அழுகை என்பது மகிழ்ச்சியை விட ஆழமானது போல.
மிகப்பிடித்தவர்கள் அழவைத்து செல்கிறார்கள்.அவர்கள்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாட்டில் அழுகையைப்போல நம்மை திருப்தியடையச் செய்வதும் வேறில்லை.
அழும்போது நாம் சராசரி ஆகிவிடுகிறோம்.பாரம் இழந்த இலை காற்றில் மிதந்திறங்குவது போல நமது தன்னிரக்கத்தின் மீது லேசான உடலாய் வீழ்கிறோம்.
தன்னிரக்கம் என்பது நமது பால்யத்திலிருந்து நாமே சேகரித்துக்கொண்ட நமது சிறுவயது புகைப்படங்கள்போல.
அங்கே நம்மைத் தேற்றுகின்ற தூதனுக்கு நம் முகமே இருக்கிறது.
தீவிர வைராக்கியங்கள் பிறக்கின்ற அழுகைகள் இருக்கின்றன.அவை கதவுகளை அறைந்து சாத்துபவை.பிறகு,இருளில் வியர்வையில் தனிமையில் நம்மை விட்டுச்செல்பவை.
இன்னும் சில அழுகைகள் விடுதலை தருபவை.அவை உறவில் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.அவற்றிற்கு அழுகை என்றுகூட பெயரிட முடியாது.
சாவிற்கு முன் தரப்படும் ஆழ்ந்த முத்தத்தைப்போல.அங்கே எந்த சூளுரைக்கும் வேலையில்லை.
ஆனால் இனியொருபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு மழைக்காலம் அங்கே நிகழ்வதேயில்லை.
கண்ணீரைத் துடைத்தபடி செல்கின்ற மனிதர்களைப் போல
ஆழமானஉணர்வு ததும்பிய, அழகியமுகங்கள் வேறெங்குமில்லை.
இப்போதுதான் எழுதிமுடித்த சிறுகதையின் மை உலராத கடைசிவார்த்தை அவர்கள்.
-திருச்செந்தாழை
No comments:
Post a Comment