Sunday, 29 December 2024

புத்தகம் 40



Reading_Marathon2024
#24RM050

Book No:40/100+
Pages:-1000

வெளிக்காற்று 
-எழுத்தாக்கம் கமலாலயன் 
தொகுப்பாசிரியர்கள்
ச.தமிழ்ச்செல்வன். ஆ பரிமளா தேவி

இளம் வயதில் கற்கும் விழுமியங்களை தங்களது வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் ஏந்தி நடக்கின்றனர். அதன் வழியே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றில் பள்ளிகள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன, குழந்தை வளர்ப்பு என்பது குறித்தும், மாணவர்கள் அறிய வேண்டிய அறிய கருத்துக்களையும் கட்டுரை வாயிலாக இந்த புத்தகம் ஆரம்பிக்கிறது. இந்த புத்தகத்தின் அறிமுக உரையை ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் மிகவும் அழகியலுடன் எழுதியுள்ளது இந்த புத்தகத்திறகான சிறந்த வரவேற்புரையாக கருதுகிறேன். தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளியின் 31 கட்டுரைகள் நிறைந்த பெரிய அறிவு கருவூலமாக புத்தகம் இருக்கிறது. 

தமிழர்கள் மொழியின் மீது ஆழ்ந்த பற்று உடையவர்கள். அதே வேளையில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது என்று கணினியிலும் நுழைந்து எட்டு திக்கிலும் பரவி நிற்கிறது. அவ்வாறான தமிழ் மொழியின் சிறப்பையும் கணினியில் மொழிப் பொருளாதாரம் குறித்து விரிவாக அலசி இருப்பார் ஆழி செந்தில்நாதன். காலம் தோறும் பெண் கல்வி குறித்த படிநிலைகள் எவ்வாறு அமைந்தன. நவீன காலத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து வ.கீதா அவர்கள் விளக்கியுள்ளார்.

தாய் மொழி வழி கல்வி குறித்த அவசியத்தை எடுத்துரைக்கும் வசந்தி தேவி பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பேணி பாதுகாப்பது நவீன காலத்தில் கல்வி எவ்வாறெல்லாம் மாற்றமடைந்துள்ளது என்பதனை விரிவாக ஒவ்வொரு கனவுக்கும் ஒரு பாதையில் என்பதை விளக்கி இருப்பார். பெற்றோருக்காக படிக்கும் தலைமுறை உருவாகியது ஒரு அமெரிக்க சிறுகதை வாயிலாக ஜெயமோகன் சொல்லி இருப்பார். கிராமத்தில் இருக்கும் தன் தாய் நகரத்தில் இருக்கும் தன் தந்தையின் உதவியாளரான அவரிடம் பேக்கரியில் சேர்ந்து ரொட்டி சுடும் கலையை கற்று வருமாறு கூறுவார் ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தானே தொழில் துவங்கிய பெரிய பணக்காரர் ஆன பின்னும் அவர் ரொட்டி சுடும் கலையில் ஏன் சேரவில்லை என்று சொல்லுவார் ஒவ்வொரு முறையும் இது தொடரும் பது இறுதியில் ஜனாதிபதி ஆகி தன் தாயின் முன் நிற்பார் அப்போதும் அவர்..ஏன் நீ ரொட்டி சுடும் வேலைக்குச் செல்லவில்லை என்று தான் சொல்வார். அத்துடன் கதை முடிகிறது.சில அம்மாக்களின் அறியாமையும் இதுபோலத்தான் என்று சொல்கிறார்.

கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம் தான் மனிதர்களை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது. மொழியை பகிர்ந்து கொள்ளுதல் என்பது கற்றல் கற்பித்தலில் முக்கியமான படிநிலை.இந்த பகிர்வில் என்ன வருகிறதோ அதை கொண்டு தான் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் முயல வேண்டும் என்பதனை நாசர் அவர்கள் கற்றலின் இன்றியமையாமையில் கூறுகிறார்.

ஆங்கிலத்தில் ஹெவி என்று சொல்வதுண்டு. சிலருடன் பேசும்போது மிக லேசாக பறப்பதை போன்று உணர்வை அடைகிறோம். சிலர் வீட்டுக்கு வந்தாலே சுமை உணர்வை உணர்கிறோம். சிலர் எதிர் படும் போதே மனது பாரமாகி விடுகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே சென்று
 பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதுபோல் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக கல்லூரியில் மாணவர்கள் கணக்கு வகுப்பறையில் ஆசிரியர் சாக்பீஸை எடுத்துக்கொண்டு சென்று கரும்பலகை அருகில் நின்று அங்கே நில்லப்பா கணக்கு தானாக வரும் என்று நம்பிக்கை ஊட்டிய ஆசிரியரை மாடசாமி சிலாகித்து casual learning  ஐ போற்றுகிறார்.

நெடுந்தோறும் முன்சென்று நில் நேற்றை மற, இன்றை மற நெடுந்தோறும் சென்று முன் நின்று மூச்சை விடு 
கண் திறந்து பார் 
காட்சி படிமத்தை கண் முன் நிறுத்து அந்த நொடியில் அங்கு இரு 
எங்கிருக்க விரும்புகிறாய் 
அங்கு ஓர் அடிக்கோடிடு 

 தேடல் கால இயந்திரத்தின் செயல்பாட்டை கண்முன் நிறுத்தும் விதமாக ஆர். பாலகிருஷ்ணன் முன்னிறுத்திய கவிதை ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய கனவு ஆகும் அதுவும் எதிர்கால கனவு.

இந்த காலத்தில் எல்லாமே காம்படிஷன் கண்டஸ்ட் போட்டி பந்தயம் இவைதான் இலக்கு. இவை எதுவாயிருந்தாலும் அவரவர் பிள்ளைகள் தான் வெற்றி பெற்று கோப்பைகள் சான்றிதழ்கள் பரிசு பொருள்களுடன் வர வேண்டும் என்பதே பெற்றோரின் கனவு. இது இன்றைய டிஜிட்டல் யுகத்தின் முதன்மையான பிரச்சினையாக ஆகிவிடுகிறது. முதல் ராங்க், முதல் பரிசு, நம்பர் ஒன் என்று எப்போதும் நமது குழந்தைகள் முதல் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட கீழே இறங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். இன்னொரு தரப்பினர் எதுவும் தெரியாமல் ஆசைப்பட்டது திறமை என்று அடிப்படையில் சிலர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் என்று சிவபாலன் இளங்கோவனும் உளவியல் ரீதியான மாணவர்களின் மனநிலையை சொல்லியிருக்கிறார்.

ஒரு பள்ளிக்கு முக்கியமான தேவையை கட்டிடங்கள் வகுப்பறைகள் மைதானங்கள் மட்டுமல்ல அவை ஒரு கல்வியின் பகுதியே ஆசிரியர்களே கல்வியின் விளை நிலம் ஆவார்கள். குழந்தைகளைப் புரிந்து கொண்டு நேசிக்கிற நேசிக்க கற்றுத் தருகிற ஆசிரியர்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அவர்களின் மொழி வழியே உரையாடும்போது தான் அவர்களை சிந்திக்க வைக்க முடியும். கற்பது எவ்வாறு என்பதை சொல்லித் தரும் இடம் தான் பள்ளிக்கூடம் என்று நான் படித்திருக்கிறேன்.

எஸ் ஆர் வி பள்ளியில் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் உரையாற்றிய ஆளுமைகளின் கட்டுரைகளை தெரிவு செய்து நமக்கு இந்த தொகுப்பாக சொல்கிறது. இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே கல்வியின் அவசியத்தையும் நவீன கால கல்வியின் மாற்றத்தையும் வாசிப்பின் நோக்கத்தையும் அங்குலம் அங்குலமாக நமக்குச் சொல்கிறது.

ஒவ்வொரு கட்டுரைகளும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் கருத்து வளம் மிக்க கருத்துக்களும் மேற்கோள்களும் சொந்த அனுபவங்களும் நம்மை இன்னும் வாசிப்பு இன்பத்தை நுகர செய்கின்றன. புத்தகத்தை படித்து முடிக்க ஏறத்தாழ ஒரு 20 நாட்கள் ஆகின. தொடர்ந்து வாசித்ததில் மட்டுமே சாத்தியமானது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment