Thursday, 14 December 2023

janakiraman


ஏகம் சத் விப்ரா : பகுதா வதந்தி

"ஏகம் சத்" - உண்மை ஒன்று தான். "விப்ரா" - அதனை அறிந்தோர்கள், "பகுதா வதந்தி" - பலவாறாக கூறுகிறார்கள் என்பது வேத வாக்கியம். அந்த உண்மை என்பதை, பரம்பொருள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஒரு வரி, மிக ஆழமான, தத்துவார்த்த, ஆன்மீக  விளக்கங்களை தரும். இப்போது, எளிய புரிதலில் இந்த மந்திரம் சார்ந்த வாழ்வியல் உண்மையை பார்ப்போம். 

2+5 = 7 என வரும். 15 – 8 என்பதும் 7 என்ற விடையைத் தரும். அதே போல 21/3 என்பது 7 என்ற விடையைத் தருகிறது. கணக்கில் 7 என்ற விடையை பல வழிமுறைகளில் நாம் கண்டடைவது போல,  ஒரு பிரச்சனைக்கு பல வித "சரியான" தீர்வுகள் இருக்கமுடியும். 

அகிரா குரோசாவுடைய ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ரஷோமொன் (1950), ஒரே நிகழ்வை, அதில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொறுவரும் தத்தமது பார்வையில் முரணுடன் சொல்லுவதை மிக அழகாக பதிவு செய்திருக்கும்.

பல நேரங்களில், அலுவலகத்திலோ, குடும்பத்திலோ நான் சொல்வது சரி, நீ சொல்வது தவறு என்ற ஒற்றை மைய சிந்தனையால் தான் குழப்பம், ஈகோ ஏற்படுகிறது. உண்மையில், இருவர் கூறுவதுமே சரியாக இருக்கலாம். ஒரு உண்மை, இன்னொறு உண்மைக்கு எதிரானது இல்லை. இரண்டு கோணங்களில் இருந்து பார்ப்பதால் ஏற்படும் சிந்தனைகள். அவ்வளவு தான். 

"அனைத்தும் உண்மை" என்பதில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. அனைத்தும் உண்மை என்பதால் மட்டுமே அவை அனைத்தும் அறமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர், திருடிவிடுகிறார். நீ திருடினியா எனக் கேட்டால், ஆமாம் திருடினேன் என்று உண்மையைக் கூறுவதால் அவர் உத்தமனாகிவிடமாட்டார். உண்மை என்பது, அறத்தைக் கொண்டு கட்டமைக்கும் போது தான் அதற்கு மதிப்பு கிடைக்கிறது.

(மீள் பதிவு)

No comments:

Post a Comment