Reading_Marathon2025
#25RM055
Book No:8/100+
Pages:-528
அவள்
-லா.ச ராமாமிர்தம்
பன்னிரண்டாம் வகுப்பு படித்த முடித்தவுடன் நூலகத்துக்கு முதன்முறையாக நுழைந்தபோது கண்ணில் பட்டது தன் லாசரா அவர்களின் புத்தகம்.
முதல் இரண்டு, மூன்று பக்கங்கள் படித்தவுடன் அவரின் எழுத்து நடை எனக்கு பிடிபடவில்லை, வைத்து விட்டேன். இருப்பினும் மீண்டும் முயன்று பார்க்கலாம் என்று படித்த போது தான் அந்த சொற்களின் லாவகம் சொற்களின் அடியாளத்தில் வரும் அந்த அர்த்தங்களின் தரிசனம் எனக்கு கிடைத்தது. அதன் பின் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் லா.ச.ரா அவர்களின் எழுத்தினை படிக்க ஆரம்பித்து விடுவேன். மலையாள படங்களைப் போல பொறுமையாக நகரும் அவருடைய எழுத்து நடையில் உள்ளார்ந்த நோக்கினால் ஒரு தெய்வீகத்தின் தரிசனம் கிடைக்கும். இந்த புத்தகத்தில் பெண்மையை உயர்வு செய்யும் விதத்தில் அவருடைய அனுபவங்களை நாவலாக்கி கொடுத்திருப்பார்.
அனுபவங்களின் நீட்சியில் ஒரு பெரிய வாழ்க்கை கதையாக படர்ந்துள்ளது
லா.ச.ராமாமிருதம் எழுதிய 'அவள்' என்ற தனித்துவமான நாவல்.பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களைக் மையமாகக் கொண்டு, அவர்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றை மிக நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்துள்ளார்.
சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புகளாகவே வெளிவந்துள்ளன.
பேத்தியின் வருகைக்காக காத்திருக்கும் தாத்தா அவர்கள் வந்தபின் நடக்கும் பாசம் ஆகியவை சொர்க்கவாசல் என்ற முதல் பகுதியில் சிறுகதை போல் சொல்லி இருப்பார். அம்மாவின் உணர்வுகளை மகன் சொல்வதாக இரண்டாவதாக பகுதி அமைந்துள்ளது.ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் "ஆம் நினைத்துப் பார்ப்பது என்பது சுருதி மீட்டல் தானே. சிந்தனையின் இசைவில், சிந்திக்கும் விஷயங்கள். அவைகளின் சூட்டின் அவசரமும் ஆத்திரமும் பின்னோக்கில் தணிந்து தன் இடத்தில் விழுந்து அமைதி பெற்று விடுகின்றன" இதில் அம்மா அவளைப் பற்றி நான் எண்ணும்போதெல்லாம் அவளை எண்ணாத நாட்களே இல்லை என்கிறார்.
தனக்கு பிறந்தநாள் பரிசாக தன்னுடைய குலதெய்வத்தின் புகைப்படத்தை நண்பர் அனுப்பி இருந்தார் .அதை பார்க்கும் போதெல்லாம் அம்மாவின் நினைவு. அவர் எப்போது சாமி கும்பிடுவார்.. வேண்டுதல் இல்லாமல் வெறுமனே பார்த்து இருப்பது சாமியே நிற்பது போல இருக்கும் என்று தனது நினைவலைகளை பகிர்ந்து இருப்பார்.
மகனின் காதல் வாழ்க்கையை பற்றி சொல்லும் போது கவிதை உடன் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் பெற்றோருடையது
காதல் என்னும் புரையோட்டம்
காதல் எனும் துரோக நதி ஆனால் ஜீவநதி
காதல் எனும் வெண்ணீர் வீழ்ச்சி
அதன் தழும்பில் இருந்து மீள முடியாது
தன்னை அலசிப் பார்த்துக் கொள்கிறான். மனதை சாட்டையில் அடித்து கேட்கிறான். மனம் மருளுகிறது. உடலின் வேட்கை அன்றி இது மனம் துணைக்கு தவிக்கிறது. ஒரு பாதி குருதி சொட்ட தனிமையின் ஏக்கத்தில் நிற்கிறேன் என்று காதல் உணர்வினை சொல்லி மனதுக்குப் பிடித்தவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான் மது. அப்போது பெற்றோர் அவனை அவன் உணர்வுகளை மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போது காலில் விழும் மகனை தூக்கி விட்டு அழுகிறார். இது அழுகை இல்லை என் அழுக்குகள் கழுவப்பட்டு துல்லியமாகிக் கொண்டிருக்கின்றன என்கிறார் அப்பா. என்ன ஒரு கவித்துவமான முடிவு.
இவரது சிறுகதைகளில், பெண் கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களின் உள் உலகத்தை ஆழமாக ஆராயும் விதத்தில் கதைகள் அமைந்திருக்கும்.அவள்' என்ற தனிப்பட்ட பெயரை வைத்து ஒரு நாவல் எழுதவில்லை என்றாலும், அவரது படைப்புகளில் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் ஒரு தனி 'அவள்' என்றே அடையாளம் காணப்படுவார்கள்.
லா.ச.ரா.வின் பெண் கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான பண்புகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டிருப்பார்கள்.
பெண் கதாபாத்திரங்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். அவர்களின் மனதில் நிகழும் சிக்கலான உணர்வுகளை அவர் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகம் மீது பெரும் பொறுப்பை உணர்பவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.
பெண்களை எப்போதும் under estimate செய்யும் கணவன் அதை உடைக்கும் விதமாக கிராமத்து பெண்ணான அனு..தன்னுடைய வார்த்தையை ஒரு இடத்தில் உதிக்கிறார். மனுஷன் ஒற்றுமை வேற்றுமை என்கிறோமே ஆனால் உண்மையில் இரண்டுக்கும் என்ன பாரோமீட்டர் என கேட்கிறார் கணவன். மனம் என்ற ஒன்று இருக்கிறது. அதன் ஓட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஓட்டத்தின் படு ஆழத்தின் அந்தகாரத்தில் இருந்து எழுந்த களிப்புகளின் வெளித்தெறிந்த மட்டம் தானே நாம் போட்டுக் கொள்ளும் சண்டைகள் சமாதானங்கள் பூச்சிக்கள் மீண்டும் வெடிப்புகள் என்கிற மேலோட்டின் வித்தியாசங்கள் என்கிறார். இப்படி சொன்னவுடன் அவளின் கணவன் கிராமத்து பெண்ணாலே ஜட்டி பானை ஜெயிக்கத்தான் இஷ்டம் என்று சொல்லியவள் இப்போது இப்படியா என்று பெருமூச்சு விடுகிறான் கணவன்.
*புத்தியின் வளர்ச்சி இன்றியமையாத, ஓயாத கேள்விகள், சிந்தனையின் ஓயாத உறுத்தல். இந்த கேள்விகளுக்கு பதில் தேடலின் அடிப்படைக்கு ஆரம்ப அனுமானம் தான் தெய்வம்
*தெய்வம் இருக்கிறதோ இல்லையோ தெய்வீகம் நிச்சயம் உண்டு. தெய்வீகம் ஒரு அனுபவம். பிறவியின் உரிமை. ஆனால் அது எந்த சமயத்தில் எப்படி நேரம் இன்று முன்கூட்டி அறிய முடியாதது.
*சிந்திக்க சிந்திக்க அந்த அனுமான மண்டலம் அச்சத்தை தான் தருகிறது. அங்கே ஒரு வெறிச் இருக்கும் என்று நினைக்கிறேன்.
*வேடிக்கை பார். தெளிவு அவ்வப்போது கிடைப்பது போல் காட்டினாலும், உறுதிப்படுத்த உன்னையே அணுக வேண்டி இருக்கிறது. தெளிவிலிருந்து தோன்றும் புது மூட்டங்களில் புதைந்து வெந்து கொண்டிருக்கிறேன். தவம் என்பது இதுதானோ?
*உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலை.
*இப்போது ஒரு தனிமை இருக்கிறது. இது உணர்வு பெற்றதும் விளைவு. அதனை நான் அறிகிறேன்.
வாசிப்பின் மனநிலை மெலிதானதாக எல்லா இடங்களும் ஒரு தத்துவ வார்த்தைகளின் பின்னே பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். அன்றாட வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட தத்துவ வார்த்தைகளை உதிர்த்து வாழ்வின் எதார்த்தத்தை தனது வார்த்தைகளின் வழியே தாயம் உருட்டுவது போல் உருட்டி விளையாடி இருப்பார். இவரின் நேரடி அனுபவங்கள் நமக்கு வாழ்வு எல்லைகளை எளிதாக காட்டியிருப்பவை. கடின வார்த்தைகளுக்கும் புரிந்துணர்வை தனது அடுத்தடுத்த வார்த்தைகளின் வழியே விளக்கி இருப்பது சிறப்பு.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment