ஒட்டகம்
-அ.முத்துலிங்கம்
இக்கதை சோமாலியா நாட்டில் நடக்கிறது. நிலவும் கொடுமையான தண்ணிர் கஷ்டத்தில் தவிக்கும் மைமுன் என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மைமுன் தினமும் அதிகாலையில் எழுந்து பதினாறு மைல் தூரம் நடந்து தண்ணீர் கொண்டுவருகிறாள். அந்தக் காரியம் அவளை மிகவும் சோர்வடைய வைக்கிறது.
ஐ.நா. சிறகம் அவர்கள் ஊருக்கு வந்து என்ன வசதி வேண்டும் என்று கேட்டபோது பெண்கள் ஆழ்துழாய் கிணறு வேண்டுமென்கிறார்கள். ஊர்த் தலைவரான அவள் தகப்பனார், “மசூதியைக் கட்டித்தா மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்” என்று சொல்கிறார். அவ்வளவு நிதியை ஒதுக்க முடியாத ஐ.நா. சிறகம் இதனால் பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுகிறது. இந்நிலையில் தினமும் தண்ணீர் எடுக்கவரும் அவளை அலிசாலா விரும்புகிறான்.
அவளோ பக்கத்து ஊரைச்சேர்ந்த ஐம்பது வயது கிழவனை மணக்கச் சம்மதிக்கிறாள். திருமணமும் நடக்கிறது. ஊருக்கு போகும்போது அவள் அழுகிறாள். விருப்பப்பட்டுத்தானே திருமணம் செய்துகொண்டாய் இப்போது ஏன் அழுகிறாய் என்று அவள் தாயார் காரணம் தெரியாமல் கேட்கிறாள். அதற்கு அவள், “பக்கத்து ஊரில் தண்ணீர் குடம் குடமாக வருகிறதாம்.
பதினாறு மைல் நடக்கத்தேவையில்லையாம். அதனால் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று சொல்கிறாள்.
இந்தக் கதைக்கும் ஒட்டகம் என்ற தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? ஒட்டகம் பல நாள் தண்ணீர் அருந்தாமல் வாழக்கூடிய ஒரு பிராணி. தேவையான போது தண்ணீரை மொத்தமாகக் குடித்துக்கொள்ளும். அதே போல் மைமுன், தன் வாழ்க்கை முழுமைக்குமான தண்ணீரை இந்தத் திருமணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள்.
தினமும் தேவைப்படும் தண்ணீரைப் பற்றிய கவலையைவிட இது எவ்வளவோ மேல் என்று அவளுக்குத் தோன்றிவிடுகிறது. மேலும் ஒட்டகம் முள்ளை விரும்பிச் சாப்பிடும். அதுபோல் அவளும் அந்தக் கிழவனுடடான திருமணத்தை, முள்ளாக இருந்தபோதிலும், விரும்பி ஏற்றுக்கொள்கிறாள்.
No comments:
Post a Comment