30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-12
பக்கங்கள் -568
நாள்-5
கிரண வாசல்
-தி.மு அப்துல் காதர்
பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் அனுபவங்களையும் தன் கவிதைகளையும் தான் படித்த விஷயங்களையும் சமூக மாற்றத்திற்கான கருத்துகளையும் உள்ளடக்கிய கட்டுரை தொகுப்பாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள 52 தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. மூடநம்பிக்கையை பற்றி சொல்லும் போது நாட்டின் சாமியார்கள் அதிகம் பெருத்து விட்டனர். அதற்கு தன்னுடைய நகைச்சுவை பாணியில் மூடநம்பிக்கை முற்றியதால் சாமியார்கள் கதவை திற காற்று வரட்டும் என்கிறார்கள். இவர்கள் மடத்தில் கதவைத் திறந்தால் காற்று வருவதில்லை பெண் வருகிறார் என்று எள்ளலுடன் கூடிய பார்வை நமக்கு முன் வைக்கிறார்.
ஒரு கட்டுரையானது புறவுலக எதார்த்தத்தின் விளைவாக அகத்தில் ஏற்படும் சந்தேகங்களை காட்சிகளை கேள்விகளை வெவ்வேறு தளங்களில் புதிய அனுபவத்தை ஒவ்வொரு கட்டுரை வாயிலாக நமக்கு தந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் பெண் இருப்பாள் அதாவது உணவுக்கு சுவையூட்டுவது உப்பு எங்காவது துருத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரிகிறதா? உணவின் அனைத்து அணுவிலும் உப்பு கரைந்து இருக்கிறது. அதுவே சுவையை தீர்மானிக்கிறது என்று புதிய வடிவத்தில் இந்த விளக்கத்தை நமக்கு தருகிறார்.
தை பிறந்தால் வலி பிறக்கும் என்ற கட்டுரையில் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமையும் விலைவாசி உயர்வும் விவசாயம் நிலங்கள் பாழ்படுவதையும் பற்றி குறிப்பிடுகிறார் .அம்மா /அடுக்கு மூட்டு/ குளிராவது காய்ந்து கொள்கிறோம்/ என்ற இளம்பிறையின் கவிதை மேற்கோள் காட்டி விவசாய குடும்பங்களில் இன்னும் வறுமை வாட்டிக் கொண்டிருப்பதை நமக்கு சொல்கிறார் .அதோடு விவசாயம் குறித்த கவிதைகளையும் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விவசாயிகளுக்கான போராட்டங்களையும் துயரங்களையும் சொல்லிவிட்டு மாட்டுப்பொங்கல் சில இடங்களில் மாட்டையே பொங்கல் வைத்து விடுகிறார்கள். மனிதர்கள் நாட்டையே பொங்கல் வைத்து விடுகிறார்கள் என்று ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் எள்ளளுடன் கூறுகிறார்.
நடைமுறை வாழ்க்கையில் மனித மதிப்பீடுகளில் பெரிய அளவில் வளர்ச்சிதை மாற்ற நிகழ்ந்து கொண்டிருக்கிறது .எல்லாமே சந்தைக்கான உற்பத்தியாக மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதனை நுகர்வோனாக மாற்றும் சக்தி வந்து விட்டது.மனிதனே சந்தையாகிப் போனான் என்று கூறுவார்கள். விளிம்பு நிலை மனிதர்களின் துயரங்களை நுணுக்கமான உரையாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.
குழந்தைகளுக்கு கற்பித்தல் நிகழ்வு எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதையும் குழந்தைகளை தற்காலத்தில் எவ்வாறு வளர்க்க வேண்டும் முறைகளையும் பற்றி கூறும் போது துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கடுமையாக நடத்தினால் மாணவர்கள் கற்க மாட்டார்கள் குழந்தைகளோடு குழந்தையாக மாறும் போது தான் கற்றுக் கொள்வார்கள் என்று கூறி உதாரணத்திற்கு கலியில் ஜிப்ரானின் கவிதை ஒன்றை சொல்லும்போது பெற்றோர்களுக்கான கவிதையாக அது அமைகிறது அது என்னவென்றால்
படுக்கையில் தூங்கும் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்ப தயவுசெய்து
முதுகில் அறைந்து எழுப்பாதீர்
கன்னத்தில் முத்தமிட்டு எழுப்புங்கள் என்று குறிப்பிட்டார். அகமும் புறமும் சுத்தமாக்கி அரும்புகளை அடைய அரும்புகளை ஆயத்தம் செய்வோம் என்று அந்த கட்டுரை முடிகிறது.
சுதந்திர இந்தியாவின் அரசு உருவானதற்கு முன்பே ஒரு நவ பாரதி சிற்பியாக விளங்கியவர் திப்பு சுல்தான். மதச்சார்பற்ற ஒரு அரசின் முன் வரைவு திட்டமாகவே அவரின் ஆட்சி விளங்கியது என்கிறார். திப்பு சுல்தான் தன் பிரதமர் அமைச்சராக பூரணைய்யா என்ற பிராமணரை நியமித்திருந்தார். இந்த நல்லிணக்க ஆட்சியை நீட்சியாக அடையாளமாக வேலூரில் இருக்கும் கோட்டை விளங்குகிறது. கோட்டைக்குள் திப்புவின் வாரிசுகளின் கல்லறை சதுக்கத்தில் அவர் பிள்ளைகளின் கல்லறைகளோடு பூரணைய்யாவின் மகளின் கல்லறையும் சேர்ந்து இருக்கிறது. இதனை படிக்கும் போது உண்மையில் புதிய செய்தியாக இருந்தது.
கஸல் என்ற அரபி பதத்துக்கு பொருள் பெண்களிடம் பேசுதல் காதல் மொழி பேசுதல் என்பது ஆகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் ஏற்படும் விரக வேதனை குறித்தும் பாடப்படும் ஒரு பாவினம் தான் கஸல். முதல் இரண்டு அடிகளுக்கு மத்தலா என்றும் இறுதி இரண்டு அடிகளுக்கு மக்தா என்றும் பெயர். 15க்கும் குறைவான அடிகள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் மொழி அமைப்பு பூரணமாக இருக்க வேண்டும் தரமற்ற சொற்கள் இருக்கவே கூடாது. இந்த இலக்கண விதிகளின் படி கசல்கள் பாடியுள்ளனர். சிலர் அதனை உடைத்தும் வேறு பல விஷயங்களை சேர்த்து பாடியுள்ளனர். கஸல் கவிதைகளின் உள்ளடக்கம் மனித காதல் மட்டுமல்லாது இறைநேய காதலும் பாடுபொருள் ஆகிறது என்பதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்
ஈசலுக்கு சிறகு முளைத்தது போல நம் வாழ்க்கை அவசர அவசரமாக போய்க்கொண்டிருக்கிறது. அதனை தீர்க்கதரிசனமாக அண்ணா அவர்கள் இன்றைய பொழுது இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் கரித்தாள் நகல்கள் ஆகிவிட்டனர். ஆம் கரித்தாள் நகல்கள் ஆகிவிட்டனர் ஆனால் அதிக பிழையுடன் கூடிய நகல்கள் என்று கூறுகிறார்.
ஒவ்வொரு கட்டுரைகளிலும் அறிய கருத்துக்களை மிக இயல்பான நடையுடன் மேற்கோள்கள் வாக்கியங்களை சொல்லியும் அந்த கருத்தினை முழுமையாக நம் மனதில் பதிய வண்ணம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment