மிகவும் சிறிய நாவல்.
இரண்டே பாத்திரங்கள்தான். நிறைமாத கர்ப்பிணியான பன்றி, அதனை வளர்க்கின்ற கிழவன்.
காட்டுக்குள் காணாமல்போய்விடுகிற அந்த பன்றியைத் தேடிச்செல்கிற கிழவனின் ஓரிரவு அனுபவத்தை ஓவியம்போல சொல்கின்ற மொழி.
குறிப்பாக, ஒரு மாபெரும் முயற்சிக்குப் பிறகும் தோல்வியையே அடைந்துவிடுகிற ஒருவரது மனவோட்டங்களை மிகையின்றி வெளிப்படுத்துகின்ற விதத்திலும்,
நம்பிக்கைக்கும்,அவநம்பிக்கைக்கும் நடுவே மனிதன் திகைத்து நிற்கின்ற கணத்தில் தன்னைத்தானே அவன் தட்டி நிமிர்த்துக்கொள்ள தனது பழைய நினைவுகளை, அதன் வெற்றிகளை ஒரு சூத்திரம்போல ஆக்கி வைத்திருக்கின்ற மனதின் கைவைத்தியத்தையும் இந்த சிறிய நாவல் ஒரு ஈட்டியின் முனையால் எழுதப்பட்டதைப்போல எழுதிச்செல்கிறது.
"வெயில் சூரியனிடமிருந்து வருகிறது. நிலவொளி சந்திரனிடமிருந்து வருகிறது. பின் இருள் எங்கிருந்து வருகிறது? ஒருவேளை இருளுக்கு பிறப்பு,இறப்புகள் இல்லைபோல.அது எப்போதும் இருக்கும்போல"
தீவிர யுத்தத்தைப்போல கடந்துசென்றுவிட்ட இரவிற்கு பிறகு, தனது செயல் அனைத்திலும் தோல்விகண்ட கிழவன் மயக்கமாகி புல்வெளியில் கிடக்கிறான்.அவனது உள்ளம் மட்டும் சிதைபோல எரிந்துகொண்டிருக்கிறது.அப்போது அவன் எண்ணிக்கொள்வதாக ஒருவரி வருகிறது.
"உருவமுள்ள எனது உடல் உயிரில்லாததுபோல தோல்வியில் துவண்டு விழுந்துகிடக்கும்போது,
உருவமில்லா உள்ளம் புல்வெளியில் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருக்கிறது '
அழுதுகொண்டே உறங்கிவிடுபவர்கள் கண்களை கசக்கியபடி, மற்றொரு புதிய தினத்தின் மீது எழுந்தமரும்போது
வருகின்ற இறந்தகாலத்தின் இருள்படியாத அந்த புதிய கண்களை இரவு திரும்பவும் தந்துசெல்வதைப்போல,
ஒருவனது தோல்வியினூடே அவனை அகவிசாரணைகளின்வழியே சலித்து, தூய்மைப்படுத்தி திரும்ப தனது நிலத்திற்கு அனுப்புகின்ற இந்த சிறிய நாவலின் வாசிப்பனுபவம் மிக அந்தரங்கமானது.
அவன் காட்டை வென்றான் - கேசவரெட்டி.
NBT வெளியீடு.
நன்றி திருச்செந்தாழை
No comments:
Post a Comment