#கற்கை_நன்றே_114
"சேமிப்பு"" என்பது
மூன்று வீதமாக இருக்க வேண்டும்
'சோறு' -- இன்றைய தேவை...
'அரிசி' -- நாளைய தேவை...
:விதை நெல்' -- எதிர்கால தேவை...
சமீபத்தில் நாஞ்சில் நாடனின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். தமிழ் ஆர்வமும் ஆழமும் உடைய அவரின் எழுத்துக்களில் உள்ள தமிழாராய்ச்சி மெய் சிலிர்க்க வைக்கும். அப்படித்தான் உபநெல்லும் ஊரையும் கட்டுரை காணக் கிடைத்தது.
உப என்னும் வடமொழிச் சொல்லானது ஒரு adverbial prefix. உப பயன்படுத்தப்பட்ட சொற்கள் பலவுண்டு நம்மிடம்.
உபக்கிரகம் என்றால் ஒரு கிரகத்தைச் சுற்றி ஓடும் சிறுகிரகம். அதாவது Satellite.
உபக்கிராமம் என்றால் உட்கிடைக் கிராமம். Hamlet, dependent Village.
உபகதை என்றால் கிளைக்கதை அல்லது கட்டுக்கதை.
உபகுரு என்றால் உதவியாசிரியர்.
உபசந்தி என்றால் சந்திக்கு சற்று முந்திய காலம்.
உபசீவனம் என்றால் பிறரைச் சார்ந்து வாழ்தல்.
உபதாது என்றால் பொன் முதலாய் ஏழு தாதுக்களைப் போலத் தோற்றம் உடைய மதிப்புக் குறைந்த ஏழு உலோகங்கள்.
உபதாளம் என்றால் ஐந்து சிறு தாளங்கள்.
உபநதி என்றால் பெரிய நதியில் வந்துவிழும் ஆறு.
உபபத்திரம் என்றால் இலைக்காம்பின் பக்கமுள்ள சிறிய இலை,
உபபலம் என்றால் துணைப்படை. மூல பலம் எனில் மூலப்படை
பாண்டவர் என்பவரை அறிவோம். அவர்தம் வாரிசுகளை உபபாண்டவர் என்பார்கள். எடுத்துக்காட்டுக்கு அபிமன்யு, அரவான்... ' பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பொருள்களில் 'உப' எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகளில், உபநெல் என்றொரு சொல் இல்லை. எந்த நெல்லை எவ்வாறு பாதுகாத்து வைத்தாலும் அறுவடை நேரங்களில் சற்று வீணாகும்.ஒரு வேளை தரிசடிக்க,காலா காலத்தில் மழை கிடைக்காமல் போனால். ஒரே உழவாக உழுது தரிசிலேயே விதைத்து விடுவார்கள்.
அவ்வாறு நெல் முளைக்கும் போது களையும் முளைக்கும்.அதை கட்டாயம் களைய வேண்டும்.சம்பா என்பது நான்கு மாதப் பயிர்.வாசறுமிண்டான் நெல் ஆறுமாசப்பயிர்.சம்பா பயிர் முளைத்து அறுவடைக்கு தயாராகும்போது முந்தைய அறுவடையின் எச்சமான வாசறுமிண்டான் பூவும் உடன் முளைத்திருக்கும்.எனவே சம்பா அறுவடையின் போது.. வாசறுமிண்டான் நெல்லையும் களையுடன் சேர்த்து பிடுங்கிவிடுவார்கள்.அதை களை என சொல்லாமல் உபநெல் என்கின்றனர் விவசாயிகள்.
நெல் போலத் தோற்றம் கொண்ட 'ஊரை' என்பதை களை என்கின்றனர்.நெல்லின் முனை ஓரஙகுல ஊசி போல நீண்டு நின்றால் அது ஊரை.இது கனமற்று..மனதில்லாமல் விளைந்தது போல் இருக்கும். காய்ந்தும் காயாமலும் சந்தைக்கு வரும் கருவாட்டை 'ஊரைக் கருவாடு', என்பார்கள்.நாட்டுப் புறத்தில் இங்கு கேட்டு அங்குச் சொல்பவனை ஊரை என்கின்றனர்.' ஊரை ஊரைக்கெடுக்கும், ஓட்டப்பம் வீட்டைக் கெடுக்கும்' என்றொரு சொலவமும் உண்டு.
உபநெல் என்பது சற்றுக் கரிசனத்துடன் பார்க்கப்படும் பயிரோடு வளரும் இனம் எனில், ஊரையோ பகையோடு பார்க்கப்படும் இனம்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment