திரை திரைப்பட வசனங்களிலும் இருக்கும். ஆனால் தனியாக உறுத்திக் கொண்டு நிற்காது. ‘உல்லாசம்’ படத்தில் அஜித் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டுமென அவர் காலில் எரிகிற சிகரெட்டைப் போட்டு மிதிப்பார் ரகுவரன். அஜித் ஜெயித்துவிடுவார். “ஏன் அப்படி பண்ணீங்க..வலிக்குதுல்ல” என்றவுடன் “வலிச்சா ஜெயிக்கறல்ல..வலி தாங்கிப் பழகு” என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போவார் ரகுவரன். இந்த வரிகளை அவர் பல்வேறு நாவல்களில் வெவ்வேறு விதமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் திரைப்பட வசனமாக வரும்போது நீட்டிமுழக்காமல் தெறிக்கவிடுவது போல சொல்ல அவருக்குத் தெரியும்.

“அபிராமி அந்தாதி நூறு பாட்டு கத்துகிட்டேல்ல..அபிராமிக்கு லெட்டர் எழுதனுங்கற..ஏன் எழுதக் கத்துக்கக்கூடாது”

“அபிராமி உள்ள இருக்கு..எழுத்தெல்லாம் வெளில இருக்கு”

இதில் அபிராமி உள்ள இருக்கா என்பதாக இல்லாமல் உள்ள இருக்கு...என்பது திட்டமிட்டு எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன். 

“நீ மறுபடியும் கார் திருடினியா?”

“இல்ல..கதவ மாத்திரம் திறந்து விட்டேன்”

குணா படத்தினை ஒவ்வொரு முறையும் பார்க்கையில் பாலகுமாரனின் மேல் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதுவதே ஒரு கஷ்டம். புத்திசாலித்தனமான, பிடிவாதமான மனநல பாதிப்பு உள்ள ஒருவருக்கு எழுதுவதென்பது கயிற்றுக்கு மேல் நடப்பதற்கு சமமானது. கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மை போய்விடும்.

“கண்மணி அன்போட காதலன்...நாக்கு தடிச்சு போச்சா?”

என்று தொடர்பில்லாமல் அதே நேரம் தொடர்போடும் பேச வேண்டும்.

மற்றொன்றும் என் அனுமானம். ஒரு நடிகருக்கு முக்கியமானது எந்த இடத்தில் வசனத்துக்கு இடைவெளி விடவேண்டும் என்பது. ஒருவருக்கு பதில் கூறும் முன்பு இடைவெளி விடுகிறார் என்றால் நாம் என்ன சொல்லப்போகிறார் என்று கூர்ந்து கவனிப்போம். அப்படி இடைவெளிக்குப் பின் சொல்லப்போகிற வசனம் கூர்மையாக வலிமையாக இருக்க வேண்டும்.

பாலகுமாரனின் வசனங்களை சரியாக புரிந்து கொண்டு பேசிய நடிகர்களாக கமல், ரகுவரன், ரஜினியை சொல்ல முடியும். சில நேரங்களில் வசனத்துக்கு பதிலாக சிறு உடலசைவில் வெளிப்படுத்தி விட முடியும். 

“இது தீப்பெட்டி..கீழே போட்டா கீழே விழும்..நீயும் அப்படித் தான் சாதாரண மனுஷன்..உன்னால மேலே பறக்கவே முடியாது”

என்றதும் குணா அதே தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை உரசுவார்..நெருப்பு மேலே எழும்..” இது தான் நான் என்பதை சைகையில் காட்டுவார். “தீப்பெட்டி கீழ விழும்..ஆனா அதே தீப்பட்டியில் உரசின தீக்குச்சியோட நெருப்பு மேலே எழுந்து நிக்கும்..நான் நெருப்புடா” என்று பக்கம்பக்கமாகப் பேசியிருந்தால் அந்தக் காட்சி இப்போது வரை நினைவில் நின்றிருக்காது.

ஒருமுறை மட்டுமே பாலகுமாரன் அவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். தன்னை கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் வரும் என்றார். அப்படியெனில் அவர் குணா கதாபாத்திரத்துக்கு எழுதும்போது எப்படியான மனநிலையில் இருந்திருப்பார் என்று யோசித்து  பார்க்கிறேன்.

வெகுஜன இலக்கியமும், தீவிர இலக்கியமும் அவரைத் தவறவிட்டதை விட திரைப்பட உலகம் அவரை நிச்சயம் இழந்துவிட்டது. அந்த வெறுமையை இன்னும் எந்த எழுத்தாளரும் நிரப்பவில்லை என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்ல முடியும்.

-ஜா.தீபா

Saturday, 13 May 2023

மனித முகம்



மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மீண்டும் உருவாகாமல் எப்போதும் தனித்துவமாகவே உருவாகின்றன?

பரிணாம வளர்ச்சியின் தேவையால் இது நிகழ்வதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களை போலன்றி மற்ற உயிரினங்கள், தம் சக உயிரினங்களை அதிசயக்கத்தக்க பல வழிகளில் வேறுபடுத்தி அறிகின்றன.

எடுத்துக்காட்டாக, பென்குயின் பறவைகள் உருவத்தால் பெரும் வேறுபாடுகள் கொண்டவையில்லையெனினும், தத்தம் தனித்துவமான குரலோசையால் மற்ற பென்குயின்களை கண்டறிகின்றன. நாய்கள், தம் அதீதமான மோப்பத்திறனால் மற்ற நாய்களை அறிகின்றன. மனிதனின் உருவ வேறுபாடுகள் வியக்கத் தக்கவை. 700 கோடி மனிதர்கள் 700 விதமான முகங்கள். ஒத்த இரட்டையர்களின் மரபணுக்கள் ஒத்திருந்தாலும் உருவத்தில் வேறுபட்டு விடுவர். சிறு வேறுபாடுகளை கவனிக்கத் தவறுவதாலேயே நம்மால் வேறுபாட்டை அறிய முடிவதில்லை.

The Biology of belief நூலின் ஆசிரியர் முனைவர்.லிப்டன் அவர்கள் கூறுவதைப்போல், ஒவ்வொரு புறக்காரணி மட்டுமின்றி ஒருவரின் நம்பிக்கையும் அவர் தம் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். உலகின் எந்த மனிதனுக்கும், புற, அகக்காரணிகள் ஒன்றாக இருப்பதில்லை

உடலின் ஒவ்வொரு உயிர் அலகும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உயிரலகும் புற, அகக்காரணிகளால் பாதிக்கப்படும்போது ஒவ்வொன்றும் நுண்ணிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, பலகோடி செல்களிலான உடல் எனும் பெரிய அளவில் பெரும் மாற்றத்தை வெளிக்காட்டுகிறது.

எனது ஆசிரியர் ஒருவர் கூறும்போது, சிறு பிழை எவ்வாறு பெரும் பிழையாய் மாறுமென்பதற்கு எடுத்துக்காட்டாய், நிலவிற்கு ஒரு பொருளை நேர்கோட்டில் அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் கோணத்தில் 0.0000000001 பாகை பிழை ஏற்பட்டாலும், அது நிலவை அடைய முடியாது. ஏனெனில், அந்த பிழையின் அளவுடன், நிலவின் தூரத்தை பெருக்கும்போது வரும் கோணம், நிலவை விட்டு அந்த பொருளை, வெகு தொலைவில் விலக்கி விட்டிருக்கும். அவ்வாறே, நுண்ணிய அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெரிய அளவில் பூதாகர மாற்றமாக இருக்கும்.

அடுத்த முறை நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உலகின் தனித்துவமான உருவத்திற்கு சொந்தக்காரரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை!

-படித்தது

கூலிட்ஜ்


கூலிட்ஜ் என ஒரு ஜனாதிபதி அமெரிக்காவை ஆட்சி செய்து வந்தார். மிக மிக அமைதியானவர். யாரிடமும் பேச மாட்டார். 
ஒருவர் கூலிட்ஜிடம் வந்தார்.. 
- ஜனாதிபதி அவர்களே..உங்களை இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச வைப்பேன் என என் நண்பர்களிடம் பந்தயம் கட்டி இருக்கிறேன்
ஜனாதிபதி அமைதியாக சொன்னார்
- நீ தோற்றாய்... (   u  lost )

இதுவே  தமிழில்  சொல்லி இருந்தால்  தோத்துட்டியே  என  ஒரே  வார்த்தையில்  சொல்லி  இருக்கலாம்  ..  you தேவையில்லை

நன்றி;கோகுல்பிரசாத்



இளமைக்காலத்தின் மகிழ்ச்சிகரமான பொழுதுகள் யாவும் மாயப்பொய்களால் நிரம்பியவை. அப்போது நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவை அனைத்தும் பிற்கால வாழ்வின் குரூர யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கோ முகத்தில் அறையும் நடைமுறை உண்மைகளைச் சமாளிப்பதற்கோ கிஞ்சித்தும் உதவுவதில்லை. நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும் பயிற்றுவிக்கப்பட்டதும் பயனற்றுப் பொருளிழந்துவிடுகின்றன. வெறும் பொய்கள், பொய்கள், பொய்கள்! நிகழ்காலத்தின் உண்மைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் எப்போதும் இளமையை நினைவுகூர்கிறோம். ஏனெனில் பொய்யைவிட வசீகரம் மிக்கது ஏதுமில்லை.

- Of Human Bondage, சோமர்செட் மாம்.

என்.சொக்கன்


ஆங்கிலத்தில் ‘Room for improvement’ என்றொரு பயன்பாடு உண்டு. அதாவது, மேம்படுத்துவதற்கான இடம். எந்தவொரு படைப்பும் மிகச்சிறந்ததாக, கச்சிதமானதாக அமைந்துவிடுவதில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம், அவ்வாறு மேம்படுத்தியபின்னும் அது முழுமையடைவது இல்லை, இன்னும் இன்னும் மேம்படுத்தலாம். அதற்கு அங்கே இடமுண்டு, நமக்கு மனமிருந்தால்.

-என்.சொக்கன்

Friday, 12 May 2023

பூபாலன்


காற்றில் அலையும் சொற்கள்!

தேவையற்ற 
தேவை என்றாகிவிட்ட
அலைபேசியில்
அன்றாடம் ஏதேனும்
சங்கடம்...

பெரியப்பா செத்துப்போன
இரவில்
விவரம் தெரியாத நண்பன்
அடுத்த மாதப் பொங்கலுக்கு
இனிப்பான வாழ்த்துக்கள்
அனுப்புகிறான்.

அலுவல்களின்
மும்முரங்களிலும்
பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது
தவறான அழைப்புகளுக்கு.

கடன் தருவதாகச்
சொல்லும் முகம்
பார்க்காமல்
நட்புறவாகும்
பெண்களைச் 
சபிக்க வேண்டியதாயிருக்கிறது.

மருத்துவமனை
பிணவறையிலும்
கேட்க நேரிடுகிறது
புதுப்படப் பாடலின்
ரிங்டோனை.

இத்தனைக்கு இடையிலும்...
'பத்திரமா வந்துட்டேன்ப்பா'
தனித்து வெளியூர் சென்ற
மகளின் குரல் கேட்கையில்
வரமாகிவிடுகிறது அலைபேசி

- இரா.பூபாலன்

Thursday, 11 May 2023

Talcum powderTalc எனப்படுவது, நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சிலிக்கேட் என்ற வேதிப்பெயர் கொண்டதொரு மென்மையான கனிமம். இது படிவுப்பாறை வகையை சேர்ந்த பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமம். இதன் அமைப்பு ஒன்றின் மீது ஒன்றாக நழுவும் தாள்களைப் போல் இருப்பதால், இதன் மென்மைத்தன்மைக்கு காரணமாகிறது.இதன் வேதி வாய்ப்பாடு H₂Mg₃(SiO₃)₄ ஆகும். இது உயர்ரக வழுவழுப்பான தாள்கள் செய்தல், ரப்பர் தயாரித்தல், வழுவழுப்பான தரைகள் அமைக்க பயன்படும் செராமிக் ஓடுகள், ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது. உயர் வெப்ப நிலைகளில் இயங்கும் இயந்திரங்களில் எண்ணெய்களை உயவுப்பொருளாக பயன்படுத்த இயலாது. எனவே, அந்த சூழ்நிலைகளில், இது உயவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.பொருட்களின் கடினத்தன்மை மோ அளவீட்டில் அளக்கப்படும். மோ அளவீட்டில் வைரம் அதிகபட்ச கடினத்தன்மையான 10 ஐ கொண்டிருக்க டால்க்கின் மோ அளவு 1. எனவே, அதன் மென்மைத்தன்மையை அறியலாம்.-படித்தது

தாவளம்


மாட்டுத் தாவளம் - என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி 'மாட்டுத் தாவணி' - ஆகியிருக்க வாய்ப்புள்ளது.

தாவளம் > தாவளி > தாவணி.

மாடுகளை விற்பனை செய்யும் சந்தை மாட்டுத் தாவளம் எனப்பட்டது.

யானைகளைக் கட்டி விற்பனை செய்யப்பட்ட சந்தைக்கு யானைத்தாவளம் என்று பெயர். (கோவை மாவட்டத்தின் 'வேலந்தாவளம்' (வேழம் = யானை) என்ற ஊரின் பெயரும் இப்படி வந்ததே! (3000 ஆண்டுகள் பழமையான - கோவை வேலந்தாவளம், குமிட்டிபதி )

அக்காலத்து வணிகர்கள் விற்பனை செய்யும் பண்டங்களை மாட்டு வண்டிகளிலேற்றி ஊரூராகச் சென்று வியாபாரம் செய்வர். அவ்வணிகர்கள் தங்கி இளைப்பாறிய இடங்கள்' தாவளம்' எனப்பட்டது.

தாவளம் = வணிகச் சந்தை, வணிகம் நடைபெறும் இடம், வணிகர்கள் தங்குமிடம் என்று பொருள். இன்றைய Lodge / Lodging என்ற சொல்லுக்கு ஒப்பானது.

நெடுஞ்சாலைகளில் வணிகர்கள் தங்கிச்செல்லவும், அங்கேயே வணிகம் செய்யவும் உள்ள தங்குமிடங்கள் தாவளங்கள் எனப்படும்

-படித்தது

Wednesday, 10 May 2023

ஜெயமோகன்


செயலின்மை ஒரு வகையான சேறு. அது மனிதனை அமிழ்த்தி வைத்துக்கொள்ளும். மனம் செயலற்றுக் கிடக்கையில் மகிழ்ச்சி  என்பது இருக்காது. ஆனால் அப்போது துயரம் எடை கூடிக்கொண்டே இருக்கும். செயல்வழியாக அமையும் நேர்நிலையான உளச்செயல் இல்லாத நிலையில் துயரை, கசப்பை பெருக்கிக்கொண்டு அந்த வெறுமையை நிரப்பிக்கொள்கிறார்கள்

-ஜெயமோகன்

Tuesday, 9 May 2023

என்.சொக்கன்


தன்னுடைய சிந்தனைக்கோணம் ஒன்றுதான் சரி என்கிற மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும்.

 'Walk in Others' shoes' என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, அடுத்தவர்களுடைய செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்துபார்ப்பது; அவர்களுடைய கோணத்திலிருந்து சூழ்நிலையை உணர்வது.

-என்.சொக்கன்

ஜே.கே


“தேடுங்கள் கண்டடைவீர் என்கிறார்கள். முதலில் எதையும் தேடாதீர்கள். ஒன்றைத் தேடினால் அதை மட்டுமே உங்களது மனக்கண் கண்டுகொள்ளும். இது தேடல் எல்லையைக் குறுக்கும் செயல். மற்ற உன்னதங்கள் பார்வையில் தட்டுப்படாது போகும். மனத்தைத் திறந்து மட்டும் வைத்திருங்கள்.”

-ஜே.கிருஷ்ணமூர்த்தி.

Sunday, 7 May 2023

படித்தது


“எதாவதொரு செயல்பாட்டின் மீது பித்துகொள்ளுங்கள். அதில் தொடர்ந்து ஈடுபடுங்கள். இவ்வாழ்வின் பொருளென்ன என்பதை யாராலும் கண்டறிய முடியாது. அது முக்கியமும் அல்ல. உலகை உய்த்தறிய செயல் ஒன்றே வழி. எந்தச் செயலில் நீங்கள் ஆழ்ந்து சென்றாலும் அது சுவாரஸ்யமானதாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அதில் சிறந்து விளங்குங்கள். கடினமாக உழைத்திடுங்கள். அந்த ஒற்றைச் செயலுக்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து மற்ற விஷயங்களுக்குக் குறைந்த அளவு கவனத்தை மட்டும் கொடுங்கள். ஏனெனில், ஒன்றில் ஆழ்ந்து மற்றதில் கோட்டைவிட்டு விட்டால் உங்கள் மனம் விரும்பும் ஒன்றைச் செய்ய இந்தச் சமூகம் அனுமதிக்காது. ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுத்த செயலில் சிறந்து விளங்க வேண்டுமெனில் மற்ற கடமைகளை முற்றிலுமாக ஒதுக்கிவிடாமல் மினிமமாக வைத்துக்கொள்ளுங்கள்.”

- Surely You're Joking, Mr. Feynman!, Richard Feynman.

பீட்டர் பிரில்


தன்னை உணரவும் தன்னம்பிக்கை வளரவும் சில வழிமுறைகளை பீட்டர் பிரில் கூறுகிறார்..

*தன் உணர்ச்சிகளை புரிந்துகொள்வது

*தன் சூழலை முழுமையாய்ப் பார்ப்பது

*மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது

*வாழ்வின் பாதையைத் தீர்மானிப்பது

*தீர்மானித்தபடி வாழ திறமைகளை வளர்ப்பது

**ஒவ்வொரு காலகட்டத்திலும் விளைவுகளை பரிசீலிப்பது

ஆலிஸ்


“ நான் எந்த வழியாகப் போக வேண்டும் ?” 
அதிசய உலகில் ஆலீஸ் கேட்டாள்
“அது நீ எங்கே போக வேண்டுமென்று நினைக்கிறாயோ அதைப் பொருத்தது.”
பூனை சொன்னது.
----”அதிசய உலகில் ஆலிஸ்” -- லூயிஸ் காரல்

Saturday, 6 May 2023

அரிஸ்டாடில்


கோபம் கொள்வது 
எந்த மனிதனும் செய்யக்கூடிய
மிக எளிதான செயல்தான்.
ஆனால்,
சரியான நேரத்தில்,
சரியான நபரிடம்,
சரியான காரணத்திற்காக 
கோபப்படுவது 
எளிதான செயல் அல்ல...!!

-அரிஸ்டாட்டில்

என்.சொக்கன்


’இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா? ஒரே விஷயத்தைச் சொல்வதற்கு ஏன் இரண்டு சொற்கள்?

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘கட்டுரைக் கசடறை’ (என்னவொரு அற்புதமான தலைப்பு!) என்ற நூலைப் படிக்கும்போது, இல்லை, அல்ல என்கிற இரு சொற்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பது புரிந்தது: 

ஒரு பொருளின் இன்மையைக் குறிக்கும்போது ‘இல்லை’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும். உதாரணம், ‘கோயிஞ்சாமியிடம் கெட்ட குணங்கள் இல்லை.

’ ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு, இதுவும் அதுவும் வெவ்வேறு என்று சொல்லும்போது ‘அல்ல’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும். உதாரணம், ’கோயிஞ்சாமி கெட்டவன் அல்ல.’

 இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ’அல்ல’ என்பது அஃறிணைக்குதான், உயர்திணைக்குக் ‘கோயிஞ்சாமி கெட்டவன் அல்லன்’ (அல்லது) ‘கோயிஞ்சாமி கெட்டவர் அல்லர்’ என்று எழுதவேண்டும்

-என்.சொக்கன்

Thursday, 4 May 2023

கற்கை நன்றே-30*மணி


ரயிலின் முகப்பு விளக்கு

இதிலிருந்து எப்படினே வெளிச்சம் வரும்னு கேட்பது போலதான் பல முறை ஸ்டேசனில் நுழையும் ரயிலை பார்த்திருக்கிறேன்.

அந்தக்காலத்து டார்ச் லைட்டில் ஆன் செய்ததும் ஒளி சிதறலாய் ஒளிரும். அட்ஜெஸ்ட் செய்த ரிப்ளக்டரில் பட்டு பின் நேர்கோட்டில் குவிந்து நீளமாய் குச்சி போல் ஒளி முன்னே செல்லும்.பின் லென்சு வந்தது.

ட்ரெயின்ல பயன்படுத்துற பல்பு 200 முதல் 350 வாட்ஸ் சக்தி உள்ளது.
அந்த பல்பானது மிகப்பெரிய ரிஃப்ளெக்டர் டூமுக்கு நடுவுல முன்னும் பின்னும் நகர்வது போல ஒரு அட்ஜஸ்ட்மென்ட் உண்டு.

ட்ரெயின் ஸ்டேஷனுக்கு உள்ள வர சமயத்துல அந்த பல்பு ரிஃப்ளெக்டரை ஒட்டி போகும்.
ட்ரைவர் அட்ஜஸ்ட் பண்ணிக்குவார்.அதனால வெளிச்சம் பரவி சிதறலா தெரியும்.
அதுவே ஸ்டேஷன விட்டு வெளியே செல்லும் சமயம் வெளிச்சம் நீண்ட தூரத்துக்கு செல்லும்படியாக வெளியில் போகும் .

அந்த ரிஃப்ளெக்டர் டூம் மிகக் குறுகலா பல்போட எல்லா வெளிச்சத்தையும் உள்வாங்கி ,நீளமா கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சிதறல் இல்லாமல் நீண்டு போகும்.

அது டிரைவரோட பார்வை திறமையை மேலும் கூட்டும்.
இப்போ நிறைய முன்னேற்றமானதுனால சின்ன அளவிலான பல்பு மற்றும் டூம் அசெம்பிள் செய்தே பலநூறு மீட்டருக்கு வெளிச்சம் பளிச்சுன்னு அடிக்குறமாதிரி இருக்குது.

-படித்தது

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

என்.சொக்கன்


எதிரியோடு மோதுவதற்கு ஏற்ற இடத்தைக் கண்டுபிடிக்கும்வரை கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருங்கள் என்கிறார் திருவள்ளுவர் (குறள் 491). அதாவது, கண்ட இடத்திலிருந்து கல் எறியக்கூடாது, எங்கிருந்து எறிந்தால் எதிரிக்கு வலிக்கும், எது நமக்குத் தொலைநோக்கில் உறுதியான வெற்றி வாய்ப்பைக் (Strategic Advantage) கொடுக்கும் என்று ஆராய்ந்து தெரிந்துகொண்டு அங்கிருந்துதான் கல்லை எறியவேண்டும். அதுவரை கற்கள் நம் கையில்தான் இருக்கவேண்டும்.

அடுத்து வரும் 'எள்ளற்க' என்ற சொல் அதைவிட முக்கியம். அதாவது, தாக்குவதற்குச் சரியான இடம் கிடைக்கும்வரை எதிரியை இழிவாகப் பேசாதீர்கள் என்கிறார் வள்ளுவர்.

இதன் பொருள், கையைக் கட்டினால் போதாது, சரியான தாக்குதல் திட்டம் அமையும்வரை வாயையும் கட்டவேண்டும். சினத்தைக் கட்டுப்படுத்தாமல் 'உன்னை என்ன பண்றேன் பாரு' என்றெல்லாம் கத்திக்கொண்டிருந்தால் இரண்டு பிரச்சனைகள்:

1. நேரமும் ஆற்றலும் திட்டுவதில் செலவாகிவிடும், தாக்குதலுக்குத் திட்டமிடமுடியாது.

2. நம்முடைய கத்தலைக் கேட்டு எதிரி எரிச்சலடைந்து நம்மைத் தாக்கத் தொடங்கினால் திருப்பித் தாக்குவதற்குச் சரியான திட்டமோ இடமோ இல்லாமல் வெட்டவெளியில் சிக்கிக்கொள்வோம்

இது அரசர்களுக்கு எழுதிய குறள்தான். ஆனால், 'தாக்குதல்' என்பதை 'எதிர்த்துப் போட்டியிடுதல்' என்று மாற்றிக்கொண்டால் எல்லாருக்கும் பொருந்தும். அவ்வப்போது வாயை மூடாத பிழையால் நாம் சந்தித்த/சந்திக்கிற தொல்லைகள்தான் எத்தனை எத்தனை!

-என்.சொக்கன்

Tuesday, 2 May 2023

கற்கை நன்றே-29*மணி



1930 ஆம் ஆண்டில், சென்ட்ரல் அமெரிக்காவில், ஹோண்டுராவின் சோலுடெகா ஆற்றின் குறுக்கே, சோலுடெகா பாலம் கட்டப்பட்டது.

கடுமையான வானிலை மண்டல பகுதியில் அமைந்திருக்கும் இந்த பாலம், உலகின் மிகப் பெரிய கட்டிடக் கலைஞர்களால் சூறாவளிகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன பாலமாக இருந்தது.

1998 ஆம் ஆண்டில் மிட்ச்" சூறாவளி தாக்கியபோது மற்ற பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அழிக்கப்பட்டாலும், சோலுடெகா பாலம் தொடர்ந்து தாக்கு பிடித்து நின்றது. ஆனால்?

ஒரே ஒரு சிக்கல்…

சோலுடெகா அசையாமல், உறுதியாக, மாறாமல் - நின்றது. ஆனால், கடந்து வந்த நதி நகர்ந்துவிட்டது!

பாலத்திற்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டன. ஒரு காலத்தில் அதிநவீன கட்டுமானம், தற்போது புதிய சூழலுடன் ஒத்துப்போக முடியாது என்று ஆகிவிட்டது மற்றும் பயனற்றதாகி போனது.

வலுவான, உடைக்க முடியாத பாலம் எங்கும் செல்லாததால் யாருக்கு என்ன பயன்?

கீழே படத்தில் சோலுடெகா பாலம், ஹோண்டுராஸ்.

சோலுடெகா பாலம் இப்போது ஒரு சிறந்த அடையாளமாக உள்ளது. எதற்காக?

எல்லாருக்கும் இது ஒரு முக்கியமான பாடமாகிப்போனது.

நீங்களே, உங்களை வாழ்க்கை சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க சோம்பேறித்தனமாக இருந்தால், குண்டு சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு இருந்தால்… என்ன நடக்கும் என்பதற்கான அடையாளம்.

“ஒவ்வொரு அமைப்பும் ஒரு முடிவை பெறுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது”

இது நமது வாழ்க்கை முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாடப் புத்தகங்களை தவிர வேறு ஒன்றும் கற்று கொள்ளாமல் தற்போதைய கல்வி முறைகளில் மட்டுமே சிக்கித் தவித்து, எதற்கெடுத்தாலும் குறை மட்டுமே சொல்லி கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதை காட்டுகிறது.

We wants to create best solution for the problem, whereas problem itself might change.

சோலுடெக்காவைப் போலவே, உலகெங்கிலும் உள்ள பல வியாபாரங்கள், கல்வி முறைகள் ‘வெறும் பாலம்’ ஆகிவிட்டது.

நீங்கள் வெறும் பாலமாக இருக்கக் விரும்புகிறீர்களா?

முன்னெப்போதையும் விட இப்போது நமக்கு தேவை - தேடி சென்று கற்றல்.

Build to last தற்போது இல்லை. Build to adapt என்பது தான் நிஜம்.

இனிய காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

அகிலா


அலைபேசியில் விட்டுவிட்டுக்
கேட்கிறது உன் குரல்
விடாமல் பரிதவித்து வந்து விழுகிறது
என் பதில்..
இப்படித்தான் அனுமானத்தில்
சரிசெய்யப்படுகிறது
காதல் அலைவரிசை

-அகிலா

pay it forward

ஆங்கிலத்தில், 'Pay it forward' என்று ஒரு பயன்பாடு உண்டு. அதாவது, உங்களுக்கு ஒருவர் நன்மை செய்கிறார் என்றால், நீங்கள் அவருக்கு எந்தப் பதில் நன்மையும் செய்யவேண்டியதில்லை, அதற்குப் பதிலாக, அதேபோன்றதொரு நன்மையை இன்னொருவருக்குச் செய்துவிடவேண்டும். இதை எல்லாரும் தொடர்ந்தால் உலகில்
தீமையைவிட நன்மை பெருகும் என்பது ஓர் எளிய கணக்கு.

-என்.சொக்கன்

கலீல் ஜிப்ரான்


மரணம் குறித்த பயத்தைப் பற்றி கலீல் ஜிப்ரான்:

கடலுக்குள் நுழைவதற்கு முன்பு  ஒரு நதி பயத்தால் நடுங்குகிறாள். அவள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தாள். மலை உச்சிகளில் இருந்து, காடுகளையும் கிராமங்களையும் கடக்கும் நீண்ட வளைந்த பயணம். இப்போது அவள் முன் ஒரு பெரிய கடலை பார்க்கிறாள். கடலுக்குள் நுழைந்தால் என்றென்றும் நதியாகிய தான் மறைவதைத் தவிர வேறு வழியேதுமில்லை..

ஆனால் வேறு வழியில்லை. நதி திரும்பிச் செல்ல முடியாது. யாரும் திரும்பிப் போக முடியாது. திரும்பிச் செல்வது இருப்பில் சாத்தியமற்றது. நதி இந்த அபாயமான செயலை செய்ய வேண்டும். அதாவது கடலுக்குள் நுழைவது.  ஏனென்றால் அப்போதுதான் நதிக்குத் தெரியும் இது கடலில் மறைந்து போவது அல்ல, ஆனால் தானும் ஒரு கடலாக மாறுவது என்று.

அது போலத்தான், நம் வாழ்க்கை என்ற ஆறு, மரணம் என்ற கடலுடன் கலப்பதும். எனவே மரணம் குறித்து கவலை கொள்வதை விடுத்து, வாழ்க்கையை ரசித்து,  பிற  உயிர்களுக்கு உதவிகரமாக வாழுந்து, பிறகு மரணம் என்னும் பெரும்கடலில் பேரானந்தமாய்க் கலப்போம்.